அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் வங்காலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கோரமாக படுகொலை செய்யப்பட்ட 10 ம் ஆண்டு இன்று

மன்னார் வங்காலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கோரமாக அன்று  09.06.2006 படுகொலை   செய்யப்பட்ட 10 ம் ஆண்டு இன்று

வங்காலை தோமஸ்புரி என்னும் இடத்தில் தந்தை, தாய், மகன், மகள் என நால்வர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர் .  இச் சம்பவம்  நிகழ்ந்திருக்கலாம் என நம்பப்பகிறது. இவர்கள் நால்வரும் வெட்டிக் கொல்லப்பட்டிருப்பதாக தெரியவருகிறது. இளம் தாய் தந்தையர் எட்டு வயது, ஆறு வயது சிறுவர் சிறுமியரே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.இதில் தந்தையும், மகனும் து}க்கில் தொங்கவிடப்பட்டிருந்தனர்.

மூர்த்தி மார்ட்டீன்(35) அவரது மனைவி மேரி மார்ட்டீன்(27), மகள் அன் லுக்ஷியா(09), மகள் அன் நிலக்ஷன்(07) ஆகியோராவர். 2002 சமாதான ஒப்பந்தம் கைச்சாத்தானதன் பின்னர் இந்தியாவிலிருந்து திரும்பி தமது ஊரில் வாழ்ந்து வந்த குடும்பம் என தெரிவிக்கப்பட்டிருந்தது

மேற்படிப் படுகொலைச் சம்பவம் பற்றித் தினக்குரலில் வெளிவந்த செய்தி கீழே






மேற்படிப் படுகொலைச் சம்பவம் பற்றித் அன்று  தினக்குரலில் வெளிவந்த செய்தி கீழே

மன்னார் வங்காலை தோமஸ்புரி கிராமத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை, இரு சிறுவர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மிகக் கோரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மன்னாருக்கு தென் கிழக்கே வங்காலை பத்தாம் வட்டாரத்திலுள்ள தோமஸ்புரி கிராமத்திலேயே ஒரு வீட்டில் இந்தக் கோரக்கொலைகள் இடம்பெற்றுள்ளன.

.படையினரே இந்த வீட்டினுள் நுழைந்து, வீட்டுக்காரரின் மனைவியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி மிகக் கொடுமையாகச் சித்திரவதை செய்த பின்னர் அனைவரையும் மிகக் கொடூரமாகக் கொலை செய்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் கொடூரச் சம்பவத்தால் வங்காலை மக்கள் மிகவும் விசனமடைந்திருப்பதுடன், குற்றவாளிகளைத் தங்களுக்குத் தெரியுமெனவும் அவர்களை உடனடியாக கைது செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வியாழக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் நடைபெற்ற இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது; இப் பகுதியில் கடந்த சில மாதங்களாக இடம்பெற்று வரும் அச்சமூட்டும் சம்பவங்களால், தோமஸ்புரி கிராம மக்களில் மிகப்பெரும்பாலானோர் இரவு நேரங்களில் வங்காலை புனித ஆனாள், தேவாலயத்திற்குச் சென்று தங்கிவிட்டு அதிகாலையில் வீடு திரும்புவர். எனினும், நேற்று படுகொலை நடந்த வீட்டைச் சேர்ந்தவர்களும் இவர்களது உறவினர்களான நான்கு குடும்பங்களும் வேறு ஒரு சில குடும்பங்களும் இரவு நேரத்தில் இடம்பெயராது தங்கள் தங்கள் வீடுகளிலேயே தங்குவர். இந்த நிலையில், நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை காலை நான்கு இராணுவத்தினர், கொலை நடைபெற்ற வீட்டை மையமாக வைத்து வந்து அங்கும் அருகிலிருந்த ஒரு சில வீடுகளுக்கும் மட்டும் சென்று அங்கு இருப்போர் பற்றி அறிந்து சென்றுள்ளனர். இதையடுத்தே வியாழக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர், தச்சுத் தொழிலாளியான மூர்த்தி மார்டின் (35 வயது) என்பவரது வீட்டினுள் நுழைந்தவர்கள் இந்தக் கொடூரப் படுகொலைகளையும் சித்திரவதைகளையும் புரிந்து விட்டுச் சென்றுள்ளனர்.

