வடக்கு மாகாணத்துக்கு தேசிய திட்டமிடல் குழு; சபை அதிகாரங்களை பறிக்க முயற்சி
இது தொடர்பான கூட்டம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை பத்திர முல்லையில் உள்ள நகர அபிவிருத்தி அமைச்சின் செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
இதில் 2030ஆம் ஆண்டில் "ஆசியாவின் ஆச்சரியம் இலங்கை' என்ற திட்டத்தின் அடிப்படையில் வடமாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களைக் கையாள்வது தொடர்பான குழுவொன்று முன் மொழியப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணசபையின் பிரதம செயலர் தலைமையில் இந்தக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் 46 பேர் அங்கத்துவம் வகிக்கின்றனர்.
இதேவேளை, எதிர்கால அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக பிரதேசவாரியாக உபகுழுக்களையும் நியமிப்பதற்கு இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் குழுமூலம், வடக்கு மாகாணத்தின் நிர்வாக மையமாக மாங்குளத்தையும், கலாசார மையமாக யாழ்ப்பாணத்தையும், வர்த்தக மையமாக கிளிநொச்சியையும், துறைமுக நகராக மன்னாரையும் அபிவிருத்தி செய்யும் வகையில், திட்டங்கள் வகுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அவசர கலந்துரையாடலில் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் வீமல் வீரவன்ஸ, வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, வீடமைப்பு அமைச்சின் செயலர் விமலசிறி, தேசிய பெளதிக திட்டமிடல் திணைக்களப் பணிப்பாளர் ஜெயசேகர, வடக்கு மாகாணசபையின் செயலர் விஜயலக்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு மாதமே இருக்கும் நிலையில், வடக்கு மாகாண அபிவிருத்திக்குழு நியமிக்கப்பட்டுள்ளமை பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக வடக்கு மாகாண சபைக்கு கிடைக்கக்கூடிய அதிகாரங்களை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் கல்வி, சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புக்களை தேசிய திட்டமிடலுடன் இணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சுமத்துகின்றனர்.
வடக்கு மாகாணத்துக்கு தேசிய திட்டமிடல் குழு; சபை அதிகாரங்களை பறிக்க முயற்சி
Reviewed by Admin
on
August 19, 2013
Rating:

No comments:
Post a Comment