வட, கிழக்கு இணைப்புடன் கூடிய சமஷ்டி அதிகாரம் தமிழ் பேசும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்
இலங்கையில் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியல் யாப்பில் வட, கிழக்கு இணைப்புடன் கூடிய சமஷ்டி அதிகாரத்தினை தமிழ் பேசும் மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை சிவில் சமூக அமைப்புக்கள் மீண்டும் முன்வைத்துள்ளனர்.
மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் இன்று நடைபெற்ற அரசியல் யாப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதத்தின் போதே மேற்படி விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையம் மற்றும் எகட் ஹரிதாஸ் அமைப்பு என்பன இணைந்து இந்த கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தன. இலங்கையில் இதுவரை மூன்று அரசியல் யாப்புக்கள் நடைமுறையில் இருந்துள்ளது.
இதில் சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்த கேள்விகள் இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே எழுப்பப்பட்டு வருகின்றது. பிரித்தானியரினால் தயாரிக்கபட்ட முதலாவது சோல்பரி யாப்பின் போது சிறுபான்மையின மக்கள் தங்களுடைய பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பிய போதும் குறித்த யாப்பின் 19ஆவது சரத்தில் சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படுத்தும் சட்டங்கள் நிறைவேற்றப்படக் கூடாது என்ற விடயம் உள்வாங்கப்பட்டிருந்தது.
ஆனால், அதன் பிறகு வந்த யாப்புக்கள் தொடர்ச்சியாக சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்கும் உரிமைகளுக்கும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால், பாரிய யுத்தத்தை எதிர்கொண்டு தற்போது புதிய யாப்பிற்கான தேவை உணரப்பட்டு அதற்கான வேலைகள் இடம்பெற்று இன்று இடைக்கால அறிக்கை வெளியாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வட, கிழக்கு இணைப்புடன் கூடிய சமஷ்டி அதிகாரம் தமிழ் பேசும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்
Reviewed by Author
on
October 23, 2017
Rating:

No comments:
Post a Comment