மன்னாருக்கு முதல் முறையாக வரும் ஜனாதிபதி
தேசிய சுற்றாடல் தினத்தையொட்டி எதிர் வரும் 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மன்னார் மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதிப்புக்கள் மற்றும் சவால்கள்' என்ற தொனிப்பொருளில் இடம் பெறவுள்ள நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார்.
குறித்த நிகழ்வு தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், கடந்த வெள்ளிக்கிழமை மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்றது.
மன்னார் அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன் ராஸ் தலைமையில் இடம் பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர் றிஸாட் பதியுதீன் கலந்து கொண்டிருந்தார்.
சுற்றாடல் அதிகார சபை உயரதிகாரிகள், ஜனாதிபதி செயலக உயரதிகாரிகள், சுற்றாடல் அமைச்சின் உயரதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் உட்பட பல்வேறு திணைக்களங்களின் உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
அன்றைய தினம் மன்னார் மாவட்டத்தில் இடம்பெறவுள்ள மர நடுகை நிகழ்வு குறித்தும் குறித்த கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டதுடன், சுற்றாடல் விழிப்பூட்டல் தொடர்பான பதாதைகள், சுவரொட்டிகள் போன்றவற்றை காட்சிக்கு வைத்தல் ஆகியன தொடர்பிலும் அன்றைய தினம் கலந்துரையாடப்பட்டுள்ளது.
-மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் குறித்த நிகழ்வு இடம் பெறுவதோடு,மன்னார் மதவாச்சி பிரதான வீதி, தம்பனைக்குளம் 53 கட்டை பகுதியில் மரம் நாட்டும் நிகழ்வும் இடம் பெறவுள்ளது.
இதே வேளை மன்னார் மாவட்டத்தில் இந்த ஆண்டின் இறுதி மூன்று மாத காலத்திற்குள் 3 தேசிய நிகழ்வுகளை நடாத்த ஜனாதிபதி செயலகத்தினால் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் அடிப்படையில் மூன்று தேசிய நிகழ்வுகளிலும் முதல் நிகழ்வாக எதிர் வரும் 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தேசிய சுற்றாடல் தினம் மன்னார் நகர சபை மைதானத்தில் இடம் பெறவுள்ளது.
அதே நேரம் மரம் நட்டல் நிகழ்வுகள் -மன்னார் மதவாச்சி பிரதான வீதி தம்பனைக்குளம் 53 கட்டை பகுதியில் இடம் பெறவுள்ளது.
மேலும் எதிர் வரும் நவம்பர் 20ஆம் திகதி தேசிய மீளாத் விழா இடம் பெறவுள்ளது. குறித்த மீளாத் விழா மன்னார் மாவட்டத்தின் முசலிப் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் இடம்பெறவுள்ளது.
மேலும் தேசிய நத்தார் தினம் டிசம்பர் 22ம் திகதி மன்னாரில் இடம் பெறவுள்ளது.குறித்த தேசிய நிகழ்வுகள் அனைத்திற்குமான ஏற்பாடுகளை மாவட்டச் செயலகத்துடன் இணைந்து ஜனாதிபதி செயலகம் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிய வருகின்றது
ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் மன்னார் மாவட்டத்தின் பொது மக்கள் முன்னிலையில் மன்னார் நகர் பகுதியில் பொது நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்வது இதுவே முதல் முறை என்பது குறிபிடத்தக்கது.
மன்னாருக்கு முதல் முறையாக வரும் ஜனாதிபதி
Reviewed by Author
on
September 30, 2018
Rating:
Reviewed by Author
on
September 30, 2018
Rating:



No comments:
Post a Comment