அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் மொழியுரிமையை வலியுறுத்தும் தமிழ் மொழியுரிமை மாநாடு

மாற்றுக்கருத்தாடலுக்கான அமையம் எதிர்வரும் 30.11.2013 அன்று மு.ப 10 மணிக்கு கொழும்பு-10 மருதானை இடீன்ஸ் வீதியில் உள்ள சமயசமூக நிலையத்தில் (CSR HALL) தமிழ் மொழியை நாடெங்கும் அரச கரும மொழியாக அர்த்தமுள்ள வகையில் அமுல்படுத்தி தமிழ் பேசும் மக்களின் மொழியுரிமையை நடைமுறையில் உறுதி செய்வதை வலியுறுத்தி தமிழ் மொழியுரிமை மாநாட்டை நடத்தவுள்ளது. 

 இம்மாநாட்டில் கல்வித்துறை, பொது நிர்வாகத்துறை, நீதித்துறை ஆகியவற்றில் தமிழ் மொழி அமுலாக்கலில் சட்ட ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் இருக்கும் பிரச்சனைகளையும் குறைபாடுகளையும் அவற்றை தீர்ப்பதற்கான முன் மொழிவுகளையும் கொண்ட தனித்தனியாக மூன்று அறிக்கைகள் தமிழ் மக்கள் வென்றெடுக்க வேண்டிய மொழியுரிமைக்கான மக்கள் விஞ்ஞாபனமாக சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது. 

 இதன் தொடர்ச்சியாக இவ்வமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, வடக்கு கிழக்கு மட்டுமன்றி அதற்கு வெளியிலும் தமிழ் பேசும் மக்கள் அவ்ர்களது நாளாந்த அலுவல்களை செய்து கொள்வதில் தமிழ் மொழியுரிமையை நிலை நாட்டி கொள்வதற்கான, அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கைகளை மக்கள் தாமாகவே முன்னெடுப்பதற்கான வழிகாட்டல், விழிப்பூட்டும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். 

 இது வரையிலும், அரச, அரச சார்பற்ற நிறுவனங்களினால் தமிழ் மொழி அமுலாக்கல் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விட வித்தியாசமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய அடிப்படையில் அதற்கான கோரிக்கைகள் மக்கள் விஞ்ஞாபனமாக இம்மாநாட்டில் நிறைவேற்றப்படவுள்ளது. அத்துடன் இவ்வுரிமை கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கான நடவடிக்கைகளில் மக்களை நேரடியாக ஈடுபடுத்தும் வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன. 

 கடந்த பல மாதங்களாக இவ்வமைப்பு தமிழ் மொழி அமுலாக்கலில் இருக்கின்ற பிரச்சனைகள், குறைபாடுகள் பற்றி விரிவான கருத்தாடல்களை மேற்கொண்டதன் விளைவாகவே இம்மாநாடு நடத்தப்படவுள்ளது. இலங்கையின் எல்லா இனத்தவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மாநாட்டில் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள். இலங்கையின் ஆளுகை, ஜனநாயகம், மனித உரிமைகள், அபிவிருத்தி போன்ற விடயங்களில் இலங்கையின் அனைத்து மக்களினதும் அபிலாஷைகளை நிறைவேற்றும் நோக்கில் மாற்றுக்கருத்தாடல்களை நடத்தி சரியான வலுவான மக்கள் நலன் சார்ந்த கருத்தை உருவாக்குவதற்காகவும் அந்த அடிப்படையில் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும், அனைத்து இனங்களையும் ஐக்கியப்படுத்தி செயற்படுவதற்காக இவ்வமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 

 குறிப்பாக மொழியுரிமை, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, இருப்பிட, சமூக காணியுரிமை, மக்களால் தெரிவு செய்யப்படும் சுதந்திரமான ஜனநாயக பிரதிநித்துவம், ஆளுகையில் மக்களின் பங்களிப்பு, மக்களின் அரசியல் அதிகாரம், சமூக ரீதியான ஒடுக்கு முறைகள் போன்றவற்றில் மக்களின் நலன் சார்ந்த க்ருத்தாடல்களை செய்து பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில் கருத்துருவாக்கம், கருத்து பரிமாற்றம் செய்து, அக்கருத்தை வலிமையாக்குவது போன்றவற்றை இவ்வமைப்பு அதன் வரம்புக்குட்பட்டதாக தெரிவு செய்து கொண்டுள்ளது. 

 அவற்றில் அரச கரும மொழி, குறிப்பாக தமிழ் மொழி அமுலாக்கல் தொடர்பாக உடனடியாக கவனம் செலுத்தப்பட்டு, இம்மொழியுரிமை மாநாடு நடத்தப்படவுள்ளது. இவ்வமைப்புடன் தொடர்பு கொண்டு இம்மாநாட்டை வெற்றி பெறச்செய்ய விரும்புவோர், இவ்வமைப்பின் அழைப்பாளர்களாக செயற்படும், ஓய்வு பெற்ற பாடசாலை அதிபரும், தொழிற்சங்கவாதியுமான சி.சரவணபவானந்தன், சட்டத்தரணி இ.தம்பையா ஆகியோருடன் முறையே 0714427784, 0714302909 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடனும், orgalternativediscourse@gmail.com என்ற மின்னஞ்சலுடனும் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


தமிழ் மொழியுரிமையை வலியுறுத்தும் தமிழ் மொழியுரிமை மாநாடு Reviewed by Author on November 02, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.