கொழும்பு தலைமன்னார் புகையிரத சேவை விரைவில் ஆரம்பம்
தலைமன்னார் பியர் மடு வீதி ரயில் போக்குவரத்துக்கான கட்டுமான வேலைகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற் கிணங்க எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் இவ் வேலைகள் பூர்த்தியடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முப்பது வருடங்களுக்கு முன் கொழும்பிலிருந்து தலைமன்னார் பியர் வரைக்கும் சேவையில் ஈடுபட்டு வந்த ரயில் சேவை வன்செயல் காரணமாக 1984 ம் ஆண்டிலிருந்து இச் சேவை மதவாச்சியிலிருந்து தலைமன்னார் பியர் வரைக்கும் இடை நிறுத்தப்பட்டது.
அத்துடன் வன்செயல் காரணமாக இப்பகுதியிலுள்ள தண்டவாளங்கள், புகையிரத நிலையங்கள் என்பன சேதமாக்கப்பட்ட நிலையில் காணப்பட்டன.
யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் கீழ் இர்க்கோ கம்பனி மதவாச்சியிலிருந்து தலைமன்னார் பியர் வரைக்கும் தண்டவாளங்களை, புகையிரத நிலையம் மற்றும் அதன் பாலங்கள் ஆகியவற்றின் கட்டுமானப் பணியை முன்னெடுத்து வருகின்றது.
இதற்கிணங்க மடுறோட் தலைமன்னார் பியர் வரைக்கான தண்டவாளங்கள் புகையிரத நிலையங்கள் மற்றும் பாலங்கள் ஆகியவற்றின் வேலைகள் தற்பொழுது துரிதமாக இடம்பெற்று வருகின்றன.
மேலும் மடுறோட் தலைமன்னார் தண்டவாளத்தில் அமைந்திருக்கும் 68 சிறிய பாலங்களின் கட்டுமானப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன. கட்டையடம்பன் மற்றும் மன்னார் கடலேரியில் உள்ள முக்கிய மூன்று பெரிய பாலங்கள் இன்னும் பூர்த்தி அடையாத நிலையில் தற்பொழுது வேலைகள் நடைபெற்று வருகின்றன.
முருங்கன் மாதோட்டம் திருகேதீஸ்வரம், மன்னார் தோட்டவெளி, பேசாலை, தலைமன்னார் மற்றும் தலைமன்னார் பியர் ஆகிய இடங்களில் புகையிரத நிலையங்களும், புகையிரத மேடைகளும் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
அதாவது மடுறோட்டிலிருந்து தலைமன்னார் பியர் வரைக்குமுள்ள 63 கிலோ மீற்றர் தூர புகையிரத கட்டுமானப் பணிகள் ஏப்பிரல் மாதத்துக்குள் முடிய கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதால் விரைவில் கொழும்பு தலைமன்னார் புகையிரத சேவைகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கொழும்பு தலைமன்னார் புகையிரத சேவை விரைவில் ஆரம்பம்
Reviewed by Admin
on
January 14, 2014
Rating:

No comments:
Post a Comment