தொற்றைக் கட்டுப்படுத்த நாம் தயாராகவே இருக்கின்றோம் - கொரோனா நிலவரம் தொடர்பில் சவேந்திர சில்வா நேர்காணல்
சில மாதங்களாக கொவிட் தொற்று பற்றி அதிகம் பேசப்படாத நிலையில் அண்மையில் ஏற்பட்ட கொவிட் தொற்றின் இரண்டாவது அலை அந்நிலையம் பற்றி மீண்டும் பேச வைத்துள்ளது. இந்த இரண்டாவது அலையினால் இதுவரையில் பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். மிக வேகமாகப் பரவும் இந்த தொற்றினைக் கட்டுப்படுத்தல் தொடர்பில் மேற்கொள்ளப்படும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மற்றும் மக்கள் மத்தியில் உள்ள அச்சம் தொடர்பில் மனம் திறக்கின்றார் லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா.
கேள்வி - கோவிட் - 19 தொற்று நோயின் இரண்டாவது அலை குறுகிய காலத்தினுள் இந்தளவுக்கு பரவுவதற்கான காரணம் என்ன?
பதில்- முதலாவது அலையின் போது முதலாவது தொற்றாளர் இனங்காணப்பட்டதிலிருந்தே தேவையான நடவடிக்கைகளை எம்மால் மேற்கொள்ள முடிந்தது. எனினும் இம்முறை இரண்டாவது அலையானது சுகாதார அமைச்சிற்கு அறிவிக்கப்பட்டது நெருக்கமானவர்களுக்கு தொற்று பரவியதன் பின்னரே. மினுவங்கொடை முதலாவது தொற்றாளர் இனங்காணப்பட்டதன் பின்னர் அவருடன் தொடர்புடையவர்களை தேடுவதற்காக நாம் மேற்கொண்ட 150 பீ. சீ. ஆர் பரிசோதனையில் 101 பேர் தொற்றாளர்களாக ஊர்ஜிதமானது. அதன் பின்னர் 1000 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ. சீ. ஆர் பரிசோதனையில் 700க்கும் அதிகமானோருக்கு நோய் தொற்று ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது நோய் பரவியிருந்தது. அவ்வாறான பரவலைக் கட்டுப்படுத்துவதே எமது பணியாக இருந்தது. எனவேதான் இந்தப் பரவல் அதிகமாகும். முதலாவது சந்தர்ப்பத்தில் நோய் பரவலைக் கட்டுப்படுத்தி நோயாளர்களைத் தேடும் வேலையே எமக்கிருந்தது. இப்போதிருப்பது பரவியிருக்கும் நோயைக் கட்டுப்படுத்துவதாகும்.
கேள்வி - எனினும் மிகத் துரிதமாக நோய் பரவியுள்ளதே?
பதில் -ஆம். இம்முறை நோயைப் பரப்பும் வைரஸின் தாக்கம் மிக அதிகமாகும். தொற்றாளர்களிடமிருந்து முன்னரை விட அதிகமானோருக்குப் பரவும் நிலை உள்ளது. சிறந்த உதாரணத்தைக் கூறுகின்றேன். முதலாவது அலை தோன்றிய சந்தர்ப்பத்தில் கந்தக்காட்டின் தொற்றுக்குள்ளான ஆசிரியர் சிலாபம் வந்திருந்தார். அவர் பொது போக்குவரத்திலும், முச்சக்கர வண்டியிலும் பயணித்திருந்தார். அந்த ஆசிரியர் ஊடாக தொற்று அதிகமானோருக்கு பரவும் என்று அதிகமானோர் மிகுந்த பயத்தில் இருந்தார்கள். எனினும் எவருக்கும் நோய் தொற்று ஏற்பட்டிருக்கவில்லை. இப்போதைய நிலையானது அதனை விட மாற்றமானது. தொற்றுக்குள்ளானவருக்கு அருகில் சென்றாலும் நோய் தொற்றிக் கொள்ளும் நிலை காணப்படுகின்றது. எவ்வாறாயினும் தற்போது நாம் மினுவங்கொடை கொத்தணியின் பரவலைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.
கேள்வி - முதலாவது அலையை விட ஆபத்தான பரவல் நாட்டில் உள்ளது. விசேடமாக பேலியாகொடை மீன் சந்தையின் ஊடாக நோய்த் தொற்று நாடு முழுவதிலும் பரவியுள்ளதே?
