யாழ் ஊடகவியலாளர் இருவருக்கு இனந்தெரியாதோரால் அச்சுறுத்தல்! - மனித உரிமை ஆணைக்குழுவில் புகார்!
யாழ். தினக்குரல் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் அற்புதானந்தன் யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று திங்கட்கிழமை முறைப்பாடொன்றை பதிவு செய்தார்.
அம்முறைப்பாட்டில் பயங்கரவாத தடுப்பு பிரிவின் இரு உறுப்பினர்கள் தங்கள் பத்திரிகையில் சேவையாற்றும் இரு ஊடகவியலாளர்களான புனிதரூபன் மற்றும் தர்மபாலன் வினோஜித் ஆகியோர் தொடர்பான தகவல்களை பெறும் பொருட்டு இரு முறை தமது அலுவலகத்திற்கு விஜயம் மேற்கொண்டதாகவும் ஆயினும், பயங்கரவாத தடுப்பு பிரிவின் உறுப்பினர்கள் என உறுதி செய்வதற்கு போதியளவு ஆவணங்களை தங்களிடம் கொண்டிருக்காமையினால் தாம் ஊடகவியலாலர்கள் தொடர்பிலான தகவல்களை வழங்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ஆயினும் இந்நபர்கள் தற்பொழுது இவ்வூடகவியலாளர்களின் வசிப்பிடங்களிற்கு விஜயம் மேற்கொண்டு இவர்கள் தொடர்பிலான தகவல்களை திரட்டி வருகின்றனர் என பிரதம ஆசிரியர் தன்னுடைய முறைப்பாட்டு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இக்கடிதத்திற்கு பதிலளித்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு யாழ் கிளை, பயங்கரவாத தடுப்பு பிரிவு ஆரம்ப காலங்களில் கொழும்பை மையமாகக் கொண்டு செயற்பட்ட போதிலும் தற்பொழுது மாவட்ட ரீதியாகவே தங்கள் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர்.
இதன் காரணமாக அரசியற் செயற்பாட்டாளர்கள், மாணவ தலைவர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பாரிய அச்சுறுத்தல்களிற்கு முகம்கொடுக்க வேண்டி நேரிட்டுள்ளது.
மாகாண சபை தேர்தலின் பின்னர் யாழ்ப்பாணம் மற்றும் வன்னியிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினர், தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்கள் மீது தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை முன்னெடுக்கின்றனர்.
மேலும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர், மனித உரிமை ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் வடக்கு கிழக்கு விஜயத்தின் பொழுது அவரை சந்தித்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதும் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களை மேற்கொள்கின்றனர்.
அண்மையில் யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் பொங்குதமிழ் நிகழ்வுகளை ஒழுங்கு செய்த மாணவத் தலைவர்களை யாழ். நாவலர் வீதியில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் அலுவலகத்திற்கு விஜயம் செய்யுமாறு ஆணையிட்டதுடன், இம்மாணவ தலைவர்களுக்கு எதிராக ஆட்கடத்தல் அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டது.
பயங்கரவாத தடுப்பு பிரிவானது பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் நேரடி கண்காணிப்பின் கீழ் செயற்படுகின்றமையினால் அரசியற் செயற்பாட்டாளர்கள், மாணவ தலைவர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது நேரடியான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றது.
மேலும் மல்லாகத்திலுள்ள இளைஞர்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், இளைஞர் செயற்பாட்டாளர்கள் ஒன்றுகூடும் இடத்தின் மீது கைக்குண்டு தாக்குதலுத் அண்மையில் மேற்கொள்ளப்பட்டது.
இலங்கை இராணுவம் மற்றும் ஆதரவாளர்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்ட இளைஞர்கள் மீது போர் தொடுத்துள்ளனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.
யாழ் ஊடகவியலாளர் இருவருக்கு இனந்தெரியாதோரால் அச்சுறுத்தல்! - மனித உரிமை ஆணைக்குழுவில் புகார்!
Reviewed by Admin
on
October 01, 2013
Rating:

No comments:
Post a Comment