பாராளுமன்றில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் உரை…
வடக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணியை தொடர்ந்தும் இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
இராணுவம் வடக்கிலும் கிழக்கிலும் பல்லாயிரக்கணக்கான காணிகளை தங்களுடைய தேவைகளுக்கு அபகரித்து வைத்திருக்கின்றது. வன்னி மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் 87 ஆயிரத்து 16 ஆயிரம் ஏக்கர் காணியை இராணுவம் பொலிஸ் கடற்படை அபகரித்திருக்கின்றது. அதிலே குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 34 ஆயிரத்து நூற்று 91 ஏக்கரும் வவுனியா மாவட்டத்தில் 30 ஆயிரத்து 780 ஏக்கரும் மன்னார் மாவட்டத்தில் 22 ஆயிரத்து 245 ஏக்கர் மொத்தமாக வன்னி மாவட்டம் வவுனியா மன்னார் முல்லைத்தீவு மாவட்டத்தில் 87 ஆயிரத்து 16 ஏக்கர் நிலங்களை இராணுவம் தங்களது தேவைக்கு அபகரித்திருக்கின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ஹசன் அலியும் பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.
முஸ்லிம் கிராமங்கள் அப்புறப்படுத்தப்பட்டு புதிதாக பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. சிங்களம் பேசத் தெரியாத 90 வீத மக்களைக் கொண்ட எமது பிரதேசத்திலுள்ள விவசாயிகள் தமிழ் தெரியாத உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள முடியாமல் தடுமாறுகின்றனர். மத்திய அரசாங்கத்தின் ஆளுமைக்குட்பட்ட குடியேற்ற உத்தியோகத்தர்கள் மற்றும் பீல்ட் ஓபீசர்ஸ் நியமனங்கள் இனரீதியாகவே எமது மாவட்டத்தில் நியமிக்கப்படுகின்றன. அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை,ஆலையடிவேம்பு, இறக்காமம், சம்மாந்துறை, நாவிதன்வெளி பிரதேசங்களில் 24 பேர் கடமையாற்ற வேண்டிய தேவையுள்ளது. ஆனால் மொத்தமாக 4 பேர் மட்டுமே கடமையாற்றுகின்றனர். தமிழ் பேசும் பிரதேசங்களில் காணிப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை இழுத்தடிப்பதற்கு மாவட்ட நிர்வாகமும் மத்திய அரசாங்கமும் ஆளணிக் குறைபாடுகளை வேண்டுமென்றே நீடித்து வைத்திருப்பதாக விவசாயிகள் எம்மிடம் முறையிடுகின்றனர். அதேவேளை சிங்களப் பிரதேசங்களில் பெரும்பான்மை பிரதேசங்களில் எவ்வித குறைபாடுகளும் இல்லாமல் ஆளணிகள் பூர்த்தியாக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கே.வேலாயுதம் சபையில் கருத்து வெளியிடுகையில்
எங்களுடைய தமிழ் மக்கள் மத்தியிலே இந்தத் திருமணத்தின்போது பெண்களுக்கு சீதனம் வழங்குகின்ற முறை இருக்கின்றது. இன்று வடக்கிலே அது மிகவும் அதிகமாக இருக்கின்றது. ஆனால் மலையகத்தைப் பொறுத்தமட்டிலே இந்த எண்ணங்களை இந்த அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு இந்த மக்களிடம் இருப்பதோ ஒன்றுமில்லை. தனது மகளுக்கு சீதனமாகக் கொடுப்பதற்கு. தங்க ஆபரணங்கள், காணிகள், வீடுகள், வீட்டுக்காணி போன்ற இன்னோரன்ன வழங்கப்படுகின்றன இந்தக் காலத்தில். இந்த மக்கள் தாங்கள் செய்கின்ற பரம்பரைத் தொழிலான கூடையும் இடுப்புக்களில் கட்டுகின்ற சேர்ட்டுக்களை கொடுக்கின்ற நிலையில்தான் இன்னும் வாழ்ந்து வருகின்றனர். இந்த நாட்டிலே பல ஆட்சிகள் வந்து போய் இருக்கின்றன. இந்த நாட்டில் 190 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்துவருகின்ற இந்த மக்களுடைய அடிப்படைப் பிரச்சினையான காணிப் பிரச்சினையை தீர்ப்பதிலே யாரும் முழுமையான அக்கறை செலுத்தியதாக நான் காணவில்லை.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனும் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டார்.
தளபதிகள் வழங்கிய கட்டளைகளை ஏற்று செயற்பட்ட அப்பாவித் தமிழ் இளைஞர்களே இன்று சிறைச்சாலைகளில் வாடுகின்றனர். ஆனால் அவர்களுக்கு இன்று கட்டளையிட்ட இன்று சுகபோகம் அனுபவித்துக்கொண்டிருக்கும் அமைச்சர்கள் அந்த அமைச்சுப் பதவிகளை வழங்கி இந்த அரசு பாலூட்டி வளர்க்கின்றது. நொடிக்கு ஒரு தடவை மனிதாபிமானத்தைப் பற்றியும் மனித சுதந்திரத்தைப் பற்றியும் பல்லவி பாடும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் எதிர்மறையான போக்கினை கடைப்பிடிப்பது வியப்பளிக்கின்றது. தமிழர்கள் வடிப்பதால் கண்ணீரிலும் அவர்கள் இனவாதத்தையே தேடுகின்றனர். புலிப்பல்லவியே மீண்டும் மீண்டும் பாடுகின்றனர். தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும். ஜனாதிபதி மனம் வைத்தால் ஒருநாளில் இதனைச் செய்து முடிக்க முடியும்.
பாராளுமன்றில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் உரை…
Reviewed by NEWMANNAR
on
November 23, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 23, 2014
Rating:


No comments:
Post a Comment