கச்சதீவு அந்தோனியார் திருவிழா பல ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கான போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவில் இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளவுள்ள நிலையில் அவர்களுக்கான போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ் நெடுந்தீவு பங்குத் தந்தை அன்ரனி ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார்.
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் யாழ் மாவ ட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தலைமையில் நேற்றையதினம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பங்குத் தந்தை மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
எதிர்வரும் 21-ம் திகதி இடம்பெறவுள்ள கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் இரண்டு நாடுகளிலிருந்தும் கலந்து கொள்ளவுள்ள பக்தர்களுக்கான உணவு வசதிகள் மற்றும் குடிநீர், சுகாதார வசதிகள் முப்படையினரால் மேற்கொள்ளப்படவுள்ளது.
இலங்கையிலிருந்து செல்லவுள்ள பக்தர்கள் எதிர்வரும் 20-ம் திகதி சனிக்கிழமை காலை 4 மணி முதல் நண்பகல் 1.30மணி வரை யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலிருந்து குறிகட்டுவன் வரை பேருந்தில் பயணித்து அங்கிருந்து படகு மூலம் கச்சதீவு நோக்கி பயணிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
இதேவேளை எதிர்வரும் வரும் 20-ம் திகதி மாலை 4மணிக்கு கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகி 21-ம் திகதி ஞயிற்றுக் கிழமை காலை 6.30 மணிக்கு திருவிழா திருப்பலி யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரீன் பேணாட் ஞானப்பிரகாசம் தலைமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட வுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் கடற்படையினர், பொலிஸார், பிரதேச செயலாளர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கச்சதீவு அந்தோனியார் திருவிழா பல ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கான போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன
Reviewed by NEWMANNAR
on
February 09, 2016
Rating:
No comments:
Post a Comment