பதில் - பேலியாகொடை மீன் சந்தையிலிருந்து தொற்று ஒவ்வொரு இடங்களுக்கும் சென்றிருக்கின்றது. எனினும் அவற்றில் பெரும்பாலானோர் கம்பஹா மாவட்டத்தில் இனங்காணப்பட்டாலும் கொழும்பு, களுத்துறை மாவட்டங்களிலும் இருக்கின்றார்கள். அதேபோன்று ஹட்டன் நகரிலும் நோயாளர்கள் இனங்காணப்பட்டதனால் ஹட்டன் நகரை தனிமைப்படுத்த வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டது. மீன் சந்தை மற்றைய இடத்தைப் போன்றதல்ல. மீன்களைக் கொண்டு வருவோரைப் போன்று எடுத்துச் செல்வதற்கும் அனேக இடங்களிலிருந்து அதிகமானோர் வருகிறார்கள். இதன் ஊடாகவே பரவியுள்ளது.
கேள்வி - எனினும் மினுவங்கொடை கொத்தணியைப் பற்றி அறிய வந்த உடன் கம்பஹா மாவட்டத்திற்கு தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியிருந்தால் பேலியாகொடை நிலை ஏற்பட்டிருக்காது என்ற கருத்து நிலவுகிறதே?
பதில்- இது இப்படித்தான் நடக்கும் என்று எவராலும் கூற முடியாது. இரண்டாவது கொத்தணி மீன் சந்தையின் ஊடாக பரவிய போதிலும் எம்மால் இன்னமும் கொவிட் - 19 இன் இரண்டாவது அலை எங்கிருந்து ஆரம்பித்தது என்று உறுதியாகக் கூற முடியாதுள்ளது. எவ்வாறாயினும் வெளிநாட்டவர்களின் வருகை தெளிவான காணரமாகும். காரணம் கடந்த செப்டெம்பர் வரைக்கும் இலங்கையில் எந்த தொற்று நோயும் இருக்கவில்லை.
கேள்வி - அப்படியாயின் கொவிட் - 19 கட்டுப்படுத்தலில் எங்கோ ஓரிடத்தில் தவறு இருந்திருக்கின்றதுதானே?
பதில் - தொற்று நோய் கட்டுபாடு, பரவலைத் தடுத்தல் ஒரு தரப்பினரால் அல்லது குழுவினரால் மாத்திரம் செய்யக் கூடிய ஒரு விடயமல்ல. எவ்வாறாயினும் தொற்று நோய் நாட்டினுள் இரண்டாவது தடவையாக பரவியது, பரவுகைக்கான ஆறு வழிகளில் ஒன்றாக இருக்க முடியும்.
அதில் முதலாவது வெளிநாட்டிலிருந்து வந்த இலங்கையர்களிடமிருந்தாகும். எனினும் அவ்வாறு வந்தவர்கள் அனைவரும் எமது விசேட கண்காணிப்பின் கீழ் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார்கள். பீ. சீ. ஆர் பரிசோதனையின் பின்னர்தான் அவர்கள் தமது வீடுகளுக்கு அனுப்பப்பட்டார்கள். இரண்டாவது காரணமாக இருப்பது, வெளிநாட்டு கப்பல்களிலிருந்தவர்கள் எமது நாட்டில் இடைநடுவில் தங்கிச் செல்வதற்காக வந்தவர்கள். அவர்கள் கப்பல்கள் அல்லது விமானங்கள் மூலம் வந்து சிறிது காலம் ஹோட்டல்களில் தங்கியிருந்து விட்டு வந்த கப்பல்களில் மீண்டும் திரும்பிச் செல்கின்றார்கள். அவர்கள் ஊடாகவும் நோய் வருவதற்கு வாய்ப்புக்கள் இருக்கின்றன. மூன்றாவது வெளிநாட்டு தூதரங்களின் சலுகைகளைக் கொண்டவர்கள் வருகை தருகிறார்கள். அவர்கள் சர்வதேச இணக்கப்பாட்டிற்கு அமைவாக பாதுகாப்புடனேயே வருகை தருகின்றார்கள். எனவே அவர்கள் ஊடாக நோய் வருவதற்கான வாய்ப்புக்கள் மிக மிகக் குறைவாகும். நான்காவது இந்நாட்டிற்கு பல்வேறு நாடுகளிலிருந்து வரும் கப்பல்களின் ஊடாகவும் நோய் பரவுவதற்கான வாய்ப்புள்ளது. சில கப்பல்கள் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக அல்லது வேறு தேவையான பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்காக வருபவை. எமது நாட்டவர்கள் அந்தக் கப்பல்களில் ஏறுகின்றார்கள். அவர்கள் ஊடாகவும் இவ்வாறு இந்நோய் பரவுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
ஐந்தாவது இந்நாட்டிற்குள் கடல் வழியாகச் சட்டவிரோத வியாபாரிகள் அல்லது போதைப் பொருள் கடத்தல் காரர்கள் வருகை தருவதாகும். அவ்வாறனவர்கள் கைது செய்யப்பட்டாலும் இன்னும் சிலர் கைது செய்யப்படாமல் தப்பித்துக் கொண்டு நாட்டினுள் வாழ்கிறார்கள். அவ்வாறானவர்கள் மூலமாகவும் நோய் பரவல் ஏற்பட்டிருக்கக் கூடும்.
