கொரோனாவால் எகிறும் மரண எண்ணிக்கை துப்பாக்கி வாங்க கடைகளில் குவியும் அமெரிக்கர்கள் -
கொரோனா அச்சுறுத்தல்களால் உலகின் பெரும்பாலான நாடுகள் முடங்கிப்போயிருக்கும் நிலையில் அமெரிக்க மக்கள் துப்பாக்கி வாங்க ஆர்வம் காட்டியுள்ளனர்.
அமெரிக்காவில் துப்பாக்கி வாங்குவதற்காக ஒருவர் விண்ணப்பித்தால் அவரது பின்னணி தொடர்பில் தீவிரமாக விசாரிக்கப்படும்.
துப்பாக்கி வைத்துக் கொள்ளத் தகுதியான நபர் என ஒருமுறை அங்கீகரிக்கப்பட்டால் அவர் எத்தனை துப்பாக்கிகளை வேண்டுமானாலும் வாங்கி வைத்துக் கொள்ளலாம் என்கிறது அமெரிக்கச் சட்டம்.
இந்த நிலையில் FBI அமைப்பின் தகவலின்படி கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் துப்பாக்கி வைத்துக் கொள்ள விண்ணப்பித்தவர்களில் 3.7 மில்லியன் அமெரிக்கர்களின் பின்னணி சோதனை செய்யப்பட்டுள்ளது.
உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் தகவலின் படி, கடந்த ஒரு மாதத்தில் மட்டுமே 20 லட்சம் துப்பாக்கிகள் அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அதில் 5 லட்சம் துப்பாக்கிகளை டெக்ஸாஸ், ஃப்ளோரிடா, கலிபோர்னியா ஆகிய மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் வாங்கியிருக்கிறார்கள்.
மார்ச் 21 ஆம் திகதி ஒரே நாளில் மட்டும் 2 லட்சம் விண்ணப்பங்கள் பரிசோதனை செய்து முடிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது முன்னெப்போதும் இல்லாத அதிகபட்ச எண்ணிக்கை என கூறப்படுகிறது. கொரோனா பாதிப்பின் விளைவுகள் வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும்.
அதன் காரணமாக தமது உடைமைகள் சூறையாடப்படலாம். உணவுக்காகப் பெரிய அளவில் வன்முறை நிகழலாம்.
அதிலிருந்து தற்காத்துக் கொள்ளவே துப்பாக்கிகளை வாங்குகின்றோம் என்கின்றனர் அமெரிக்கர்கள் பலர்.
இதனிடையே நியூயார்க், நியூ மெக்ஸிகோ உள்ளிட்ட சில மாகாணங்கள் துப்பாக்கி விற்பனை நிலையங்களை மூட தற்போது உத்தரவிட்டுள்ளது.
இருப்பினும் இணையதளம் மூலம் துப்பாக்கிகளை வாங்க அம்மாகாணங்கள் அனுமதியளித்திருப்பதாகவே தெரியவந்துள்ளது.
மேலும் வாசிங்டனில் துப்பாக்கி விற்பனை தற்போது தடை செய்யப்பட்டிருக்கிறது ஆனாலும் விதிகளை மீறி அங்கு துப்பாக்கி விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
கொரோனாவால் எகிறும் மரண எண்ணிக்கை துப்பாக்கி வாங்க கடைகளில் குவியும் அமெரிக்கர்கள் -
Reviewed by Author
on
April 09, 2020
Rating:
Reviewed by Author
on
April 09, 2020
Rating:


No comments:
Post a Comment