மகாவலி திட்டத்தின் மூலம் சிங்கள குடியேற்றம் இடம்பெறக் கூடாது! --முதலமைச்சர் சி.வி.சுட்டிக்காட்டு
வடக்கு, வடமத்திய மாகாணங்களுக்கு இடையில் ஜப்பான் நாட்டின் ஜய்க்கா நிறுவனத்தின் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் மகாவலி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படவுள்ள குளங்களை ஒன்றிணைக்கும் நீர் விநியோகத் திட்டம், சிங்கள மக்களை தமிழர் நிலங்களில் குடியேற்றும் செயற்றிட்டமாக அமையக்கூடாது என ஜய்க்கா நிறுவனத்திற்கும், மகாவலி அதிகாரசபை க்கும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்.குருநகர் பகுதியில் உள்ள வீதி அபிவிருத்தி திணைக்கள கட்டிடத்தில் நேற்றைய தினம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மாகாண அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் ஜய்க்கா நிறுவன அதிகாரிகள், மகாவலி அதிகாரசபை அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் காலை 9.40 தொடக்கம் நண்பகல் 12 மணி வரையில் நடைபெற்றிருந்தது.
இதன்போதே மேற்படி விடயத்தை தாம் சுட்டிக்காட்டியுள்ளதாக கூட்டத்தின் நிறைவில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
சந்திப்பு தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,
வடமத்திய மாகாணத்தின் மொரக ஹந்தகுளம் தொடக்கம் வடமாகாணத்தின் கனகராயன்குளம் வரையிலான 132 குளங்களை படிமுறையில் இணைப்பதன் ஊடாக மழை நீர் அதிகளவில் கடலில் சேர்வதை தடுப்பதற்கான ஒரு செயற்றிட்டமே இதுவாகும்.
இந்நிலையில் மேற்படி செயற்றிட்டத்திற்கான சாத்தியக் கூற்றறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.அந்தவகையில் மேற்படி திட்டத்திற்கு நிதி உதவிகள் மற்றும் தொழிநுட்ப உதவிகளை வழங்கும் ஜய்க்கா நிறுவன அதிகாரிகள், மகாவலி அதிகாரசபை அதிகாரிகள் எங்களுடன் சந்திப்பினை மேற்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் இந்த கூட்டத்தில் நாங்கள் மிக தெளிவாக ஒரு விடயத்தை சுட்டிக் காட்டியிருக்கின்றோம்.
அதாவது மகாவலி அதிகாரசபையின் கீழ் கடந்த காலத்தில் வேறு மாகாணங்களை சேர்ந்த மக்கள் எங்களுடைய மாகாணத்தில் குடியேற்றப்பட்டார்கள்.
அவ்வாறான நிலை உருவாகுமோ என்ற அச்சம் எங்கள் மத்தியில் இருக்கின்றது என்பதையும் அவ்வாறான உள்நோக்கத்தை கொண்டதாக இந்த செயற்றிட்டம் அமையக் கூடாது என்பதையும் நாங்கள் தெளிவாக சுட்டிக்காட்டியிருக்கின்றோம்.
இதன்போது அரசியல் சார்ந்த விடயங்களுக்கு அதிகாரிகள் பதிலளிக்க முடியாது என்றவகையில் அவர்கள் தங்கள் மேலிடத்திற்கு எங்களுடைய நிலைப்பாட்டை எடுத்துரைப்பதாக கூறியிருக்கின்றார்கள்.
மேலும் எங்களையும் மேலிடத்திற்கு எடுத்துரைக்கச் சொன்னார்கள். நாங்களும் எழுத்து மூலமாக அதனை தெரியப்படுத்துவோம் என முதலமைச்சர் கூறியுள்ளார்.
இதேவேளை இந்த செயற்றிட்டம் சிங்கள மக்களை குடியேற்றுவதை நோக்கமாக கொண்டிருக்க கூடாது என வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவரும்; கேட்டுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா ஊடகங்களுக்கு குறிப்பிடுகையில்,
அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள முக் கியமான ஒரு விடயம் திருத்தியமைக்கப்பட வேண்டும் என நான் கேட்டிருக்கின்றேன்.அதாவது இரு மாகாணங்களுக் கிடையிலான நீர் விநியோகம் செய்யப்படும்போது அது தொடர்பான நிர்வாகம் மற்றும் அந்த விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் குடியேற்றம் போன்றவற்றுக்கான அதிகாரம் மத்திய அரசாங்கத்திடம் இருக்கும்.
எனவே அந்த விடயம் அரசியலமைப்பில் திருத்தியமைக்கப்பட வேண்டும் என தாம் கேட்டுள்ளதாக கூறினார்.
இதே வேளை மாகாணசபை ஆளுங் கட்சி உறுப்பினர் து.ரவிகரன் குறிப்பிடுகையில்,
முல்லைத்தீவு மக்களுக்கு மகாவலி அதிகாரசபை என்றாலே தமிழர் நிலங்களை பிடுங்கி சிங்கள மக்களிடம் கொடுப்பதற்கான அதிகாரசபை என்றே புரிந்திருக்கின்றது.
அந்தளவுக்கு அங்கே மகாவலி அதிகார சபை முன்னர் செயற்பட்டிருக்கின்றது. எனவே இந்த விடயத்தில் தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என கூறினார்.
இதேவேளை ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குறிப்பிடுகையில்,
இரு மாகாணங்களுக்கிடையில் நீர் விநியோகம் தொடர்பான விடயத்தில் மத்திய அரசாங்கத்திற்கு அரசியலமைப்பில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரம் தொடர்பான விடயத்தில் திருத்தங்கள் செய்யப்படாது போனால் மத்திய அரசாங்கம் தான்தோன்றித்தனமான நடத்தைகளில் ஈடுபடும்.
மேலும் மகாவலி எல் வலயத்தின் கீழ் முல்லைத்தீவில் இடம்பெற்றதை போன்ற சிங்கள குடியேற்றங்கள் இங்கே வரும் அபாயம் உள்ளது எனவும் குறிப்பிட்டார்
மகாவலி திட்டத்தின் மூலம் சிங்கள குடியேற்றம் இடம்பெறக் கூடாது! --முதலமைச்சர் சி.வி.சுட்டிக்காட்டு
Reviewed by NEWMANNAR
on
July 27, 2016
Rating:

No comments:
Post a Comment