அண்மைய செய்திகள்

recent
-

தமிழகத்தில் இருந்து திரும்பும் அகதிகள் - உதவி வழங்க இலங்கையில் கோரிக்கை


தமிழகத்திலிருந்து இலங்கை திரும்பும் அகதிகளுக்கு விசேட செயற்திட்டங்களினூடாக அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டுமென இலங்கை நாடாளுமன்ற நிதிக்குழுவிடம் யாழ் மாவட்டச் செயலகத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் வரவு செலவுத் திட்டம் தயாரிப்பது தொடர்பில் நாடாளுமன்ற நிதிக்குழுவின் மக்கள் கருத்தறியும் கலந்துரையாடலொன்று நேற்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றபோதே மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கு மாகாணத்திலிருந்து லட்சக் கணக்கான மக்கள் இந்தியாவின் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்திருந்தனர். யுத்தம் முடிவடைந்து 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அவர்கள் மீளவும், இலங்கைக்கு திரும்பி வருகின்றனர்.இவ்வாறு கடந்த எட்டு வருடங்களில் யாழ் மாவட்டத்தில் மட்டும் ஆயிரத்து ஐநூறு பேர் வந்துள்ளனர்.

அதே போன்று வடக்கு மாகாணத்தின் பல இடங்களிலும் பல ஆயிரக்கணக்கானோர் வந்திருக்கின்றனர். ஆனாலும் தற்போதும் தமிழகத்தில் சுமார் எண்பதாயிரம் வரையிலான மக்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.அவர்களில் சுமார் பதினைந்தாயிரம் பேர் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாகவே காணப்படுவதாக யாழ் மாவட்டச் செயலக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஏனையவர்கள் வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களையும் கிழக்கு மாகாணத்தையும் சேர்ந்தவர்களாக காணப்படுகின்றனர்.

யுத்தத்தின் பின்னராக தமது சொந்த நாட்டிற்குத் திரும்பி வருகின்ற மக்களுக்கான அடிப்படைய வசதி வாய்ப்புக்கள் முழுமையாக ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என தமிழகத்திலிருந்து திரும்பிய மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கு வந்திருக்கின்ற 1500 பேருக்குமான அடிப்படை வசதிகள் இதுவரையில் முழுமையாக ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. இவர்களுக்கான அடிப்படை வசிதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் போதுமான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளவில்லை என்று யாழ் மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.


யுத்தம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி அயல் நாட்டில் அகதிகளாக வாழ்ந்த மக்கள் யுத்தம் முடிவடைந்த பின்னர் மீளவும் நாட்டிற்கு வந்திருக்கும் நிலையில் அவர்களுக்கான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து தேவைகள் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை என்று மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்திருகின்றனர்.

இதனால் தமிழகத்திலிருந்து தாயகத்திற்கு வந்து இங்கும் அடிப்படை வசிதிகள் இல்லாமல் அல்லலுற்றுக் கொண்டிருக்கின்றதாக கவலை வெளியிடுகின்ற மக்கள் தங்களுக்கான வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகின்றனர்.

ஏனெனில் தற்போது தாம் வந்திருக்கின்ற நிலைமைகளைப் பார்த்தே ஏனையவர்களும் நாட்டிற்கு மீளவும் வருவதற்கு தயாராக இருக்கின்றனர். எனவே அனைத்து மக்களும் இங்கு வந்து குடியேறுவதற்குரிய வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அரசின் நிதி ஒதுக்கீடுகளைச் செய்ய வேண்டும் என்றும் அந்த மக்கள் கேட்டுள்ளனர்.

அதற்கமைய அடுத்த வருட வரவு செலவுத் திட்டத்தில் தமிழகத்திலிருந்து தாயகம் திரும்புகின்றவர்களுக்கு விசேட செயற்திட்டங்களை வகுத்து அதிக நிதியை ஒதுக்க வேண்டுமென்று இலங்கைப் நாடாளுமன்ற நிதிக்குழுவிடம் யாழ்மாவட்ட செயலகம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இருந்து திரும்பும் அகதிகள் - உதவி வழங்க இலங்கையில் கோரிக்கை Reviewed by Author on September 04, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.