அண்மைய செய்திகள்

recent
-

மன்னார்அரிப்பு பகுதி கடற்றொழிலாளர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு புதிய நிபந்தனைகள்


மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அரிப்பு கிராம மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு கடற்படையினர் தற்போது புதிய நிபந்தனைகளை விதித்துள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இம்மாதம் 14 ஆம் திகதி முதல் வீச்சு வலை, தங்கூசி வலை, சுருக்கு வலை போன்ற வலையினைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனால் மேற்படி வலைத்தொகுதிகளை பயன்படுத்தி மீன்பிடித்த மீனவர்கள் தொடர்ந்து அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அது மட்டுமன்றி கடலுக்குள் செல்லும் மீனவர்களுக்கு கடற்படையினரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "பாஸ்' நடைமுறையில் புதிய மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளனர்.
அண்மைக்காலமாக வழங்கப்பட்டு வந்த பாஸ், மீனவர் ஒருவர் ஒரு நாள் முழுவதும் அதனை வைத்துத் தொழிலில் ஈடுபட முடியும். ஆனால், தற்போது நடைமுறைப்படுத்தப்படுத்தியுள்ள புதிய பாஸ் நடைமுறையின் படி ஒரு நாளைக்கு மீனவர் ஒருவர் எத்தனை தடவை கடலுக்குச் சென்றாலும் அத்தனை தடவையும் கடற்படையினரிடம் சென்று பாஸ் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் உரிய நேரத்திற்கு தொழிலில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இது மட்டுமின்றி அல்லிராணிக்கோட்டை அமைந்துள்ள பகுதிக்கு மீனவர்கள் செல்ல முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளதுடன், தவறி அப்பகுதிக்கு செல்லும் மீனவர்களை கடற்படையினர் தாக்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
 காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை மட்டுமே கடலில் சென்று மீன் பிடிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நேரக் கட்டுப்பாட்டை மீறும் மீனவர்கள் மறுநாள் காலை கரை திரும்ப வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் புதிய கெடுபிடிகளால் மீனவர்கள் தொடர்ந்தும் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் இரவில் மீனவர்களுக்கு கடலில் திடீர் சுகவீனம் ஏற்பட்டால் கரைக்கு வரை முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.இதேநேரம் தென்பகுதியினைச் சேர்ந்த பெரும்பான்மையின மீனவர்களுக்கு எந்த நேரமும் அரிப்புக் கடலில் எவ்வித தடங்கலுமின்றி மீன்பிடிக்க கடற்படையினர் அனுமதி வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.யுத்தம் முடிவடைந்து நாட்டில் மீனவர்கள் எதுவித தடைகளும் இன்றி தமது தொழிலைச் செய்து வருவதாக அரசியல் வாதிகளும், அமைச்சர்களும் கூறிவரும் போது தமக்கு ஏன் இந்தக் கெடுபிடிகள் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மன்னார்அரிப்பு பகுதி கடற்றொழிலாளர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு புதிய நிபந்தனைகள் Reviewed by NEWMANNAR on April 18, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.