அண்மைய செய்திகள்

recent
-

கற்பிட்டி விபத்து - சிறுவனின் தந்தையும் பலி!

 கற்பிட்டி - நுரைச்சோலை ஜூம்ஆ மஸ்ஜிதுக்கு முன்பாக நேற்று முன்தினம் இரவு (19) இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் காயமடைந்து ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கற்பிட்டி - தலவில பகுதியைச் சேர்ந்த வர்ணகுலசூரிய யூட் நிசாந்த (வயது 36) எனும் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் இடம்பெற்ற போது, கற்பிட்டி பகுதியிலிருந்து பாலாவியை நோக்கிப் பயணித்த மகேந்திர ரக லொறியொன்றும், எதிர்த் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த மோட்டார் சைக்கிளில் உயிரிழந்த ஐந்து வயது சிறுவன் உட்பட மூவர் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த சிறுவன் உட்பட மூவரையும் சிகிச்சைக்காக அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இதன்போது, விபத்தில் காயமடைந்த சிறுவன் அன்றிரவே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக புத்தளம் திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிசாம் தெரிவித்தார்.

மேலும், விபத்தில் படுகாயமடைந்த இருவரும் புத்தளம் தள வைத்தியசாலையில் இருந்து, மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

இந்த நிலையிலேயே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த இருவரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 உயிரிழந்த சிறுவனின் தந்தையே நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் விபத்தில் காயமடைந்த மூன்றாவது நபர் தொடர்ந்தும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்தில் உயிரிழந்த சிறுவனின் தாயார் வெளிநாட்டில் தொழில் புரிந்து வரும் நிலையில், தந்தையின் பராமரிப்பில் குறித்த சிறுவன் வாழ்ந்து வந்த நிலையில் சிறுவனும், தந்தையும் இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

விபத்தில் நேற்று உயிரிழந்த சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் இன்று அம்மம்மாவிடம் ஒப்படைக்கப்பட்டதாக புத்தளம் திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிசாம் தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற சாரதி, முறையற்ற வகையில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றமையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த விபத்து சம்பவம் இடம்பெற்ற விதம் பற்றி வீதியோரத்திலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பொருத்தப்பட்டிருக்கும் சீ.சி.ரி.வி கமராவிலும் பதிவாகியுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி சுனில் தலைமையிலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




கற்பிட்டி விபத்து - சிறுவனின் தந்தையும் பலி! Reviewed by Author on October 21, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.