அண்மைய செய்திகள்

recent
-

பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களை அரசு இனியும் புறக்கணிப்பது ஆபத்து : சி.வி


மத்திய அரசாங்கமும் சர்வதேச அரசாங்கங்களும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். தொடர்ந்து எம் மக்களையும் அவர்களின் ஆதங்கங்களையும் அவர்களின் கோரிக்கைகளையும் புறக்கணித்து வருவது யாருக்குமே நல்லதல்ல. மக்களின் மனோ நிலையைத் தவறாகப் புரிந்து கொண்டு பிழையான நடவடிக்கைகளில் அரசாங்கம்இறங்க எத்தனித்தால் அது பாரதூரமான விளைவை ஏற்படுத்தும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்து வடக்கு மாகாண சபையின் அமர்வு ஒத்திவைக்கப்பட்டது. இதன்போது உரையாற்றும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரி விக்கையில்,

இன்று எம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விரக்தியின் அடையாளமாக ஒரு நிகழ்வு இந்நாட்டின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடைபெறுகின்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வடக்கு கிழ க்கு தழுவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பூரண ஹர்த்தால் இன்று (நேற்று) நடை பெறுகின்றது.
திருகோணமலையில் போராடிக்கொண்டிருக்கும் மக்களைக் கூட்டாக அண்மையில் சந்தித்தேன்.

அதற்கு முன்னர் வடமாகாணத்திலும் பல குழுக்களைச் சந்தித்தேன். கடந்த பல நாட்களாக காணாமற்போன தங்கள் உறவுகள் பற்றியும் இராணுவ ஆக்கிரமிப்பால் தமது காணிகளை இழந்தமை பற்றியும் இம் மக்கள் தமது வருத்தங்களையும் கரிசனைகளையும் தொடர்ச்சியான போராட்டங்கள் மூலம் எடுத்துக் காட்டி வருகின்றார்கள்.

இதுபற்றி ஜனாதிபதிக்கு நான் நீண்ட கடிதம் அனுப்பியிருந்தேன். அது பற்றி “பேசலாம் வாருங்கள்” என்று தினம் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர அவர்களுக்கு எந்தவித ஆறுதல் வார்த்தைகளும் இதுவரையில் உத்தியோகபூர்வமாக அரசாங்கத்தினால் வெளியிடப்படவில்லை என்பது மனவருத்தத்தைத் தருகின்றது. மக்கள் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் ஏதேனும் நற்செய்தி அரசாங்கத் தரப்பில் இருந்து வராதா என்ற எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றார்கள்.

பலரின் 50 நாட்களுக்கு மேலான போராட்டங்கள் உத்தியோகபூர்வமாக எந்தவித எதிர்வினையும் கொண்டு வராத நிலையில் தான் நீதிக்கான ஒரு காத்திரமான ஜனநாயக செயற்பாடு என்ற முறையில் இன்றைய  மக்கள் அணி திரள்வு இன்றைய (நேற்றைய) கடையடைப்புப் போராட்டமாக நடைபெறுகின்றது.
இந்த நிலையில் முஸ்லிம் சகோதரர்கள், சிங்கள சகோதரர்கள் அடங்கலான வடக்கு கிழக்கு சகல மக்களும் தமது மனோநிலையைப் பிரதிபலிக்கும் வண்ணம் ஒருமித்து சேர்ந்து போராடுவது கட்டாயமாகியுள்ளது.

நாம் யாவரும் இம் மக்கள் போராட்டத்திற்கு எமது ஆதரவினை எடுத்துக் காட்டுவதிலிருந்து எமது தெற்கத்தைய சிங்களச் சகோதரர்களும் மத்திய அரசாங்கமும் சர்வதேச அரசாங்கங்களும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தொடர்ந்து எம் மக்களையும் அவர்களின் ஆதங்கங்களையும் அவர்களின் கோரிக்கைகளையும் புறக்கணித்து வருவது யாருக்குமே நல்லதல்ல. மக்களின் மனோநிலையைத் தவறாகப் புரிந்து கொண்டு பிழையான நடவடிக்கைகளில் அரசாங்கம் இறங்க எத்தனித்தால் அது பாரதூரமான விளைவை எம் மக்களுக்குத்தான் ஏற்படுத்தும்.

எமது கோரிக்கைகள் நியாயமானவை. அவை எமது அடிப்படை உரிமைகள் சார்ந்தவை. ஆகவே அவற்றிற்கு தீர்வு காணுதல் அவசியம். தீர்வு காண்பதற்கு அரசாங்கம் பின்நிற்பதே அல்லது தாமதிப்பதே இன்றைய (நேற்றைய) வடக்கு கிழக்கு ரீதியான போரா ட்டத்தின் அடிப்படைக் காரணமாகும்.
எமது பொறுப்புக்கூறலை நாங்கள் தட்டிக் கழித்து வருவதால் மக்களின் மனவருத்தங்கள் மேலும் மேலும் உக்கிரமடையும் என்பதற்கு இன்றைய (நேற்றைய) பூரண ஹர்த்தால் ஒரு உதாரணமாகும்.

 இன்று (நேற்று) நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஹர்த்தாலுக்கு எம் மக்கள் காட்டும் கட்சிப் பாகுபாடற்ற கரிசனை மிக்க ஒத்துழைப்பை வடக்கு கிழக்கு மக்களின் ஒற்றுமைக்கான ஒரு அணிதிரள்வாகவே நான் காண்கின்றேன். எமது கஷ்டங்கள்,துன்பங்கள், அல்லல்கள்,அவலங்கள் ஆகியவற்றை மற்றவர்களும் புரிந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது இரவு பகலாகப் போராடும் மக்களு க்கு ஒருவித மனநிறைவை ஏற்படுத்தும்.

அத் துடன் எமது ஏகோபித்த பங்களிப்பு எமது மக்களின் ஒற்றுமையைப் பிரதிபலிக்கும்.
இதன் காரணமாகவே இன்று (நேற்று) எமது வடக்கு மாகாணசபை தனது நிகழ்ச்சிகளைச் சுருக்கி தமது ஏகோபித்த ஆதரவினை போராடும் எமது மக்களுக்கு வழங்க உத்தேசித்துள்ளது.

அவைத்தலைவரும் அதற்குத் தமது பூரண ஒத்துழைப்பை வழங்க முன்வந்திருப்பது எமது மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் கூட்டாக தமது கரிசனைகளை உலகிற்கு எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது. நாம் ஒன்றுபட்டால் தான் எமக்கு உண்டு வாழ்வு.

இதனை எம் மக்கள் உணர்ந்து கொள்ளும் காலம் இன்று உதயமாகியுள்ளது. போராடும் அனைவருக்கும் அவர்தம் ஆதரவாளர்களுக்கும் இறையாசி பூரணமாகக் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்து எனது இந்தச் சிற்றுரையை முடித்துக் கொள்கின்றேன் என முதலமைச்சர் தெரிவித்திருந்தார். 

பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களை அரசு இனியும் புறக்கணிப்பது ஆபத்து : சி.வி Reviewed by Author on April 28, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.