அதேபோன்று ஆறாவதாக இந்நாட்டிற்குள் வருகை தரும் வெளிநாட்டு விமானப் பணியாளர்கள் மூலமாகவும் இந்நோய் பரவக் கூடும். இந்நாட்டின் விமான நிலையத்தை அண்மித்த ஹோட்டல்களில் அவர்கள் தங்குகின்றார்கள். கட்டுநாயக்க மற்றும் மத்தளை பிரதேசங்களில் தலா இரண்டு ஹோட்டல்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றது. இதன் மூலமும் நோய் பரவல் ஏற்பட்டிருக்கக் கூடும். இவ்வாறான எதோவொரு வழியில்தான் இந்நோய் பரவியிருக்கின்றது.
கேள்வி - வெளிநாட்டு விமானங்களின் பணியாளர்களிலிருந்து தொற்று பரவுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாக நீங்கள் ஊடகங்களுக்கு கூறியிருந்தீர்களே?
பதில் - முதலாவது முறையின் மூலம் நோய் பரவல் ஏற்பட்டிருக்கின்றது எனக் கூற முடியாது. அதே போன்றுதான் துறைமுகத்திற்கு வரும் கப்பல்களின் ஊடாகவும் நோய் பரவல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவாகும். காரணம் துறைமுக அதிகார சபையானது தேவையான தொற்று நீக்கும் நடவடிக்கையினை மேற்கொண்டு செயற்படுகின்றது.
மற்றைய வழிகளில் நோய் பரவியிருக்கக் கூடும். புலனாய்வுத் தரப்பின் விசாரணைகளின் மூலம் வெளிநாட்டு விமானங்களின் பணியாளர்கள் ஊடாக நோய் பரவியுள்ளதற்கான சான்றுகளே வெளிப்பட்டுள்ளன. எனினும் எம்மால் அதனை 100 வீதம் உறுதியாகக் கூற முடியாது. ஏனைய வழிகளிலும் நோய் பரவியிருக்கக் கூடும் என்பதை மறந்து விட வேண்டாம்.
எவ்வாறாயினும் கட்டுநாயக்கா ஹோட்டலில் தங்கியிருந்த துருக்கி விமான சேவைக்குரிய விமானப் பணியாளர்கள் செப்டெம்பர் 11ம் திகதி வந்து 13ம் திகதி வெளியேறிச் சென்றுள்ளார்கள். அவர்களுள் உக்ரேன் நாட்டவர் ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியானது. அவர் சிகிச்சை பெற்று சுகமடைந்து வெளியேறியுள்ளார். அவர் தங்கியிருந்த ஹோட்டலின் பணியாளர்களுக்கு பீ. சீ. ஆர் பரிசோதனை மேற்கொண்ட போது அந்தப் பணியாளர்கள் ஐவருக்கு நோய் தொற்று ஏற்பட்டிருந்தது. அவர்களுள் சிலர் தமது வீடுகளுக்கும் கூட சென்றிருக்கின்றார்கள். அதில் நோய் பரவுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகும்.
கேள்வி - எவ்வாறாயினும் கம்பஹா மாவட்டம் முடக்கப்பட்டிருந்தால் இந்தப் பரவலைத் தடுத்திருக்கலாம்தானே?
