தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 17 மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (24) அதிகாலை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 17 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 7 ஆம் திகதி (07-01-2025) வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (24) அதிகாலை தலை மன்னார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 17 மீனவர்களும் தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு முதற்கட்ட விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளின் விசாரணையின் பின்னர் மதியம் 1 மணியளவில் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் 17 சந்தேக நபர்களையும் ஆஜர்படுத்திய நிலையில் 17 மீனவர்களையும் எதிர்வரும் 7 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த மீனவர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத இழுவை மடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் இரண்டு ரோலர் படகுகள் உட்பட அதில் மீன்பிடியில் ஈடுபட்ட 17 மீனவர்களையும் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Author
on
December 24, 2024
Rating:






No comments:
Post a Comment