அண்மைய செய்திகள்

recent
-

உப்பளங்கள் தனியார் மயமாக்குவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்.


கிளிநொச்சியில் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆனையிறவு மற்றும் குறிஞ்சாத்தீவு உப்பளங்களை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

காலை 9 மணிக்கு ஆனையிறவு உப்பளத்திற்கு முன்பாக ஆனையிறவு, குறிஞ்சாத்தீவு உப்பளங்களின் சுற்றயல் கிராம மக்கள் அமைப்புகள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.


ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் ஆனையிறவு உப்பளத்தின் அடையாளத்தை அளிக்காதே!, உப்புக்கூட்டுத்தாபனத்தை தனியார் மயமாக்க வேண்டாம், கூட்டாக உழைப்போம் - தனியார் மயமாக்கலை எதிர்ப்போம், எங்கள் வளத்தில் நாங்கள் வாழ்வோம், எங்கள் வளங்களைத் தனியாருக்கு விற்க அனுமதிக்கோம், பிரதேச வளங்களில் பிரதேச மக்களுக்கே முன்னுரிமை. இது எங்கள் உப்பளம், உப்பளத்தை விற்காதே! நம் உழைப்பை அழிக்காதே, போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளயும் ஏந்தியிருந்தனர்.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் அமைப்புகளால் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்று ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சி தலைவர் இரா. சம்மந்தன், நிதி அமைச்சர், வடமாகாண முதலமைச்சர், அமைச்சர் றிசாட்பதியூதீன், வடக்கு மாகாண எதிர் கட்சி தலைவர், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டதுடன் கண்டாவளை உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ம.பிரதீப் மற்றும் ஆனையிறவு உப்பள முகாமையார் ஏ.கிசோதரன் ஆகியோருக்கு மகஜர் நேரடியாக கையளிக்கப்பட்டது.



அந்த மகஜரில் குறிப்பிடபட்ட விடயமாவது,

ஆனையிறவு, குறிஞ்சாத்தீவு உப்பளங்களின் சுற்றயல் கிராம மக்கள் அமைப்புகளாகிய நாங்கள் சமர்ப்பிக்கும் மேன்முறையீட்டை தங்கள் மேலான கவனத்திற் கொண்டுவருகிறோம். எமது பிரதேச மக்களின் வாழ்வாதாரப் பாதிப்பிலிருந்து பாதுகாத்து, எமது பிரதேச பொருளாதார அபிவிருத்தியை பேணுவதற்கு உதவும்படியாக பின்வரும் எமது கோரிக்கைகளைப் பரிசீலிக்குமாறு இங்கே கேட்டுக்கொள்கிறோம்.

ஆனையிறவு மற்றும் குறிஞ்சாத்தீவு உப்பளங்கள் தனியாரிடம் கையளிக்கப்படுவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் நடைபெறுவதை அவதானிக்க முடிகிறது.

1938 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த உப்பளங்கள் 1990 வரை மிகுந்த வினைத்திறனோடு அதிக வருமானத்தை ஈட்டியுள்ளன. ஆனையிறவு உப்பளத்தின் ஆண்டுக்கான உற்பத்தி 30 ஆயிரம் மெற்றிக்தொன்னாகவும் குறிஞ்சாத்தீவு உப்பளத்தின் ஆண்டுக்கான உற்பத்தி 40 ஆயிரம் மெற்றிக் தொன்னாகவும் இருந்துள்ளது.

ஆனால், 2016 இல் 1100 மெற்றிக் தொன் உப்பு மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. இவ்விரு உப்பளங்களின் புனரமைப்புக்கு போதுமான நிதி ஒதுக்கப்படாமையே இதற்கான காரணமாகும்.



2016 நிதி அமைச்சரின் பாதீட்டு உரையில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார் 'எமது நாடு கடலால் சூழப்பட்டிருக்கிற போதும் உப்பினை இறக்குமதி செய்வது விந்தையான ஒன்றாகும்' எனவே, 1990 க்கு முன்பு நாட்டிற்குத் தேவையான உப்புக்கு மேலதிகமாக பிற நாடுகளுக்கும் ஆனையிறவு உப்பை ஏற்றுமதி செய்யப்பட்ட காலம் ஒன்றிருந்தது.

அதேவேளை இந்த உப்பளங்களின் சுற்றயற் கிராமங்களின் மக்களுக்கான வாழ்வாதாரத்தை இந்த உப்பளங்களே பெரும்பாலும் வழங்கி வந்தது. எனவே இந்த உப்பளங்களைத் தொடர்ந்தும் அரச கூட்டுத்தாபனமாக இயக்குவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து, அதிக உற்பத்தியினை மேற்கொள்ளக்கூடிய நிதி ஒதுக்கீட்டை ஏற்படுத்தி, இந்தப் பிரதேச மக்களின் வாழ்வாதாரத்திற்கும், அதிக உற்பத்திக்கும் சாதகமான நிலைமைகளை உருவாக்கித் தருமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சமத்துவம், சமூகநீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் கருத்து தெரிவிக்கும்போது

ஆனையிறவு மற்றும் குறிஞ்சாத்தீவு உப்பளங்களை தனியார் மயமாக்குவது என்பது இந்த பிரதேச மக்களுக்கு செய்யும் பாரிய அநீதியாகும் அதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இந்த பிரதேச மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வகையில் இந்த உப்பளங்கள் தனியார் மயமாக்கும் முயற்சி கண்டிக்கத்தக்க விடயம். எனவே இந்த விடயத்தில் அரசியலுக்கு அப்பால் மக்களின் நலன்சார்ந்து நாம் அனைவரும் உப்பளங்கள் தனியார் மயமாக்குவதற்கு எதிராக செயற்படவேண்டும். இது மக்களின் வாழ்க்கையோடு சம்மந்தப்பட்ட விடயம் எனவே அரசின் தனியார் மயமாக்கல் விடயத்தை இந்த மக்களின் சார்பாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

உப்பளங்கள் தனியார் மயமாக்குவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம். Reviewed by NEWMANNAR on December 07, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.