பதில் -கம்பஹா மாவட்டத்தின் அனேக இடங்கள் முடக்கப்பட்டு மூன்று வாரங்களுக்கும் அதிகமாகிவிட்டது. எனினும் இன்னமும் அதிகமானோர் இனங்காணப்படுவது கம்பஹா மாவட்டத்தில்தான். முடக்கப்படுவதே தீர்வாக அமையும் என சிலர் கூறுகின்றனர். எனினும் நாம் இச்சந்தர்ப்பத்தில் சுகாதாரப் பாதுகாப்பிற்கு முதலிடம் கொடுக்கும் அதேவேளை நாட்டின் பொருளாதாரத்தையும் பார்க்க வேண்டும் அல்லவா? நாட்டின் பொருளாதாரத்தில் 46 வீதம் தங்கியிருப்பது ஏற்றுமதியிலாகும். கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை உள்ளிட்ட தொழிற்சாலைகள், சுதந்திர வர்த்தக வலயம் போன்றவற்றை மூடி வைப்பதால் நாட்டின் பொருளாதாரம் சரிவடையும் நிலையே ஏற்படும். தொழிற்சாலைகளை மூடினால் தொழில்வாய்ப்புக்கள் ஆபத்தான நிலையை அடையும். அதேபோன்று எமது நாட்டிற்கான இந்தத் துறைசார்ந்த கோரிக்கைகள் எமது நாட்டிலிருந்து கைநழுவிச் செல்லவும் வாய்ப்புள்ளது. எமது நாட்டிற்கு அதிகளவான கோரிக்கைகள் கிடைத்திருப்பது மற்றைய நாடுகள் கோவிட் - 19 நோயைக் கட்டுப்படுத்துவதில் பின்னடைந்திருப்பதால்தான். நாம் இரண்டு மூன்று வாரங்கள் தொழிற்சாலைகளை மூடி வைத்திருந்தால் அந்த கோரிக்கைகள் வேறு நாடுகளுக்குச் சென்றுவிடும்.
கேள்வி - நாட்டின் புலனாய்வுத்துறை பலமாக இருந்தும் நோய் பரவிய முறையினை இன்னமும் உறுதியாகக் கண்டுபிடிக்க முடியாமலிருப்பதற்கான காரணம் என்ன?
பதில் - இச்சந்தர்ப்பத்தில் நாம் அதிக கவனம் செலுத்தியிருப்பது நோய் பரவலைத் தடுத்துக் கொள்வதிலேயே. எனினும் நோய் எவ்வாறு ஆரம்பித்தது என்பதைக் கண்டுபிடிப்பதையும் நாம் மறந்துவிடவில்லை. மிக விரைவில் பதில் கிடைக்கும்.
கேள்வி - முதலாவது அலை ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் நாடே முடக்கப்பட்டது. அதனால் நோய் பரவலைக் கட்டுப்படுத்த முடிந்ததல்லவா?
பதில் - எமக்கு இதற்கு முன்னர் இவ்வாறான அனுபவங்கள் இல்லாத காரணத்தினால்தான் நாட்டை முடக்கி நோயைக் கட்டுப்படுத்தினோம். எனினும் இப்போது முதல் சந்தர்ப்பத்தின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு நோய் பரவலைத் தடுத்துக் கொண்டு பொருளாதாரத்தையும் பாதுகாத்து செயற்படுவதற்கு எம்மால் முடியும்.
கேள்வி - என்றாலும், அந்த அனுபவங்களுக்கு அமைய செயற்படுவதையோ அல்லது நோய் தொடர்பான அச்சத்தையோ மக்களிடத்தில் காண முடியவில்லையே?
பதில் - ஆம். அது மிகத் தெளிவான விடயம். முதலாவது அலை ஏற்பட்ட சந்தர்ப்பத்தைப் போன்று இம்முறையும் நாம் மக்களைக் காப்பாற்றுவோம் என்பது அனேகமானோரின் நம்பிக்ைகயாக உள்ளது. பொதுமக்கள் சுகாதார துரையினரின் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுவதாகத் தெரியவில்லை. நான் இறுதிச் சடங்கு இடம்பெறும் வீடொன்றைக் கண்டேன். அங்கு அதிக எண்ணிக்கையானோர் ஒன்று கூடியிருந்தார்கள். மதுபான விற்பனை நிலையத்தில் முண்டியடித்துக் கொண்டு நிற்கின்றார்கள். முகக் கவசம் இல்லை. தமக்கு நெருக்கமான உறவினர்கள் மரணித்தால்தான் நோயின் ஆபத்து விளங்குகின்றது.
கேள்வி - இந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் ஊடாக இந்நோய் பரவுவதற்கான ஆபத்துக்கள் இல்லையா?
