தலைமன்னார் புனித லோறன்சியார் ஆலயத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வு.
நேற்று 18 தலைமன்னார் புனித லோறன்சியார் தேவாலய பிரதான வாயிலில் தலைமன்னார் பங்குத்தந்தை அருட்பணி.டெனி கலிஸ்டஸ் மற்றும் திருக்குடும்ப கன்னியர் சபையின் அருட்சகோதரிகள் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம் பெற்றது.
இந்த நிகழ்வின் முதல் நிகழ்வாக இறுதி யுத்தத்தில் இறந்து போன மக்களை நினைத்து பங்குத்தந்தை பங்கு மக்கள் முன்னிலையில் சுடர் ஏற்றினார்.
அதனைத் தொடர்ந்து மக்கள் ஆலயத்தை நோக்கி பேரணியாக சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு பாதையின் முன்னிலையில் மரியாதை செலுத்தி மலர் கொத்துக்களை அங்கு வைத்த பினர் மெழுகுவர்த்திகளை ஏற்றி இறந்து போன தம் உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து வழிபாடு இடம்பெற்றது.
இவ்வழிபாட்டில் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக வாசிக்கப்பட்டமையுடன், இறந்து போன காணாமல் ஆக்கப்பட்ட மக்களுக்காக மன்றாட்டுக்களும் இறைவனிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
தொடர்ந்து ஆலயத்தின் பிரதான வாயிலில் வைத்து முள்ளிவாய்க்கால் கஞ்சி மன்னார் மறைமாவட்டத்தின் குரு முதல்வர் அருட்பணி.கிறிஸ்து நேச ரட்ணம் அடிகளாரினால் ஆசீர்வதிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் மறைமாவட்ட குருக்களும் கலந்து கொண்டமையுடன், நிகழ்வை கத்தோலிக்க இளைஞர் ஒன்றிய உறுப்பினர்கள் சிறப்பாக ஒழுங்குபடுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment