மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் புதிதாக முன்னெடுக்கப்படும் காற்றாலை மின் உற்பத்தி,கணிய மணல் அகழ்வுக்கு எதிர்ப்பு.
மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான உப்பாலி சமரசிங்க தலைமையில் இன்று புதன்கிழமை(28) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான றிசாட் பதியுதீன், காதர் மஸ்தான், ரவிகரன், முத்து முஹம்மட், ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குறித்த அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் மாவட்ட அபிவிருத்தி சார்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது .
இதன் போது மன்னார் மாவட்டத்தில் புதிதாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்கு பல்வேறு தரப்புக்களினால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மேலும் மன்னாரில் கனிய மணல் அகழ்வு முன்னெடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடுகளுக்கும் குறித்த கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் கனிய மணல் அகழ்வுக்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள் குறித்து எதிர்ப்பு தெரிவித்த தோடு,இதனால் மன்னார் தீவில் ஏற்படப்போகும் அபாய நிலை குறித்தும் தெரியப் படுத்தியதோடு, மன்னார் தீவில் கணிய மணல் அகழ்வுக்கு தமது எதிர்ப்பையும் தெரிவித்தனர்.
இதேவேளை இன்றைய தினம் புதன்கிழமை (28) இடம் பெற்ற மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கனிய மணல் அகழ்வு குறித்து முடிவு எடுக்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட போதும் குறித்த கூட்டத்தில் கனிய மணல் அகழ்வு குறித்து எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை.
மேலும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
குறித்த கூட்டத்தில் பிரதேச பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், முப்படை பிரதானிகள், அரச பதவி நிலை உத்தியோகத்தர்கள், என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment