13 திருத்தத்தை அமுல்படுத்த இடமளிக்க முடியாது கம்மன்பில எதிர்ப்பு
13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்த இடமளிக்க முடியாது என்றும் ஆகவே இதற்கு எதிராக தென் இலங்கையில் எதிர்ப்பை ஒன்றிணைப்போம் என்றும் உதய கம்மன்பில தெரிவித்தார்.
13 பிளஸ் என்ற நோக்கத்துடன் செயற்பட்டதாலேயே மஹிந்த ராஜபக்ஷ கடந்த 2015 ஆம் ஆண்டு மக்களால் புறக்கணிக்கப்பட்டார் என்றும் பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் 13 அமுல்படுத்த ஜனாதிபதி எடுக்கும் முயற்சிகள் ஒருபோதும் வெற்றிப்பெறாது என்றும் கூறினார்.
கொழும்பில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய உதய கம்மன்பில, 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக கூறிக்கொண்டு ஜனாதிபதி பிரச்சினைகளை தோற்றுவிக்க முயற்சி செய்கின்றார் என்றும் குற்றம் சாட்டினார்.
அரசியலமைப்பின் ஒரு திருத்தமாக காணப்படும் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த புதிதாக சட்டத்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏதும் கிடையாது என்றும் 13 பிளஸ் அமுல்படுத்த ஜனாதிபதி முயற்சிக்கிறார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதேவேளை விகிதாசார தேர்தல் முறைமையை இரத்து செய்ய முற்பட்டால் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சிறுபான்மை சிங்களவர்கள் உள்ளூராட்சி சபைகளுக்கான பிரதிநிதித்துவத்தில் பாதிக்கப்படுவார்கள் என்றும் உதய கம்மன்பில தெரிவித்தார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்கள், முஸ்லிம்கள் குறித்து கவனம் செலுத்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிங்களவர்களை இரண்டாம் பட்சமாக்கியுள்ளார் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
Reviewed by Author
on
August 13, 2023
Rating:


No comments:
Post a Comment