தமிழீழ விடுதலைக்காக முதன்முதலில் உயிர்நீத்த பொன். சிவகுமாரனின் நினைவுதினம் -
இன விடுதலைக்காக முதன்முதலில் சயனைட் அருந்தி தன்னை மாய்த்துக் கொண்ட மாவீரன் பொன். சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வுகள் யாழ். உரும்பிராய் சந்தியிலுள்ள பொன். சிவகுமாரனின் உருவச்சிலையில் இடம்பெற்றது. இதில் பொன். சிவகுமாரனின் சகோதரி சிவகுமாரி, மலர் மாலை அணிவித்து தனது அஞ்சலியை செலுத்தினார்.மேலும், குறித்த நிகழ்வுக்கு சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன். தவராசா, பரஞ்கோதி, கஜதீபன், சிவாஜிலிங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் என அனைவரும் கலந்துகொண்டிருந்தனர்.
சிவகுமாரனின் பூதவுடல் மரண விசாரணைக்குப் பின்பு பொலிஸ் பாதுகாப்புடன் அவரின் இல்லத்துக்குக் கொண்டுவரப்பட்டது. யாழ் நகரமே சோகத்தில் ஆழ்ந்தது. மக்கள் சாரிசாரியாக அஞ்சலி செலுத்த வந்தனர் பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்விமான்கள் எல்லோரும் அஞ்சலி செலுத்தினர். உரும்பிராயில் மூன்று தினங்கள் துக்கம் அனுஸ்டிக்கப்பட்டது. 7.6.1974 அன்று இறுதி ஊர்வலம் அவன் இல்லத்தில் இருந்து ஆரம்பமானது. 3 மைல் நீளமான அந்த ஊர்வலத்தில் பெரும் எண்ணிக்கையான ஆண்கள், பெண்கள், மாணவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பூதவுடல் சென். மைக்கல் தேவாலயத்திலும், உரும்பிராய் பட்டினசபையிலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டன. பொலிசார் கறுப்புக் கொடிகளைக் கழற்றினர். மீண்டும் மக்கள் பொலிசார் முன்நிலையில் கறுப்புக் கொடி கட்டிப் பொலிசாரை நிந்தித்தனர். உரும்பிராய் வேம்பன் மயானத்தில் அஞ்சலிக்கூட்டம் நடைபெற்று பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்விமான்கள், இளைஞர்கள் அஞ்சலி உரை நிகழ்த்தினர். தந்தையார் சிவகுமாரனின் பூதவுடல் வைக்கப்பட்ட சிதைக்கு தீமூட்டினார். சரித்திரத்தில் என்றும் இல்லாதவாறு மயானத்திற்கு பெண்கள், குழந்தைகள் உட்பட எல்லோரும் வந்தது இதுவே முதல் தடவையாகும்.
அன்றைய தினமே மக்களால் தியாகி பொன்.சிவகுமாரன் என அழைக்கப்பட்டார். ஆயுதப் போராட்டத்தின் முதல் போராளி என்ற வகையிலும், எதிரியிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற விளக்கத்தினைத் தெளிவுபடுத்திய வகையிலும் அத்தியாகியைதமிழ்மக்கள் போற்றுகின்றனர்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
தமிழீழ விடுதலைக்காக முதன்முதலில் உயிர்நீத்த பொன். சிவகுமாரனின் நினைவுதினம் -
Reviewed by Author
on
June 05, 2018
Rating:
No comments:
Post a Comment