இந்தியா – இலங்கைக்கிடையில் புதிய ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டம்! -
சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆட்கடத்தல் நடவடிக்கைகளை ஒழிப்பதில் இந்தியாவும், இலங்கையும் இணைந்து புதிய ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டமொன்றை முன்னெடுக்க இணக்கம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்திய பாதுகாப்பு செயலாளர் சன்ஜே மித்ரா இன்று ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தபோதே இது பற்றி கலந்துரையாடப்பட்டது.
பிராந்திய பாதுகாப்பிற்காக சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆட்கடத்தல் நடவடிக்கைகளை ஒழிப்பதில் இந்தியா மற்றும் இலங்கைக்கிடையிலான ஒத்துழைப்பின் மூலம் இணக்கப்பாட்டுடன் செயற்படுவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
மேலும் இலங்கை பாதுகாப்பு படையினருக்கு இந்திய அரசாங்கம் வழங்கும் பயற்சி குறித்து நன்றியை தெரிவித்த ஜனாதிபதி, இதனை மேலும் அதிகரிப்பதற்கு உதவுமாறும் கேட்டுக்கொண்டார்.
இந்த விடயம் தொடர்பில் இந்திய பாதுகாப்பு செயலாளர் கவனம் செலுத்தியுள்ளார்.
பாதுகாப்பு நடவடிக்கைகளில் இரண்டு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது குறித்தும் இது பற்றி தொடர்ந்தும் கருத்துக்களை பரிமாறிக்கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இச்சந்திப்பின்போது இணக்கம் காணப்பட்ட வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து இரண்டு நாடுகளினதும் பாதுகாப்பு செயலாளர்கள் இணைந்து கலந்துரையாடுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன, பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித்சிங் சந்து ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்தியா – இலங்கைக்கிடையில் புதிய ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டம்! -
Reviewed by Author
on
April 09, 2019
Rating:
No comments:
Post a Comment