தேர்தல் அறிவிப்பை வெளியிட்டார் ஜனாதிபதி
ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 3-வது முறையாக போட்டியிடுவதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இலங்கையில் அதிபரின் பதவிக்காலம் 6 ஆண்டுகளாகும். தற்போதைய அதிபரான ராஜபக்சே கடந்த 2005ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் திகதி , முதல் முறையாக அதிபராக பதவியேற்றார். கடந்த 2009ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுடனான இறுதி கட்டப்போரில் அரசுப்படைகள் வெற்றி பெற்றது.
இதைத்தொடர்ந்து அவரது செல்வாக்கு உயர்ந்ததால், அதிபர் தேர்தலை முன்கூட்டியே நடத்தினார். அதன்படி 2010-ம் ஆண்டு ஜனவரியில் நடந்த தேர்தலில் மிகப்பெரும் வெற்றி பெற்ற அவர், 2ஆவது முறையாக மீண்டும் அதிபரானார்.
இந்தநிலையில் அதிபரிடமே ஏராளமான அதிகாரம் இருக்கும் வகையில் அரசியல் சட்டத்தை அவர் மாற்றியமைத்தார். இதைத்தொடர்ந்து இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார துறைகளில் அதிபரின் குடும்பத்தினர் காலூன்ற தொடங்கினர்.
மேலும் 2 முறை மட்டுமே அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற வரைமுறையை நீக்கினார். இதன் மூலம் அதிபர் தேர்தலில் மீண்டும் களமிறங்க அவர் திட்டமிட்டார்.
இந்த காரணங்களால் அதிபர் மீதான அதிருப்தி மக்களிடம் அதிகரித்து வருகிறது. மேலும் ஆளும் கட்சியினரின் அராஜகங்கள், விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளால் அதிபர் ராஜபக்சேவின் செல்வாக்கு குறைந்து வருகிறது.
இது அங்கு சமீபத்தில் நடந்த உவா மாகாண தேர்தலில் எதிரொலித்தது. இந்த தேர்தலில் அதிபரின் ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி வெற்றி பெற்றாலும், வாக்கு சதவீதம் வெகுவாக குறைந்தது. இந்த தேர்தலில் ராஜபக்சே தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் அதிபரின் முக்கிய கூட்டணி கட்சியான தேசிய பாரம்பரிய கட்சி (ஜே.எச்.யு.) நேற்று முன்தினம் அரசில் இருந்து விலகியது. புத்த பிட்சுகளின் கட்சியான இந்தக்கட்சி விலகியதால், ராஜபக்சேவுக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை அரசியல் சட்டப்படி, ஆளும் அரசு 4 ஆண்டுகளை நிறைவு செய்தால் முன்கூட்டியே தேர்தல் நடத்த அதிபருக்கு உரிமை உண்டு. அதன்படி ராஜபக்சேவின் தற்போதைய பதவிக்காலம் நேற்று முன்தினத்துடன் 4 ஆண்டுகளை நிறைவு செய்தது.
இதைத்தொடர்ந்து அவர் முன்கூட்டியே தேர்தலை நடத்த அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இதை உறுதிபடுத்தும் வகையில் ராஜபக்சேவின் படங்கள் அடங்கிய சுவரொட்டிகள் இலங்கை முழுவதும் காணப்பட்டன.
அனைவரும் எதிர்பார்த்தது போலவே அதிபர் ராஜபக்சே நேற்று தேர்தல் அறிவிப்பை வெளியிட்டார். மேலும் 3-வது முறையாக தான் போட்டியிடுவதையும் அவர் உறுதி செய்தார்.
இது குறித்து அரசு தொலைக்காட்சியில் அவர் கூறும்போது, ‘நான் ஒரு ரகசியத்தை வெளிப்படுத்தியிருக்கிறேன். 3ஆவது முறையாக தேர்வு செய்யப்படுவதற்கான தேர்தல் பிரகடனத்தில் கையெழுத்து போட்டுள்ளேன். இது ஜனநாயகம் ஆகும்’ என்றார்.
அதிபரின் தேர்தல் அறிவிப்பு பிரகடனத்தை பெற்றுக்கொண்டதாக தேர்தல் ஆணையர் மகிந்தா தேஷபிரியாவின் அலுவலகமும் அறிவித்துள்ளது. மேலும் வேட்புமனு தொடர்பான நடவடிக்கைகள் உடனே தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி இந்த அறிவிப்பு வெளியான நாளிலிருந்து 16 மற்றும் 22ஆம் நாட்களுக்குள் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்ய வேண்டும். பின்னர் தேர்தல் பிரசாரத்துக்காக 28 நாட்கள் வழங்கப்படும். அதைத்தொடர்ந்து ஜனவரி தொடக்கத்தில் தேர்தல் நடத்தப்படும் என தெரிகிறது.
இந்த தேர்தலில் அதிபர் ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிடும் பிரதான எதிர்க்கட்சி வேட்பாளரின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்து உள்ளன.
இதைப்போல சமூக நீதிக்கான தேசிய அமைப்பை நடத்தி வரும் மதுலுவாவே சோபிதா என்பவர், ராஜபக்சேவை எதிர்த்து பொது வேட்பாளரை நியமிக்க எதிர்க்கட்சிகளை திரட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.
தேர்தல் அறிவிப்பை வெளியிட்டார் ஜனாதிபதி
Reviewed by NEWMANNAR
on
November 21, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 21, 2014
Rating:


No comments:
Post a Comment