அண்மைய செய்திகள்

recent
-

ஈஸ்டர் தாக்குதலுக்கு பின் அமலான அவசர காலச் சட்டம் இலங்கையில் நீக்கம்


இலங்கையில் கடந்த நான்கு மாதங்களாக அமல்படுத்தப்பட்டிருந்த அவசர காலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவிக்கின்றது.

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி இரவு முதல் அவசர கால சட்டம் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமல்படுத்தியிருந்தார்.

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் இரண்டாவது சரத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமையவே அவசர கால அமலாக்கம் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதியினால் அமல்படுத்தப்பட்ட அவசர காலச் சட்டத்திற்கு நாடாளுமன்றம் ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி அனுமதி வழங்கியது. அன்று முதல் ஒவ்வொரு மாதமும் 22ஆம் தேதி அவசர காலச் சட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீடித்து வந்திருந்தார்.

இதன்படி, ஜுலை மாதம் 22ஆம் தேதி ஒரு மாதத்திற்கு அமுல்படுத்தும் வகையிலான அவசர காலச் சட்டம் வர்த்தமானியில் கையெழுத்திட்டு, மேலும் ஒரு மாதத்திற்கு அவசர காலச் சட்டம் நீடிக்கப்பட்டிருந்தது.

ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து, பிபிசி தமிழிடம் அவசர காலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார்.

எனினும், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் போலீஸாருக்கு ஒத்துழைப்புக்களை வழங்க ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆவது சரத்திற்கு அமைய, ஜனாதிபதிக்கு காணப்படுகின்ற அதிகாரங்களை பயன்படுத்தியே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக பிரிகேடியர் சுமித் அத்தபத்து கூறினார்.

இலங்கை அவசரகால சட்டம் வழங்கும் அதிகாரம் என்ன? -
குண்டுவெடிப்பு முதல் தற்போது வரை - இலங்கையில் நடந்தது என்ன?
பாதுகாப்பு தொடர்பான தேவைக்கு அமைய, ராணுவத்தினர் போலீஸாருக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்புக்களை வழங்கி வருவதாகவும் சுமித் அத்தபத்து சுட்டிக்காட்டினார். அத்துடன், ராணுவ சோதனை சாவடிகள் தேவையேற்படும் பகுதிகளில் மாத்திரம் அவ்வாறே முன்னெடுத்து செல்லவுள்ளதாகவும் சுமித் அத்தபத்து தெரிவித்தார்.
இலங்கை ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் 253 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், நேற்றிரவுடன் இந்த அவசரகாலச் சட்ட நீடிப்பு நிறைவடைந்துள்ள பின்னணியிலேயே, மேலும் அவசர காலச் சட்டத்தை நீடிப்பதற்கான யோசனை கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற 30 வருட கால உள்நாட்டு யுத்தம் காரணமாக பல வருடங்கள் அமல்படுத்தப்பட்டிருந்த அவசர காலச் சட்டம், யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபஷவினால் ரத்து செய்யப்பட்டிருந்தது.

எனினும், இலங்கையில் ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தால் ஒன்பது வருடங்களின் பின்னர் அவசரகாலச் சட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட்டது.

ஏப்ரல் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேகநபர்களும் அவசர காலச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு பின் அமலான அவசர காலச் சட்டம் இலங்கையில் நீக்கம் Reviewed by Author on August 29, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.