பதில் - வைரஸ் பரவும் காலம் ஒன்றுள்ளது. வெளிநாட்டிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் போது அப்பொருள் ஓரிரு மணி நேரத்திற்குள் நாட்டிற்கு வருவதில்லை என்பது எம் எல்லோருக்கும் தெரியும். துறைமுகத்தில், சுங்கப் பிரிவில் தேவையான விடுவிப்புக்களைச் செய்த பின்னரே அவை நாட்டிற்குள் செல்கின்றது. அதபோன்று துறைமுக வளாகத்தினுள் தேவையான அனைத்து தொற்று நீக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
கேள்வி - இம்முறை மினுவங்கொடை கொத்தணியை எடுத்துக் கொண்டால் சுகயீன நிலையில் கூட பணியாளர்களுக்கு விடுமுறை வழங்கப்படாமல் இருந்துள்ளமை தெரிகின்றது. அதன் ஊடாகவும் நோய் பரவல் ஏற்பட்டிருப்பதும் தெரிகின்றது. தமது தொழிலுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்ற காரணத்தினால் பணியாளர்கள் முறைப்பாடு செய்யவும் பயப்படுகின்றார்கள். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பணியாளர்களால் செய்யக் கூடியது என்ன? அந்த நிறுவனங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் என்ன?
பதில் - பணியாளர்களால் கண்டிப்பாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் அல்லது வேறு சுகாதாரத் துறையினருக்கு அறிவிக்க முடியும். குறித்த நிறுவனங்கள் தொடர்பில் தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களுக்கு அமைய நடவடிக்கை எடுக்க முடியும்.
கேள்வி - வீட்டினுள்ளேயே தனிமைப்படுத்தல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது இந்த இரண்டாவது அலையில் அதிகளவானோர் நோய்வாய்ப்பட்டதாலேயே என சமூகத்தில் கருத்து நிலவுகின்றது. இதில் உண்மை உள்ளதா?
பதில் - இல்லை. எந்த உண்மையும் இல்லை. முதலாவது அலை ஏற்பட்ட போது எமது நாட்டில் அங்கொடை ஐ.டி.எச் வைத்தியசாலையில் மாத்திரமே சிகிச்சைக்கான வசதிகள் இருந்தன. அங்கும் 150 கட்டில்களே இருந்தன. நோய் பரவாமல் இருக்கும் வகையில் பாதுகாப்பை வழங்கி, சில தினங்களினுள் அனைத்து நோயாளர்களுக்கும் வசதிகளை வழங்க எம்மால் முடிந்திருக்கின்றது. மக்களின் கோரிககைகளையடுத்தே தொற்றாளர்களுக்கு நெருக்கமானவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்ததினோம். தொற்றாளர்களின் எண்ணிக்ைக 10 ஆயிரத்தை தாண்டிய பின்னரும் நாம் ஆயத்தமாகவே இருக்கின்றோம்.
கேள்வி பிரதான பீ. சீ. ஆர் பரிசோதனை இயந்திரம் பழுதடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பரிசோதனை அறிக்கைகளைப் பெற்றுக் கொள்வதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதல்லவா?
பதில் - அந்த இயந்திரத்தினை மிகத் துரிதமாகத் திருத்தி வழமைக்குக் கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். இயந்திரம் பழுதடைந்துள்ளது என்பதற்காக எமது செயற்பாடுகளில் தடைகள் ஏற்பட வில்லை.
கேள்வி - நாட்டின் பாதுகாப்பை மேற்கொள்ளும் பணிகளுக்கு மத்தியில் இவ்வாறான சிறப்பான பணியை மேற்கொள்ளும்போது இராணுவத்தினருக்கு ஓய்வே கிடைக்காதே?
பதில் - கடந்த ஒன்றரை மாதகாலமாக நாளொன்றுக்கு 3 அல்லது 4 மணிநேரத்துக்கு மேல் உறங்கியதாக நினைவிலில்லை. அர்ப்பணிப்பே எமது பணியாகும். நாம் இதற்காகப் அர்ப்பணிப்புச் செய்கின்றோம். இதற்காக அனைத்து இராணுவத்தினரும் ஆயத்தமாகவே இருக்கின்றார்கள். “முடியாதது எதுவுமில்லை” என்பதுவே இராணுவத்தின் கொள்கை வாக்கியமாகும்.
கேள்வி - ஏனைய துறைகளின் ஒத்துழைப்பு எவ்வாறுள்ளது?
