இந்தியாவில் முதன்முறையாக கேரளாவில் ஜும்மா தொழுகைக்கு தலைமை தாங்கிய முதல் பெண் இமாம்
கேரள மாநிலத்தின் மலப்புரம் மாவட்டத்தில் இந்தியாவில் முதன்முறையாக பெண் இமாம் ஒருவர் ஜும்மா தொழுகைக்கு தலைமை தாங்கியதுடன் குத்பா பேருரையும் நிகழ்த்தியுள்ளார்.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்த ஜமிதா என்ற பெண் சில ஆண்டுகளுக்கு முன்னர் முஸ்லிம் மக்களிடையே பெண்களுக்கு சம உரிமை இல்லாததை கண்டித்து குரல் எழுப்பியதால் சில பெரியவர்களின் எதிர்ப்புக்கு இலக்கானார். அவருக்கு தொடர்ந்து மிரட்டல்களும் வந்தன. இதனால், அங்கிருந்து வெளியேறிய ஜமிதா, வேறு பகுதியில் உறவினர்கள் வீட்டில் அடைக்கலம் அடைந்தார்.
இந்நிலையில், குரான் சுன்னத் என்ற அமைப்பின் ஆதரவுடன் மலப்புரம் மாவட்டத்தில் நேற்றையை (26-1-2017) ஜும்மா தொழுகையை ஜமிதா இமாம் ஆக இருந்து தலைமை தாங்கி நடத்தினார். தொழுகைக்கு முன்னர் ‘குத்பா’ என்னும் மார்க்கப் பேருரையும் ஆற்றினார்.
இந்தியாவிலேயே ஜும்மா தொழுகைக்கு ஒரு பெண் தலைமை தாங்கி நடத்துவது இதுவே முதல்முறை என கருதப்படும் நிலையில் இச்சம்பவத்துக்கு ஆதராகவும், எதிராகவும் சமூக வலைத்தளங்களில் கருத்துகள் வெளியாகி வருகின்றன.
இதைப்பற்றி எல்லாம் சிறிதும் கவலைப்படாத ஜமிதா, ’ஆண்-பெண் இடையே பாகுபாடுகள் இல்லை. இருபாலருக்கும் சம உரிமை உண்டு என்பதை குர்ஆன் மிக தெளிவாக குறிப்பிடுகின்றது.இதைப்போன்ற தலைமை இடத்துக்கு பெண்கள் வருவதையும் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்படுவதையும் சில ஆண்கள் விரும்புவதில்லை’ என்று குறிப்பிடுகிறார்.
அமெரிக்காவை சேர்ந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர் ஆமினா வதூத் என்பவர் முன்னர் ஜும்மா தொழுகைக்கு தலைமை தாங்கி நடத்திய முதல் பெண்மணி என்று அறியப்பட்டார். அவரை முன்னோடியாக கருதி நான் இமாமாக இருந்து ஜும்மா தொழுகையை நிறைவேற்றியுள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் முதன்முறையாக கேரளாவில் ஜும்மா தொழுகைக்கு தலைமை தாங்கிய முதல் பெண் இமாம்
Reviewed by Author
on
January 28, 2018
Rating:
No comments:
Post a Comment