தீர்வு விடயத்தில் பிரதான எதிர்க்கட்சியும் நாட்டுக்கு சாதகமாக செயற்படவேண்டும்...
பிரதான இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து ஆட்சியமைத்திருப்பதால் அதனூடாக நாட்டில் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்படும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. தீர்வு விடயத்தில் பிரதான எதிர்க்கட்சியும் நாட்டுக்கு சாதகமான வகையில் செயற்பட வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
இரு கட்சிகளும் இணக்கப்பாடு அடிப்படையில் ஒன்றிணைந்து செயற்பட ஆரம்பித்திருப்பதன் மூலமாக நாட்டின் அபிவிருத்திகளையும் நாட்டுக்கு எதிரான சர்வதேச அழுத்தங்களையும் தவிர்க்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் ஒன்றிணைந்து அமைத்திருக்கும் தேசிய அரசாங்கத்தில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் சாதகமானதாக அமையுமா என வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்.
தேசிய அரசாங்கத்தில் நாமும் பங்குதாரர்களாக செயற்பட தீர்மாந்தித்துள்ளோம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் அமைந்துள்ள தேசிய அரசாங்கத்தில் நாமும் கைகோர்துள்ளோம்.
ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் ஒன்றிணைந்து கூட்டு ஆட்சியை அமைக்க தீர்மானித்துள்ளது. ஆயினும் இது இரண்டு வருடகால ஒப்பந்தத்தின் அடிப்படியில் தான் இவ்விரண்டு கட்சிகளும் ஒன்றினைந்துள்ளது. ஆகவே இந்த ஆட்சியில் நாட்டை அபிவிருத்தயின் பாதையில் கொண்டுசெல்வதுடன் நாட்டுக்கு எதிரான சர்வதேச அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் அனைத்திலும் இருந்து காப்பாற்றிக்கொள்ள முடியும் என நம்புகின்றோம்.
எனினும் இப்போது கூட்டு அரசாங்கத்தில் நாம் இணைந்துள்ளதால் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகள் அனைத்தையும் ஆதரிப்பதாக அர்த்தப்படாது. இந்த ஆட்சியில் நாம் அமைச்சுப் பதவிகளை பெற்றாலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிக்காகவும் கட்சியை பலப்படுத்தும் நோக்கத்திலேயே வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம். எமது சேவைகள் அனைத்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை மையப்படுத்தியதாகவே அமையும்.
மேலும் இந்த ஆட்சியில் அனைத்து மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும் உள்வாங்கப்பட்டுள்ளது. ஒருசில பிரதான கட்சிகள் எம்முடன் இணையாவிட்டாலும் மூவினங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் உள்ளனர். ஆகவே இது நாட்டுக்கும் மக்களுக்கும் ஆரோக்கியமான ஒன்றாகவே அமையும். அதேபோல் இந்த ஆட்சியில் பிரதான இரண்டு கட்சிகளும் ஒன்றினைந்துள்ளது. ஆகவே அதனூடாக நாட்டில் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்படும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளதாக நான் நம்புகின்றேன்.
அதேபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது எதிர்க்கட்சியாக செயற்படுகின்றது. ஆகவே முக்கியமான சந்தர்ப்பங்களில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அனைவரும் முயற்சிக்க வேண்டும்.
அதே சந்தர்ப்பத்தில் கடந்த கால பிரிவினைவாத செயற்பாடுகள் அனைத்தையும் தொடர்ந்தும் முன்னெடுக்காது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாட்டை ஒன்றிணைக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இப்போது அமைந்திருக்கும் நல்ல சந்தர்ப்பங்களை தவறவிடாது சிங்கள தலைமைகளுடன் இணைந்து நாட்டுக்கு சாதகமான தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தீர்வு விடயத்தில் பிரதான எதிர்க்கட்சியும் நாட்டுக்கு சாதகமாக செயற்படவேண்டும்...
Reviewed by Author
on
September 07, 2015
Rating:

No comments:
Post a Comment