பதில் - மிகச் சிறப்பாக உள்ளது. பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள், அனைத்து அரச துறை ஊழியர்கள் என அனைத்து தரப்பிலிருந்தும் உயர்ந்த மட்டத்தில் ஒத்துழைப்பு கிடைக்கின்றது. பொது மக்களின் ஒத்துழைப்பும் சரியான முறையில் கிடைக்குமாயின் நோயைக் கட்டுப்படுத்துவது மிக இலகுவாகும்.
கேள்வி - தொற்று நோய் இன்னமும் சமூகப் பரவலாக ஆகவில்லை எனக் கூறப்படுகின்றது. எனினும் 21 மாவட்டங்களுக்கும் அதிக பிரதேசங்களுக்கும் பரவியிருக்கின்றது. இந்நிலையினை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில் நான் ஒரு வைத்தியன் அல்ல. விசேட வைத்திய நிபுணர்களே இது தொடர்பில் பரிந்துரைகளை வழங்குகின்றார்கள். அவர்கள் வழங்கும் ஆலோசனைகளுக்கு அமைவாக இது சமூகப் பரவலாக ஆகவில்லை என்றே எமக்கும் தெரிகின்றது.
கேள்வி - இந்த தொற்று அதிகளவில் பரவுவதற்கு முன்னர் தடுத்துக் கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடைமுறைகள் யாவை?
பதில் - துரிதமாகவே நோயைக் கட்டுப்படுத்திக் கொள்வதே எமது நோக்கம். உலகளாவிய தொற்றாக உள்ள இந்த நோயினைத் தடுக்கத் தேவைப்படும் காலத்தினைக் கணித்துக் கூறுவதற்கு உலகில் உள்ள எவராலும் முடியாது. நாம் தினமும் ஓரிரு மணி நேரம் கண்டிப்பாக ஜனாதிபதி மற்றும் ஏனை அனைத்து தரப்பினருடனும் நோய் பரவலைக் கட்டுப்படுத்தல் தொடர்பிலும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் பேசுகின்றோம். இதில் தொடர்புடைய அனைத்து துறைகளின் அதிகாரிகளும் கலந்து கொள்கின்றார்கள்.
கேள்வி - முதலாவது அலையின் போது கடற்படையில் கொத்தணி தோன்றியது. தற்போது பொலிஸில் 19 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டிருக்கின்றது. இன்னும் சிலர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள். இராணுவத்திலும் குறிப்பிடக் கூடியளவினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்றும் எமக்கும் தெரியும். முன்னைய கடற்படையினரைப் போன்று நோய் பரவல் ஏற்படாமலிருப்பதற்காக ஏதாவது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றதா?
பதில்- ஆம். கண்டிப்பாக மக்களுடன் அடிக்கடி தொடர்புகளைப் பேணும் பாதுகாப்புத் தரப்பு அங்கத்தவர்கள் பிரதான முகாமோடு தொடர்பில்லாதவாறு தங்க வைக்கப்பட்டிருக்கின்றார்கள். அதேபோன்று இராணுவ வீரர்கள் விடுமுறையில் செல்வதற்கு முன்னரும், விடுமுறையில் சென்று திரும்பி வரும் போதும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரே முகாமினுள் அனுமதிக்கப்படுகின்றார்கள். அவர்களால் நோய் பரவுவதில்லை. இது மாத்திரல்ல, அவர்களுக்காக உள்நாட்டு மருந்துகள் கூட வழங்கப்படுகின்றது. எனது மேசையின் மீதும் தேசிய மருந்து போத்தல் ஒன்றுள்ளது. நானும் அதனை காலை, பகல், இரவு மூன்று வேளையும் அருந்துகின்றேன். அவ்வாறான நடைமுறைகளையும் மேற்கொண்டிருக்கின்றோம்.
எமது உள்நாட்டு வைத்திய முறையானது மிக உயர் நிலையிலுள்ளது. ஜனாதிபதியும் உள்நாட்டு முறைகளைப் பாராட்டுகின்றார். நாம் உள்நாட்டு மருத்துவ முறைகளின் பக்கம் ஆர்வம் காட்ட வேண்டும்.
தொற்றைக் கட்டுப்படுத்த நாம் தயாராகவே இருக்கின்றோம் - கொரோனா நிலவரம் தொடர்பில் சவேந்திர சில்வா நேர்காணல்
Reviewed by Author
on
November 02, 2020
Rating:

No comments:
Post a Comment