முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நினைவாலயம்: அமைச்சர் விஜயகலா
முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் மண்ணில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கான நினைவாலயம் வடமாகாண சபையின் பங்களிப்புடன் நிச்சயம் உருவாக்கப்படும்.
முள்ளிவாய்க்கால் நினைவு நாளை நல்லாட்சி அரசாங்கம் குழப்பப் போவதில்லை. குழப்புவதற்கு நாங்கள் இடமளிக்கப் போவதும் இல்லை என மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் ஊடகங்களுக்கு கூறியிருக்கின்றார்.
சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாக யாழ்.ஊடகவியலாளர்களுடன் இன்றைய தினம் நடைபெற்ற சந்திப்பொன்றிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.
குறித்த சந்திப்பி ல் மேலும் அவர் குறிப்பிடுகையில்,
நாம் கடந்த வருடம் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைக்கப்படும் என நான் கூறியிருந்தேன். ஆனால் வட மாகாணசபை அந்த விடயத்தில் அதிகம் கரிசனை செலுத்தி வரும் நிலையில் வட மாகாணசபை ஊடாக அதனை அமைப்பதற்கு நாங்கள் ஒத்துழைப்பினை நல்குவோம்.
மேலும் இவ்வாண்டுக்குள் அதனை அமைக்க முடியாமல் போனமை வருத்தத்திற்குரியதாயினும், அது விரைவில் அமைக்கப்படும்.
இந்த வருடமும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றால் நான் நிச்சயமாக கலந்து கொள்வேன்.
நல்லாட்சி அரசாங்கம் எங்கள் மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்வுகளை நிச்சயமாக குழப்பாது. அவ்வாறு குழப்புவதற்கு நாங்கள் இடமளிக்கப் போவதுமில்லை.
வடக்கில் இடம்பெறும் கைதுகள் தொடர்பாக,
இலங்கையில் நல்லாட்சி மலர்ந்த பின்னர் எமது அரசாங்கம் போரினால் விதவைகளாக்கப்பட்டவர்கள். அநாதைகளாக்கப்பட்டவர்கள், துணையற்றிருப்பவர்கள் போன்றவர்களின் மறுவாழ்வுக்கு உதவுவதையும், ஜனநாயகத்தை மீள உருவாக்கி அரசியல் தீர்வொன்றை தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கும் ஆன முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிக சுலபமாக யாழ்ப்பாணம் வந்து போகிறார். இந்நிலையில் இந்த முயற்சிகளை குழப்ப நினைப்பவர்கள் இங்கே வெடிபொருட்களை கொண்டு வந்து வைத்து சில சதிகளை செய்ய நினைக்கிறார்கள்.
ஆட்சியில் இருந்து துரத்தப்பட்டவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக பல சதிகளை செய்கின்றார்கள்.
அவ்வாறான முயற்சியே இதுவாகும். இதனாலேயே மக்கள் ஒன்றிணைந்து அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கின்றார்கள்.
எனவே தீய சக்திகளுக்கு துணைபோனவர்கள் கைது செய்யப்படுகின்றார்கள். அது தவிர்க்க முடியாத ஒன்றாகும். நல்லாட்சிக்கு குந்தகமான எதனையும் அங்கீகரிக்க முடியாது. ஆனால் கடந்த காலத்தை போன்று இல்லாமல் கைது செய்யப்படுகிறவர்கள். விடுதலை செய்யப்படுவார்கள்.
குடாநட்டில் வாள்வெட்டு சம்பவங்கள், ரௌடிகள் அட்டகாசம் தொடர்பாக.
இவ்வாறான சம்பவங்களுக்கு போதைவஸ்து மற்றும் குடும்ப வறுமை மற்றும் வேலையின்மை போன்ற பல காரணங்கள் இருக்கின்றன. படிப்பிற்கேற்ப இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படுமாக இருந்தால் இவ்வாறான பிரச்சினைகள் நடப்பதற்கு வாய்ப்பில்லை.
மேலும் அரசாங்கம் இந்த விடயத்தில் அக்கறை கொண்டிருக்கின்றது. இதேபோல் சட்டம் தன்னுடைய கடமையை சரியாக செய்கின்றது.
குறிப்பாக யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் உள்ளிட்ட நீதிபதிகள் சட்டத்தை மிக வலுவாக நடைமுறைப்படுத்துகிறார்கள் என்றார்.
முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நினைவாலயம்: அமைச்சர் விஜயகலா
Reviewed by Author
on
May 05, 2016
Rating:
No comments:
Post a Comment