அண்மைய செய்திகள்

recent
-

புதிய அர­சாங்­கத்தை தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக கூட்டமைப்பே விளங்கும்: முன்னாள் எம்.பி. சிவ­சக்தி ஆனந்தன்


தென்னிலங்கையில் வரவிருக்கின்ற புதிய அரசாங்கத்தை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக கூட்டமைப்பே விளங்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளரும் முன்னாள் எம்.பியுமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.


வவுனியா, உள்வட்ட வீதியில் உள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் முதலாவது பிரச்சாரக் கூட்டத்தின் போதே இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து அங்கு கருத்து தெரிவிக்கையில்,

தென்னிலங்கையில் ஆட்சி அதிகாரத்தை யார் பெறுவது என்ற போட்டி நடைபெறுகிறது. எங்களைப் பொறுத்தவரை ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பேசும் மக்களே ஜனாதிபதியைத் தீர்மானித்தனர். இதனை அரசாங்கத்திற்கும், சர்வதேசத்திற்கும் செய்து காட்டியுள்ளோம். குறிப்பாக முன்னைய ஜனாதிபதி தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதவை பெறாமல் 70 வீதமாகவுள்ள சிங்கள மக்களை வைத்து தாம் வென்றுவிடலாம் என்றே செயற்பட்டார். ஆனால் அது நடைபெறவில்லை.

இதேபோல தான் தற்போதைய பாராளுமன்ற தேர்தலிலும் கடும் போட்டி நிலை நிலவுகிறது. இந்த பாராளுமன்றம் கூட அறுதிப் பெரும்பான்மையுடன் ஐக்கிய தேசியக்கட்சியோ அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியோ ஆட்சி அமைக்க முடியாத நிலை தான் இன்று தெற்கில் ஏற்பட்டுள்ளது. ஆகவே, அடுத்த மூன்றாவது பெரிய அணியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தான் வரவேண்டிய தேவையுள்ளது. குறிப்பாக வடக்கிலும், கிழக்கிலுமாக 18 தொடக்கம் 20 வரையான பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்று நாம் மூன்றாவது அணியாகவேண்டும்.

அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் தேசிய அரசாங்கத்தை அல்லது புதிய அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தான் இருக்கப் போகிறது. நூற்றுக்கு நூறு வீதம் வாக்களிக்க வேண்டிய கடமை எமக்கு இருக்கிறது. காரணம் 2004 ஆம் ஆண்டு 22 பாராளுமன்ற உறுப்பினர்களை கூட்டமைப்பு பெற்றிருந்தது. ஆனால் 2010 ஆம் ஆண்டு அப்படி இருக்கவில்லை. காரணம் அப்போது அச்சுறுத்தலான நிலை காணப்பட்டது. ஆனால் தற்போது அச்சுறுத்தல் பெரிதாக இல்லை. ஆதலினால் நாம் அனைவரும் முழுமையாக வாக்களித்து மீண்டும் 2004 ஆம் ஆண்டினைப்போல் அதிக ஆசனங்களைப் பெறவேண்டும்.

குறிப்பாக வன்னி மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை நாங்கள் 5 பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெறக் கூடிய நிலை இருக்கிறது. ஆனால் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வாக்களிப்பு வீதம் 38 ஆக இருந்தது. இதனால் தான் மூன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களும் மூன்று வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் என பிரதிநிதித்துவம் பிரிந்து செல்லக் கூடிய நிலை இருந்தது. அன்றிருந்த நிலைமைகள் முற்றாக மாறியுள்ளது. தற்போது வாக்காளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

எனவே அவர்கள் ஒவ்வொருவரையும் வாக்களிக்கச் செய்ய வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமை. அந்த வாக்குகளை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அளிக்க வேண்டிய தேவை இருக்கின்றது. போர் முடிந்து 6 ஆண்டுகள் கடந்த போதும் எமது அடிப்படை பிரச்சினைகள் உள்ளிட்ட பல பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை.

காணாமல் போனோர், சரணடைந்தோர், வெள்ளை வானில் கடத்தப்பட்டோர், மீள்குடியேற்றம் என உடனடியாக தீர்வு காணப்பட வேண்டிய பல பிரச்சினைகளும் இருக்கின்ற அதேவேளை அரசியல் தீர்வு விடயம் தொடர்பாக புதிய அரசாங்கத்துடன் பேச வேண்டியுள்ளது. இதற்கு எமக்கு இருக்கின்ற பலம் மக்களின் ஆதரவு தான். ஆகவே மக்களின் தேவைகளையும் இந்த பிரச்சினைகளையும் தீர்க்க ஜனநாயக ரீதியாக நீங்கள் வாக்களிப்பது பலம். ஒவ்வொரு தேர்தலும் வருகின்ற போது பல சுயேச்சை குழுக்களும் கட்சிகளும் போட்டியிட்டு வாக்கை சிதறடிக்கின்றன. இன்றும் கூட வன்னியில் கட்சிகளும் சுயேச்சைகளுமாக 28 குழுக்கள் போட்டியிடுகின்றன. இந்த நிலையை உணர்ந்து வாக்குகள் சிதறாமல் தடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும்.

ஏனைய கட்சிகளுக்கு அளிக்கும் உங்கள் வாக்கு வீணாகப் போய்விடும் என்பதே உண்மை. நவம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தில் இருந்து மனித உரிமை மீறல் தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்பட இருக்கிறது. இதனை வலுப்படுத்த வேண்டும். அதற்கு கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும். ஆயிரக்கணக்கான போராளிகள், பொதுமக்கள் மடிந்திருந்திருக்கிறார்கள் எமக்காக. அவர்களுக்காக நாம் செய்யும் புனிதக் கடமை இந்த வாக்களிப்பு தான். அதனை நாம் சரியாக செய்ய வேண்டும். தற்போது அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மக்களின் வறுமையைப் பயன்படுத்தி அவர்களுக்கு தையல் இயந்திரத்தை கொடுத்துவிட்டு வாக்கைப் பெற முயல்கிறார்.

டக்ளஸ் தேவானந்தா கூட மக்களின் வறுமையை வைத்து வாக்கைப் பெற முனைகிறார். கடந்த 2010 ஆம் ஆண்டு கூட இப்படித் தான் நடந்தது. மக்களுக்கு பொருட்களை வழங்கி எமது தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்ற இவர்கள் ஐ.நா.விற்கு சென்று தமிழ் மக்களை இராணுவம் சுடவில்லை. புலிகள் தான் சுட்டார்கள் என தமிழ் மக்களுக்கு எதிராகவும் மஹிந்தவுக்கு சார்பாகவும் பிரச்சாரங்கள் செய்தமையை எமது மக்கள் மறந்து விடக்கூடாது.

எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்தி வரும் அரசாங்கத்தை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக அதனை திகழச் செய்ய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. அதனை நீங்கள் நிறைவேற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

புதிய அர­சாங்­கத்தை தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக கூட்டமைப்பே விளங்கும்: முன்னாள் எம்.பி. சிவ­சக்தி ஆனந்தன் Reviewed by NEWMANNAR on July 20, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.