கைக்குழந்தையோடு சென்று கெஞ்சியும் கணவரை விடவில்லை! ஆணைக்குழு முன் இளம்பெண் கதறல்....
ஊரடங்கு வேளையில் வீட்டுக்கு அருகில் உள்ள கடைக்குப் பொருட்கள் வாங்கச் சென்ற கணவரைப் பிடித்த படையினர் இன்னும் ஒப்படைக்கவில்லை. .தேடிச் சென்ற என்னையும் பல்வேறு சித்திரவதைக்கு உள்ளாக்கினர். இவ்வாறு ஜனாதிபதி ஆணைக்குழு முன் மிருசுவிலைச் சேர்ந்த இளம் பெண் கதறியழுதவாறு சாட்சியமளித்தார்.
யாழ்.தென்மராட்சி பிரதேச செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் மிருசுவிலைச் சேர்ந்த 24 வயது இளம் குடும்பப் பெண் சாட்சியமளிக்கையில் மேலும் தெரிவித்ததாவது,
கடந்த 2006 ஆகஸ்ட் 13ம் திகதி மிருசுவில் உசன் பகுதியில் வசித்த எங்களுக்கு மூன்று மாதக் கைக்குழந்தை இருந்தது. எனது கணவர் "வான் "சாரதியாக பணிபுரிந்து வந்தார். வேலை முடிந்து கணவர் வீட்டுக்கு வந்ததும் சில பொருட்கள் வாங்கி வருமாறு கடைக்கு அவரை அனுப்பியிருந்தேன்.பத்து நிமிடத்தில் சைகிளில் செல்லும் தூரத்திலே கடை இருந்தது.
ஊரடங்கு நேரம் ஆரம்பித்துள்ளதால் விரைவில் வருமாறு அனுப்பியிருந்தேன். சிறிது நேரத்தில் வந்த அயலவர்கள் எனது கணவரைப் படையினர் பிடித்து வைத்திருப்பதாகக் கூறியதால் மூன்று மாதக் கைக்குழந்தையுடன் படையினரின் உசன் முகாமுக்குச் சென்றேன்.
கணவரின் கைகளைக் கட்டிய நிலையில் படையினர் அவரை அழைத்துச் செல்வதைக் கண்ட நான் அங்குள்ளவர்களிடம் எனது கணவரை விடுமாறு குழந்தையுடன் கெஞ்சினேன். அதற்கு அவர்கள் தற்போது ஊரடங்கு நேரம் ஆரம்பித்துவிட்டது உடனடியாக இங்கிருந்து சென்று விடு இல்லையேல் சுட்டு விடுவோம் என்றும், நாளை காலை கச்சாயில் உள்ள முகாமுக்கு வருமாறும் கூறினர்.
மறுநாள் கச்சாய் முகாமுக்குச் சென்று விசாரித்தபோது எனது கணவரை தாங்கள் பிடிக்கவில்லை என படையினர் என்னிடம் கூறினர்.
மறுநாள் எனது வீட்டுக்கு வந்த படையினர் வீட்டைச் சோதனையிட வேண்டுமெனக் கூறி என்னை வீட்டுக்குள் வருமாறு கூறினர். நான் அச்சம் காரணமாக வீட்டுக்குள் செல்லாததால் வீட்டைச் சோதனையிட்ட பின்னர் எனது தேசிய அடையாள அடடையை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டனர்.
முகாமுக்குச் சென்றால் அங்கு விசாரணை என்ற போர்வையில் "பிளேட்டினால் "வெட்டியும் "அயன்பொக்ஸினால் "சுட்டும் சித்திரவதை செய்வார்கள் என அறிந்ததால் நான் முகாமுக்கு செல்லாமல் பக்கத்து வீட்டில் தஞ்சமடைந்திருந்தேன்.
இரு தினங்களின் பின்னர் தேடி வந்த படையினர் எனது வீட்டில் ஆட்கள் இல்லாததால் பக்கத்து வீட்டுக்காரரை அச்சுறுத்தி என்னை வெளியே விடுமாறு கத்தினர்.
அந்த வீடடில் உள்ளவர்களும் அச்சம் காரணமாக என்னை வெளியே வருமாறு கூறிய போதிலும் என்னைப் படையினர் அழைத்துச் செல்ல அவர்கள் விடவில்லை. இதனால் வேறு வீட்டில் தஞ்சமடைந்தேன்.
தொடர்ந்து படையினர் கச்சாய் முகாமுக்கு வருமாறு நான் இருக்கும் வீடுகளுக்கு வந்து என்னை அச்சுறுத்திய வண்ணமிருந்தனர்.
உறவினர்களின் வேண்டுகோளின் பிரகாரம் கச்சாய் படை முகாமுக்குச் சென்ற வேளையில் தனி அறையில் 25ற்கு மேற்பட்ட படையினர் துருவித் துருவிக் என்னைக் கேள்விகள் கேட்டனர்.
நான் கேள்விகளுக்குப் பதில் சொன்னேன். திடீரென விளக்குகளை அணைத்துவிட்டு அங்கே வந்த ஒரு படை அதிகாரி உண்மையைச் சொல்லிவிடு இல்லையேல் சுட்டுவிடுவோம் என அச்சுறுத்தினார்.
நான் துணிந்து பதில் சொன்னேன். அவ்வேளையில் பிள்ளை அழுததால் என்னை வெளியே விட்டுவிட்டனர்.
கைக்குழந்தையோடு சென்று கெஞ்சியும் கணவரை விடவில்லை! ஆணைக்குழு முன் இளம்பெண் கதறல்....
Reviewed by Author
on
March 02, 2016
Rating:

No comments:
Post a Comment