நேற்றுக் காலை ஏழு மணியாகியும் வீட்டிலிருந்த எவரும் வெளியே வராததால் பக்கத்து வீட்டிலிருந்த சகோதரி இவர்களது வீட்டுக்குச் சென்று முன் கதவைத் திறந்து பார்த்து அலறியுள்ளார். இவரது சகோதரி, வீட்டின் வரவேற்பறையில் ஆடைகள் அலங்கோலமான நிலையில் மேரிமெட்டலின் (சித்திரா 27 வயது) இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அப்பகுதியெங்கும் இரத்தம் உறைந்து போய்க் கிடந்தது. இவரது அலறல் சத்தத்தை ஏனையோர் அங்கு திரண்டு வந்து பார்த்தபோது, இறந்து கிடந்த பெண்ணின் உடலின் பல பகுதிகளிலும் பலத்த காயங்கள் காணப்பட்டதுடன் கூரான உளிகளால் குத்தி இவர் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. அத்துடன், இவர் கொலை செய்யப்பட முன்னர் சித்திரவதை செய்யப்பட்டதற்கான அடையாளங்களுமிருந்தன.

இதேநேரம், இவரது கணவரையும் இரு பிள்ளைகளையும் அங்கு தேடியபோது, அருகிலுள்ள அறையொன்றினுள் மூவரதும் சடலங்கள் சுருக்குக் கயிறுகளில் தொங்கிக் கொண்டிருந்தன. அறையின் தரையில் பெருமளவு இரத்தம் உறைந்து போயிருந்தது.

மாட்டின் இவரது பிள்ளைகளான ஆன் லக்ஷிகா (9 வயது - 3 ஆம் வகுப்பு மாணவி), ஆன் டிலக்ஷன் (7 வயது) ஆகியோரின் சடலங்களே, கயிற்றில் சுருக்கிடப்பட்டு வீட்டுக் கூரையில் தொங்கவிடப்பட்டிருந்தன.

இவர்களது உடல்களிலும் பல இடங்களிலும் உளிகளால் மிக ஆழமாக குத்தப்பட்ட பல காயங்கள் காணப்பட்டன.

இந்தச் சம்பவம் பற்றிய தகவல் அப்பகுதியெங்கும் காட்டுத்தீபோல பரவவே அங்கு வங்காலைக் கிராமத்தைச் சேர்ந்த நாலாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடியதுடன் அவர்கள் உணர்ச்சி வசப்பட்டும், கொந்தளித்தும் போயிருந்தனர்.

இது பற்றி அறிந்து மன்னார் மாவட்ட மேலதிக நீதிபதி ரி.ஜே. பிரபாகரன், மன்னார் ஆயர் வண. இராயப்பு ஜோசப், மாவட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எம்.பி. வினோ நோகராதலிங்கம், மன்னார் பிரதேச செயலர் திருமதி ஸ்ரான்லி டி. மெல், நானாட்டான் பிரதேச செயலர் என்.திருஞானசம்பந்தர், இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளென பெருமளவானோர் கூடினர்.

இதன்போது அங்கு கூடியிருந்த அனைத்து மக்களும், இராணுவத்தினரே இந்தக் கொடூரங்களைச் செய்ததாகவும் அவர்களைத் தங்களுக்குத் தெரியுமென கோஷமிட்டதுடன் வீட்டிற்கு வெளியே பல இடங்களிலும் காணப்பட்ட இராணுவச் சப்பாத்து அடையாளங்களையும் அங்கு கிடந்த இராணுவப் பொருட்கள் சிலவற்றையும் அனைவருக்கும் காண்பித்தனர்.

இதையடுத்து அனைத்து தடயப் பொருட்களையும் சேகரிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணைகளை மேற்கொண்டபின், சடலங்களை பிரேத பரிசோதனைக்குட்படுத்துமாறும் பணித்தார்.

இதேநேரம், இந்தக் கொடூரச் செயலால் ஆத்திரமுற்ற ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முனைந்ததால் அப்பகுதிக்கு பெருமளவு கலகத் தடுப்புப்பொலிஸாரும் இராணுவத்தினரும் கொண்டுவரப்பட்டு குவிக்கப்பட்டனர்.

எங்கும் பெரும் பதற்றம் நிலவிய அதேநேரம், தோமஸ்புரி மக்கள் கிராமத்திலிருந்து வெளியேறி வேறிடங்களுக்குச் சென்று கொண்டிருக்கின்றனர்.

தினக்குரல் .கொம்
மன்னார் வங்காலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கோரமாக படுகொலை செய்யப்பட்ட 10 ம் ஆண்டு இன்று Reviewed by NEWMANNAR on June 09, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.