மடுதிருத்தலம் தொடர்பில் மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது: சி.வி.விக்னேஸ்வரன் -
மன்னார் மாவட்டத்தில் மடுதிருத்தலம் அமைந்துள்ள பிரதேசம் புனித பூமியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையானது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது என வடமாகாண சபை முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சுமார் 450 ஆண்டுகள் வரலாறு கொண்ட மடுதிருத்தலம், கத்தோலிக்க பக்தர்களின் யாத்திரைக்குரிய புனித தலமாக மட்டுமன்றி பௌத்த மற்றும் இந்து பக்தர்களினதும் வழிபாட்டிற்குரிய தலமாகவும் ஒற்றுமையின் சின்னமாகவும் விளங்கி வருகின்றது.
இத்தகைய பெரும் சிறப்புமிக்க இந்த மடு தேவாலயத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்துவதற்கு அயராது பாடுபட்ட கத்தோலிக்க குருமார்களுக்கும் மற்றையோருக்கும் எனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் கோரிக்கையை ஏற்று அங்கீகாரம் அளித்து நடவடிக்கை எடுத்த அமைச்சரவை உறுப்பினர்களுக்கு மற்றும் ஜனாதிபதிக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வணக்கத்திற்குரிய பாப்பாண்டவர் பிரான்சிஸ் மடு வந்தபோது அவரைச் சந்திக்கும் பெரும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. நவீன காலத் தெய்வ மனிதர்களில் அவரும் ஒருவரே.
மடுதிருத்தல பிரதேசம் புனித பூமியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை காரணமாக, போர் நடைபெற்ற காலத்தில் மிக மோசமாக பாதிப்புக்களுக்குள்ளான மடுதிருத்தலம் மேன்மேலும் வளங்களையும், சிறப்புகளையும் பெற்று எமது மக்களுக்கு தொடர்ந்தும் நல்ல முறையில் இறை பணிகளையும், சமூக பணிகளையும் ஆற்றும் என்று எதிர்பார்க்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மடுதிருத்தலம் தொடர்பில் மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது: சி.வி.விக்னேஸ்வரன் -
Reviewed by Author
on
October 30, 2019
Rating:

No comments:
Post a Comment