அண்மைய செய்திகள்

recent
-

பண்டிகைக் காலத்தில் அவதானமாக இருக்குமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தல்

 நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளும் 24 மணிநேரமும் சேவைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதுடன், விசேட வைத்தியர்கள், வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள், நோயாளர்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். 


ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், புத்தாண்டு காலத்தில் பொதுமக்கள் தமது பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். 

குறிப்பாக வானவேடிக்கை மற்றும் பட்டாசு தொடர்பான நடவடிக்கைகளின் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறும், சிறுவர்கள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

கடந்த ஜனவரி மாதம் பட்டாசு விபத்துக்களில் ஓரளவு குறைவு காணப்பட்டதாகவும், அதே நிலையை இந்தப் பண்டிகைக் காலத்திலும் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். 

மேலும், பண்டிகைக் காலத்தில் வீதி விபத்துக்கள் அதிகரிக்கும் போக்கு காணப்படுவதால், பாதுகாப்பு குறித்து தீவிர கவனம் செலுத்துமாறு அறிவுறுத்திய வைத்தியர் சமில் விஜேசிங்க மேலும் தெரிவிக்கையில்: 

''அதிவேகமாக வாகனங்களைச் செலுத்த வேண்டாம், அது உங்களை மரணத்திற்கு அருகில் கொண்டு செல்லும். எந்தவொரு காரணத்திற்காகவும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம். அதிக சோர்வு மற்றும் தூக்கமின்மையும் விபத்துகளுக்குக் காரணமாகின்றன, எனவே பயணங்களின் போது இது குறித்து அவதானமாக இருங்கள். 

அதேபோல், இந்தப் புத்தாண்டு காலத்தில் சுத்தமான உணவுகளை மாத்திரம் உட்கொள்ளுங்கள். அசுத்தமான உணவுகளை விற்பனை செய்ய வேண்டாம் என வியாபாரிகளுக்கும் நாம் அறிவுறுத்துகிறோம். வரட்சியான காலநிலையுடன் குடிநீர் பிரச்சினை காணப்படுவதால், சுத்தமான நீரை மாத்திரமே பயன்படுத்துங்கள். முடிந்தவரை நீரை கொதிக்க வைத்து ஆறவைத்து பருகுங்கள். 

நீண்டகால நோய்களுக்காக சிகிச்சை பெறுபவர்கள் மருந்துகளை உட்கொள்ள மறக்க வேண்டாம். பண்டிகைக் காலத்தில் இனிப்பு உணவுகள் அதிகமாக உட்கொள்ளப்படுவதால், உணவு முறைகளில் மாற்றம் ஏற்படும். எனவே நீரிழிவு, இதய நோய், சிறுநீரக நோய் உள்ளவர்கள் முறையாக மருந்துகளை எடுக்க வேண்டும். ஏனெனில் பண்டிகைக் காலம் முடிந்தவுடன் வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. எனவே உணவுப் பழக்கம் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருங்கள்'' எனத் தெரிவித்தார்





பண்டிகைக் காலத்தில் அவதானமாக இருக்குமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தல் Reviewed by Vijithan on April 13, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.