நானாட்டான் புதுக்குடியிருப்பு கிராமத்தில் காணி அபகரிப்பு: ஜனாதிபதிக்கு கடிதம்
நானாட்டான், புதுக்குடியிருப்பு, சூரிய கட்டைக்காடு கிராமத்தில் உள்ள காணிகள் உரிய முறையில் எல்லையிடப்பட்டுள்ளதா? என பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் எவரும் வருகை தந்து பார்வையிடவில்லை என அக்கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
அவ்விடையம் தொடர்பாக அக்கிராம மக்கள் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை இன்று அனுப்பி வைத்துள்ளனர்.
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்படுகையில்,
நானாட்டான் புதுக்குடியிருப்பு கிராமத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் அளவீடு செய்யப்பட்டு எல்லைக்கற்கள் போடப்பட்ட இடங்களை நில அளவைகள் திணைக்களத்தினால் அனுப்பப்பட்ட அதிகாரிகள் கடந்த 3 ஆம் திகதி வருகை தந்து பார்வையிட்டனர்.
குறித்த எல்லைக்கற்கள் சரியான முறையில் போடப்பட்டுள்ளதாக வருகை தந்தவர்கள் கூறிச் சென்றுள்ளனர்.
ஆனால் குறித்த காணிகளை உரிய அதிகாரிகள் வந்து பார்வையிடவில்லை என்பது எமக்கு மிகவும் வேதனையளிக்கின்றது.
குறித்த காணிகளுக்குள் தனி நபர்கள் 4 பேர் பிரச்சினைகளாக உள்ளனர். குறித்த தனி நபர்களுக்கு அக்காணிகளை கடந்த 1989 ஆம் ஆண்டளவில் 'போமிற்' அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ஆனால் எமது மக்களும் இங்கு குடியிருந்துள்ளனர்.மேற்குறித்த தனி நபர்கள் 4 பேருக்கும் கடந்த 1989 ஆம் ஆண்டு போமிற் வழங்கப்பட்டதன் பின் அவர்கள் பராமரிப்பு செய்த காணிகள் என்று கூறி இக்கிராம மக்கள் குடியிருந்த மேட்டு நிலக்காணிகளை உரிமை கோரி வருகின்றனர்.
இந்த மக்கள் யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து இந்தியா சென்ற நிலையில் குறித்த 4 பேரும் இக்காணிகளில் மண் அகழ்வு மேற்கொண்டு தற்போது ஏக்கர் கணக்கில் வயற்காணிகளாக ஆக்கியுள்ளனர்.
இவர்கள் தொடர்ந்தும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு மக்களின் காணிகளை தங்களுடையது என உரிமை கோரி வருகின்றனர்.
ஆனால் எமது கிராமத்தில் உள்ள முதியோர்கள் கூறும் போது அவர்களுக்கு கால்நடைகள் பராமரிப்பு செய்வதற்கு மேட்டு நிலக்காணியில் ஒரு ஏக்கர் வீதம் 4 பேருக்கும் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.
ஆனால் இக்கிராமத்தில் திட்டமிட்ட ஒரு காணி அபகரிப்பே நடந்தேரியுள்ளது.
இக்கிராம மக்கள் யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து இந்தியா சென்ற நிலையில் எவ்வாறு இப்படியான ஒரு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.?
தற்போது இக்கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு குடியமர 20 பேர்ச் காணிகள் கூட இல்லாத நிலையில் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
எனவே இக்கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு இக்கிராம மக்களுக்கு உரிய காணிகளை மீட்டுத்தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகின்றேன் என புதுக்குடியிருப்பு,சூரிய கட்டைக்காடு கிராம மக்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நானாட்டான் புதுக்குடியிருப்பு கிராமத்தில் காணி அபகரிப்பு: ஜனாதிபதிக்கு கடிதம்
Reviewed by NEWMANNAR
on
February 09, 2016
Rating:
No comments:
Post a Comment