மன்னார்- நானாட்டானில் கழிவு நீருடன் கலக்கும் கடல் நீர் -
மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட சில கிராமங்களினுள் கழிவு நீருடன் கடல் நீரும் சேர்ந்து உட்செல்வதாக பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனிடம் முறையிட்டுள்ளனர்.
மக்களின் முறைப்பாட்டை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்று காலை குறித்த பகுதிக்குச் சென்றுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,
நானாட்டான் பிரதேச சபையின் உப தவிசாளரின் ஏற்பாட்டில் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட அச்சங்குளம் கிராம மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களுடன் அவசர கலந்துரையாடல் இன்று காலை நானாட்டானில் இடம் பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலின் போது அச்சங்குளம் பகுதியில் கழிவு நீருடன் கடல் நீரும் சேர்ந்து மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் வருவதாக அப்பகுதி மக்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
மேலும் அச்சங்குளம் கிராமம் தாழ்வான கடற்கரைப் பகுதி என்பதால் மழைக் காலங்களில் முருங்கன் உட்பட பல கிராமங்களில் இருந்து வரும் கழிவு நீரும் கடல் நீர் ஓடை வழியாக வரும் நீரும் வீதிகளை அரித்து வீடுகளுக்குள் சென்று விடுகிறது.
இதனால் நோய்த் தொற்றுக்கள் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளதோடு தென்னை மற்றும் பயன் தரும் மரங்களும் பாதிக்கப்படுவதோடு பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணித்தாய்மார்கள், முதியவர்களும் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே குறித்த விடயம் தொடர்பாக உடனடியாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் ஊடாக குறித்த பிரச்சினைக்கு தீர்வை பெற்று கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
மன்னார்- நானாட்டானில் கழிவு நீருடன் கலக்கும் கடல் நீர் -
Reviewed by Author
on
December 10, 2018
Rating:
No comments:
Post a Comment