அண்மைய செய்திகள்

recent
-

வடக்கு கூட்டுறவுதுறையில் பெரும் ஊழல் மோசடி! சாதாரண பணியாளர்கள் பாதிப்பு: சரவணபவன் எம்.பி


வடக்கில் கூட்டுறவுத்துறை சீர் குலைந்து போயுள்ளது. ஊழல் மோசடி நிர்வாகங்களால் ஏற்பட்ட சீரழிவுகளினால் சாதாரண பணியாளர்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவித்துள்ளார்.


எனவே அந்த நிர்வாகங்களை உடன் கலைத்து புதிய நிர்வாகங்களை உடன் தெரிவு செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் நேற்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

சபையில் நேற்று நடைபெற்ற பட்ஜெட் வாக்கெடுப்பு விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:

கூட்டுறவுத் துறையைச் சேர்ந்த பணியாளர்களின் சம்பள அதிகரிப்புப் பற்றி இந்த வரவு-செலவுத் திட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படாமை வருத்தமளிக்கும் ஒரு விடயமாகும். கடந்த காலத்தில் இடம்பெற்ற சிறு சிறு சம்பள உயர்வுகளும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இப்படியாக அந்தப் பணியாளர்கள் குறைந்த ஊதியத்தில் வேலை வாங்கப்படுவதற்கு அந்தந்தக் கூட்டுறவுச் சங்கங்கள் நட்டத்தில் இயங்குவதாகக் காரணம் காட்டப்படுகிறது.

அரசியல் தலையீடு

ஒரு காலத்தில் வடபகுதியில் கூட்டுறவுச் சங்கங்கள் மிகவும் சிறப்பாக இயங்குவதில் பல அரிய உதாரணங்களை வெளிப்படுத்தின. ஆனால் கடந்த அரசின் ஆட்சிக் காலத்தில் சங்கங்களின் நிர்வாகத்தில் அதீதமான அரசியல் தலையீடு மேற்கொள்ளப்பட்டது. அரசியல்வாதிகளின் எடுபிடிகள் நிர்வாக பீடங்களில் நியமிக்கப்பட்டனர்.

ஊழல்கள், மோசடிகளில் ஈடுபட்டு விட்டு அரசியல் செல்வாக்கினால் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக் கொண்டனர். அதன் காரணமாகவே சங்கங்கள் நட்டத்தில் இயங்கும் நிலை ஏற்பட்டது.

சர்வாதிகாரத்தின் சீரழிவுகளால் ஏற்பட்ட நட்டத்தின் சுமை சாதாரண பணியாளர்களின் தலையிலேயே சுமத்தப்பட்டது.

எனவே ஏற்கனவே ஆதிக்கம் வகிக்கும் ஊழல், மோசடி நிர்வாகங்கள் கலைக்கப்பட்டு கூட்டுறவுத் துறையில் அறிவும், அனுபவமும் வாய்ந்த நேர்மையான மனிதர்கள் நியமிக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளைக் கூட்டுறவுத்துறை அமைச்சரும், அவர்களின் ஊதியத்தை உயர்த்த நிதியமைச்சரும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நான் இந்தச் சபையில் எனது வேண்டுகோளை முன்வைக்கிறேன்.

தனித்துவ பட்ஜெட்

இந்த நாடாளுமன்றம் பல வரவு - செலவுத் திட்டங்களைச் சந்தித்துள்ளது. ஆனால் தற்சமயம் சமர்ப்பிக்கப்பட்ட வரவு-செலவுத் திட்டம் மக்களுக்கு மிக அதிகமான அனுகூலங்களை வழங்கியதன் மூலம் ஒரு தனித்துவமான சாதனையை வெளிப்படுத்தியுள்ளது.

அத்தியாவசியப் பொருள்களின் விலை குறைப்பு, அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு போன்ற எதிர்பாராத வகையிலான வரப்பிரசாதங்களை இந்த வரவு - செலவுத் திட்டம் வழங்கியதன் மூலம் இந் நாட்டு மக்களின் மனதைக் குளிர வைத்துள்ளது.

கடந்த அரசில் இடம்பெற்ற வீண் விரயங்கள், ஆடம்பரச் செலவீனங்கள், லஞ்ச ஊழல் மோசடி நடவடிக்கைகளின் தாக்கங்களைக் குறைத்து மக்களுக்கு நன்மைகளை வழங்கும் வகையிலான இந்த அரசின் நன் முயற்சியின் ஒரு பகுதியாகவே இதை நான் பார்க்கிறேன்.

மக்களுடன் நெருக்கமாக உறவாடி, அவர்களின் குறைநிறைகளையும் உணர்வுகளையும் புரிந்துகொள்ளக் கூடிய பெருமைமிகு ஊடகத் துறையுடன் தொடர்புடையவன் என்ற வகையிலும், மக்களின் தேவைகளை இச்சபையில் சமர்ப்பித்து நிவாரணங்களைக் கோரும் கடப்பாடு உடைய ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும் இங்கு நான் சில விடயங்களைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

பெரும்பான்மையான மக்கள் மகிழ்ச்சி கொள்ளத்தக்க வகையில் இந்த வரவு - செலவுத் திட்டம் அமைந்துள்ள போதிலும் கூட ஒரு சில தரப்பினர் எதிர்பார்த்த அளவுக்கு நிறைவேற்றப்படவில்லை எனக் குறைபாடுவதை என்னால் அறிய முடிந்துள்ளது.

