செல்ஃபி எடுப்பவரா நீங்கள்? - உறைய வைத்த செல்ஃபி விபரீதங்கள்!!
செல்ஃபி இன்றைய மாடர்ன் உலகின் தவிர்க்க முடியாத வார்த்தையாக மாறியுள்ளது. டீக்கடையில் டீ குடிப்பது துவங்கி கல்யாண வீட்டில் மணமக்களோடு ஒன்றாக நின்று எடுக்கும் புகைப்படம் வரை எல்லாமேச் செல்ஃபி மயம் தான்!! எங்கிருந்து வந்தது இந்த செல்ஃபி யார் அறிமுகப்படுத்தினார்கள் என்றால் இது இன்று ஆரம்பித்த விஷயமல்ல 1839ம் ஆண்டு அமெரிக்க புகைப்படக்காரர் ஒருவர் தன் லென்ஸை சரிசெய்யும் போது பதிவான புகைப்படம் தான் செல்ஃபியின் ஆதி என்கிறது வரலாறு. ஆனால் இன்று சினிமா பிரபலங்கள் படம் எடுக்கிறார்களோ இல்லையோ செல்ஃபி எடுக்க தவறுவதில்லை. கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், சினிமா தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள் என எங்கு பார்த்தாலும் செல்ஃபி எடுப்பவர்களை தான் பார்க்கிறோம்.
இதில் என்ன விபரீதம் இருக்க போகிறது எல்லாம் ஜாலியான ஒரு விஷயத்துகாக தானே செய்கிறோம் என்று நியாயப்படுத்துபவரா நீங்கள்? உங்களுக்கானது தான் இந்த கட்டுரை சில செல்ஃபி விபரீதங்களால் உயிர் போகும் அளவிற்கு ஆபத்துகள் உண்டாகியுள்ளது. கடந்த ஞாயிற்றுகிழமையன்று போர்ச்சுக்கலை சேர்ந்த ஒரு கணவன் - மனைவி சுற்றுலாவிற்காக மேற்கு ஐரோப்பாவில் உள்ள கபோ டி ரோகாவில் உள்ள மலைப்பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு மலை உச்சியின் ஓரத்தில் நின்று கொண்டு செல்ஃபி எடுக்கலாமே என்று தோன்ற மலை உச்சியின் நுனியில் நின்றவர்கள் க்ளிக் செய்யும் போது கால் தடுக்கி கீழே விழுந்து இறந்து போனார்கள். இதுபோன்ற செய்திகள் ஏராளம் ரயில்வே ஸ்டேஷனில் செல்ஃபி எடுக்கும் போது தவறி விழுந்து இறந்தவர். தன்னை தானே சுட்டுக்கொள்வது போல செல்ஃபி எடுக்க நினைத்தவர் உணமையிலேயே இறந்த சம்பவம், பேஸ்பால் போட்டியை காண சென்றவர் செல்ஃபி எடுக்கும் போது அடிபட்ட சம்பவம் என செய்திகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.
இதெல்லாம் ஜாக்கிரதையாய் இல்லாதவர்களுக்கு தான் என்கிறார்கள் சிலர் அவர்களுக்கு இருக்கிறது சில ஆபத்தான செய்திகள். உத்திர பிரதேசத்தில் இளைஞர்கள் நான்கு பேர் மது அருந்துவதை செல்ஃபி எடுத்துள்ளனர். அவர்கள் கை சும்மா இல்லாமல் அதனை ஃபேஸ்புக்கில் ஷேர் செய்ய மற்ற நண்பர்களில் ஒருவரது உறவினர் அதனை பார்த்து வீட்டில் சொல்ல மானம் போய் இருக்கிறது அந்த இளைஞருக்கு. இதே போன்ற ஒரு சம்பவத்தில் தன் காதலனுடன் எடுத்து கொண்ட செல்ஃபி வெளிவர அந்த பெண்ணின் வீட்டில் உள்ளவர்கள் அந்த பையனை திட்டி சண்டை, போலீஸ் ஸ்டேஷன் என் சென்றிருக்கிறது அந்த செல்ஃபி கேஸ்.
இவையெல்லாம் சட்ட ரீதியான பிரச்னை என்றால், மன ரீதியான சில பிரச்னைகளும் எழுகின்றனவாம். எங்கு சென்றாலும் செல்ஃபி எடுத்தே தீருவேன் என அடம் பிடிக்கும் செல்ஃபிமேனியா! அதனை சமூக வலை தளங்களில் பகிர்ந்தே தீருவேன் என்ற மனநிலை இப்படியான பாதிப்புகளும், காலையில் நாம் பல் துலக்குவது தொடங்கி இரவு கொசுவர்த்தி கொளுத்துவது வரை என அனைத்து விஷயங்களையும் செல்ஃபியாக பதிவு செய்வதை வழக்கமாக்கி கொள்ளும்போது எந்த வித கஷ்டமும் இன்றி நம்மை அனைவரும் பின் தொடர முடியும் என்கின்றனர் உளவியல் வல்லுனர்கள்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இந்த சினிமா பிரபலங்களின் அட்ராசிட்டியால் பாதிக்கப்பட்டவர்களும் அதிகம் அதை பார்த்து தான் நானே செல்ஃபி எடுக்க கற்றுக்கொண்டேன் என்கிறது ஒரு கூட்டம். ஆயிரம் போட்டோகிராபர்கள் உள்ள ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் பிரபலங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து செல்ஃபியாம். வீட்டில் சண்டே ரிலாக்ஸாக முன்னனி நடிகர் ஒருவர் மற்றோருவரை சந்தித்தது ஒரு செய்தியா என்ற கேள்விக்கு முன்னரே செல்ஃபி வித் என டேக் செய்கிறார் மற்றோரு நடிகர். ஒரு நடிகை ஒருபடி மேலே சென்று தனது தேனிலவு போட்டோக்களை செல்ஃபியாக ட்விட்டி இருக்கிறார். என்று தனியும் இந்த செல்ஃபி மோகம் எனும் அள்விற்கு கூடிவிட்டன செல்ஃபியாளர்களின் அளப்பறை!
இதையெல்லாம் படிச்சுட்டு ஐ எம் ரீடிங் விகடன் செல்ஃபி ஆர்ட்டிகள்னு ஸ்டேட்டஸ் போடுறவங்களும் இருக்கதான் செய்யுறாங்க...செல்ஃபி எடுப்பவர்கள் நீங்கள் ஜாலிக்கு தான் எடுக்கிறீர்கள் என்பது ஊருக்கே தெரிந்த விஷயம் ஆனால் நீங்கள் செல்ஃபி எடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம் அழகான மற்றும் பாதுகாப்பான இடத்தில் செல்ஃபி எடுங்கள்... நடு ரோட்டில் நின்று கொண்டு செல்ஃபி அட் நடுரோடு என்று டேக் செய்யாதீர்கள்...
செல்ஃபி எடுப்பவரா நீங்கள்? - உறைய வைத்த செல்ஃபி விபரீதங்கள்!!
Reviewed by NEWMANNAR
on
August 13, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 13, 2014
Rating:


No comments:
Post a Comment