மன்னார் சௌத்பார் பகுதியில் கணிய மணல் அகழ்வு குறித்து மக்கள்,மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் திடீர் கலந்துரையாடல்-கணிய மணல் அகழ்வுக்கு மக்கள் எதிர்ப்பு
மன்னாரில் கரையோர பகுதிகளில் கனிய மணல் அகழ்வுக்கு மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மன்னார் தீவு பகுதியில் கனிய மணல் அகழ்வு முன்னெடுப்பது தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை (16) காலை சௌத்பார் மன்னார் பகுதியில் இடம்பெற்றது.
-மன்னார் மாவட்ட கடற்தொழில் உதவி பணிப்பாளர் ரமேஷ் கன்னா தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் கணிய மணல் அகழ்வை முன்னெடுக்கும் நிறுவனத்தின் பிரதி நிதிகள் மற்றும் அப்பிரதேசத்தில் உள்ள மீனவ அமைப்புகளின் பிரதி நிதிகள் மற்றும் அப்பகுதி மக்களும் கலந்து கொண்டனர்.
குறித்த கலந்துரையாடல் திடீரென ஏற்பாடு செய்யப்பட்டமை தொடர்பாக தமது விசனத்தை தெரிவித்ததோடு,இப்பிரதேச மக்களின் முழுமையான சம்மதம் இன்றி இப்பிரதேசத்தில் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்க தாம் அனுமதிக்க மாட்டோம் என குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
குறித்த கூட்டத்தில் கலந்து கொண்ட பலர் கணிய மணல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் குறித்த கூட்டம் தீர்மானம் இன்றி நிறைவடைந்துள்ளது.
இதன் போது குறித்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் கருத்து தெரிவிக்கையில்,,,
கணிய மணல் அகழ்விற்கு மக்களின் அனுமதி பெற்றுக் கொள்வதற்காக குறித்த கலந்துரையாடல் திடீர் என ஏற்பாடு செய்யப்பட்டது.இதன் போது மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதாகவும் மக்களின் கஷ்டங்களை போக்குவதாகவும் அவர்கள் கூறி மக்களை மயக்கி அனுமதி பெற்றுக் கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார்கள்.
கணிய மணல் அகழ்வினால் இக்கிராமம் முழுமையாக பாதிக்கப் படும்.
எமது கிராம கரையோரப்பகுதியில் கணிய மணல் அழ்வுக்காக எங்களிடம் அனுமதி கேட்கின்றனர்.
அனுமதி வழங்கினால் மக்கள் இங்கே வாழ முடியாத நிலை ஏற்படும்.இதனால் நாங்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.
எனவே இப்பகுதியில் கணிய மணல் அகழ்வுக்கு நாங்கள் எதிர்ப்பை தெரிவிக்கின்றோம்.என அவர்கள் மேலும் தெரிவித்தனர்

No comments:
Post a Comment