தனியார்துறை பங்களிப்பு

இன்றைய பெருளாதாரக் கட்டமைப்பில் நாட்டின் ஒட்டுமொத்த அபிவிருத்தியிலும், பொருளாதார முன்னேற்றத்திலும் தனியார் துறை ஒரு மிக முக்கியமான பங்களிப்பை வழங்கி வருகிறது என்பதை மறந்து விடமுடியாது. இந்தத் துறையின் மேம்பாட்டில் இத்துறை சார்ந்த ஊழியர்களின் உழைப்பே மூலாதாரமாக விளங்கி வருகிறது.

எனினும் இங்கு சமர்ப்பிக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டத்தில் அரச பணியாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படும். கடந்த காலங்களில் பல பெருந் தோட்டங்களில் முறையற்ற நிர்வாகம் காரணமாகவும், பராமரிப்பு, மீள் நடுகை என்பவற்றில் போதியளவு கவனம் செலுத்தப்படாமையினாலும் தேயிலை உற்பத்தியில் பாரிய பின்னடைவை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

இலங்கை தேயிலையின் உலகத் தரப்பங்கு இருந்த மதிப்பிலும் சரிவு ஏற்படும் நிலைதோன்றியது. ஆனால் தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரும் போதெல்லாம் இலாபமின்மை ஒரு காரணமாகக் காட்டப்பட்டது.

எனவே இத்தகைய குறைபாடுகள் களையப்படும் போது தொழிலாளர்கள் சம்பளம் உயர்த்தப்படுவதில் சிக்கல் இருக்கமுடியாது. எனவே பெருந்தோட்டத்துறை அமைச்சர் இந்த விடயங்களில் கூடுதல் கவனம் செலுத்தும் அதேவேளையில் தோட்டத்தொழிலாளர்களின் சம்பளத்தை மாதம் 5ஆயிரம் ரூபாவால் அதிகரிக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஓய்வூதியம் அதிகரிக்க வேண்டும்

எந்த அரசு ஆட்சியிலிருந்தாலும் கூட அரச நிர்வாகத்தைக் கொண்டு நடத்துவதில் அர்ப்பணிப்புடன் பணியாற்றுபவர்கள் அரச சேவைப் பணியாளர்களே. அவர்கள் தமது சேவைக்காலம் நிறைவடையும் போது அவர்களுக்கு அரசால் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. தமது வாழ்நாளில் முக்கிய பகுதிகளை நாட்டுக்காகச் சேவை செய்து வழங்கிய அவர்களைக் கெளரவிப்பதும், அவர்கள் கடைசிக் காலத்தில் நிம்மதியாக வாழ வழி செய்வதும் அரசின் கடமையாகும்.

அவ் வகையிலேயே சிரேஷ்ட பிரஜைகளான அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. எனினும் இங்கு சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு - செலவுத்திட்டத்தில் ஓய்வூதியர்களுக்கு ஆயிரம் ரூபா மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. அரச ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபா ஊதிய உயர்வு வழங்கப்படும் போது ஓய்வூதியர் களுக்கு ஆயிரம் ரூபா மட்டுமே வழங்கப்படுவது கவலையளிக்கும் ஒருவிடயமாகும்.

இன்றும் சில ஓய்வூதியர்கள் ஓய்வூதியம் மூலமே தமது குடும்பத்தைப் பராமரிக்க வேண்டிய நிலையில் உள்ளனர் என்பதையும் நாம் இங்கு கவனத்தில் எடுக்கவேண்டும்.

குறிப்பாக வடபகுதியில் பல ஓய்வூதியர்கள் போர் காரணமாக உழைக்கும் தகைமையுள்ள தங்கள் பிள்ளைகளை இழந்துள்ளனர். பலர் ஊனமுற்ற பிள்ளைகளைப் பராமரிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். கணவன்மாரை இழந்து தங்கள் பெண் பிள்ளைகளையும், தகப்பன் தாயை இழந்த பேரப் பிள்ளைகளையும் கவனிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

இப்படியாகச் சில பிரத்தியேகப் பிரச்சினைகளையும் சந்திக்கும் ஓய்வூதியர்களுக்கு இந்த ஆயிரம் ரூபா உயர்வு ஏமாற்றமளிப்பதாகவே உள்ளது. எனவே ஆரம்பத்தில் கூறப்பட்ட தைப் போன்று குறைந்த பட்சம் அவர்களுக்கு 3ஆயிரம் ரூபாவாக ஓய்வூதிய உயர்வு வழங்கப்பட வேண்டும்.

2004ஆம் ஆண்டுக்கு முன்பு ஓய்வூதியம் பெற்றவர்களுக்கும், பின்பு ஓய்வு பெற்றவர்களுக்குமிடையே கொடுப்பனவில் வேறுபாடு உள்ளது. இந்த வேறுபாடு விரைவில் சரி செய்யப்படும் எனப் பலமுறை வாக்களிக்கப்பட்டும் இன்றுவரை அது தொடர்பாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகத் தெரியவில்லை. அது தொடர்பாகவும் நிதியமைச்சரும், ஓய்வூதியத் திணைக்களமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
வடக்கு கூட்டுறவுதுறையில் பெரும் ஊழல் மோசடி! சாதாரண பணியாளர்கள் பாதிப்பு: சரவணபவன் எம்.பி Reviewed by NEWMANNAR on February 08, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.