அண்மைய செய்திகள்

recent
-

இணைந்த வட, கிழக்கில் சமஷ்டி முறைமையில் தீர்வு; இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வு யோசனையை தமிழ் மக்கள் பேரவை முன்மொழிவு

இணைந்த வட, கிழக்கில் சமஷ்டி முறைமையிலான அரசியல் தீர்வை இன நெருக்கடிக்கான உத்தேச அரசியல் தீர்வாக தமிழ் மக்கள் பேரவை முன்வைத்திருக்கிறது. 

தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காண்பதற்காக தமிழ் மக்கள் பேரவையின் உப குழுவின் அறிக்கையில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டிருக்கிறது. அரசியலமைப்பு தயாரிப்பதற்கு முன்னர் அரசியல் ரீதியான இணக்கப்பாட்டின் தேவை அவசியம் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

அரசியல் தீர்வை காண்பதென்பது வெறுமனே அரசியலமைப்பை வரையும் நடவடிக்கையாக அமைய முடியாதென சுட்டிக்காட்டப்பட்டிருப்பதுடன், தேசிய நெருக்கடிக்கு அடிப்படை  காரணமாக அமைந்திருப்பது சிங்கள பௌத்த தேச அரசே எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
இரு பிரதான கட்சிகளும் (சு.க.  ஐ.தே.க.) சிங்கள பௌத்த ஒற்றையாட்சி நிலைப்பாட்டையே கொண்டிருப்பதாகவும் தமிழ் மக்களின் அபிப்பிராயத்தின் பிரகாரம் அது ஏற்றுக் கொள்ள முடியாதெனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. 

தமிழ் மக்கள் பேரவையின் உப குழுவினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்ட முன்மொழிவு அறிக்கை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் வடமாகாண முதலமைச்சரும் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவருமான சி.வி.விக்னேஸ்வரனிடம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கையளிக்கப்பட்டது.

அரசியலமைப்பு இணக்கப்பாட்டிற்கு வருவதற்கு முன்னர் (டே றோன்  உடன்படிக்கை, பெரிய வெள்ளி உடன்படிக்கை  போன்ற) இணக்கப்பாடு அரசியலமைப்பு தயாரிக்கும் நடவடிக்கைகளுக்கு முன்பாக அவசியமென வலியுறுத்தப்பட்டிருப்பதுடன், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதாகவும் அந்த உடன்படிக்கை அமைய வேண்டுமென அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அத்துடன் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை, இறைமை,  தேர்தல் தொகுதி ரீதியான அதிகாரம், தமிழ் மக்களின் வரலாற்றுப் பூர்வமான வாழ்விடங்களின் பாரம்பரியமான தாயகம் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டுமெனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிது.
அதேவேளை எண்ணிக்கையில் பெரும்பாலான சிங்கள பௌத்த பெரும்பான்மையினராலும் அதன் அரசியல் பிரதிநிதிகளாலும் ஏற்பாடுகள் ஒருதலைப்பட்சமாக நீக்கப்படுமிடத்து தமது அரசியல் அந்தஸ்தை தீர்மானிப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் தமிழ் மக்கள் தீர்மானிக்கக்கூடிய ஏற்பாட்டையும் இந்த உடன்படிக்கை கொண்டிருக்க வேண்டுமென அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அரசியலமைப்புக்கு முன்னரான உத்தேச உடன்படிக்கையானது மூன்றாம் தரப்பொன்றினால் ( அமெரிக்கா / இந்தியா அல்லது ஐ.நா. வெளிநாட்டு அரசாங்கங்கள்) வெளிமட்ட உத்தரவாதத்தை வழங்குவதற்கு உதவ வேண்டுமென எழுத்துமூலமாக உறுதியளித்திருக்க வேண்டுமென தாங்கள் கருதுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அத்துடன் பதிலளிக்கும் கடப்பாடு, நீதி, காணாமல் போனோர் விவகாரத்துடன் தொடர்புபட்ட விடயங்களுக்குத் தீர்வு, அரசியல் கைதிகளின் விடுதலை, வட, கிழக்கில் ஆயுதப் படைகளினால் நிலை கொண்டிருக்கும் காணிகளை விடுவித்தல், இராணுவ சூனியமயமாக்கல், அரச அனுசரணையுடனான காலனித்துவம் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல், பாதுகாப்பு துறை மறுசீரமைப்பு, மீள இடம்பெறாமைக்கான உத்தரவாதங்கள் என்பவற்றையும் கொண்டிருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  
இந்த அரசியல் மற்றும் அரசியலமைப்பு ரீதியான விவகாரங்கள் தொடர்பான கலந்துரையாடல்களுக்கு திறந்த மனதுடனும் பாதுகாப்பானதுமான சூழ்நிலையை மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளை வட, கிழக்கில் கொண்டிருக்காமல்  தோற்றுவிப்பது சாத்தியமற்றதெனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசின் தன்மை இலங்கை பன்முக, பல்கலாசார, பல் மொழி, பல் மத நாடாக இருக்கின்றது.  

வாக்காளர்களினாலும் சமூகங்களினாலும் அது உருவாக்கப்பட்டிருக்கிறது. கூட்டு அரசும் (மத்தி, சமஷ்டி)  மாநிலங்களும் தொகுதி மக்களினதும் ஏனைய சமூகங்களினதும் பன்முகத்தன்மைக்கு மதிப்பளித்து பாதுகாப்பதை அங்கீகரிக்கும் கடப்பாடு கொண்டவையெனவும் அரசியலமைப்பு ஏற்பாட்டுக்கான யோசனைகளாக முன்வைக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் இலங்கையின் பல்தேசியத்தை சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் மற்றும் ஏனைய சமூகங்கள் கொண்டிருக்கின்றனர். தமிழ் மக்களின் ஆட்புல அலகு வடக்கு, கிழக்கு மாகாணங்களாக 1978 அரசியலமைப்பில் வடிவமைக்கப்பட்டது போன்று அமைய வேண்டும். தமிழர்களின் வரலாற்றுப் பூர்வ வாழ்விடப் பகுதிகளாக அவை இருக்கின்றன.  

தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமைக்கான விட்டுக்கொடுக்க முடியாத தனித்துவமான மக்களாக உள்ளனர். ஐக்கியப்பட்ட பிரிக்க முடியாத இலங்கைக்கான தமது உறுதிப்பாட்டை தமிழ் மக்கள் கொண்டுள்ளனர். இது தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்துகின்றது.

இறைமை


இறைமையானது மக்களின் தனித்துவம் மற்றும் அவர்களின் தேர்தல் தொகுதிகள் என்பவற்றைக் கொண்டதாக விளங்குகிறது. சமஷ்டி (கூட்டரசு) இறைமையும்  அதன் அலகுகளும் மக்களிடம் இருந்தே தோற்றம் பெற்றுள்ளன. சட்டவாக்க அதிகாரம் பாராளுமன்றத்தினாலும் மாநில சட்ட சபைகளினாலும் பிரேரிக்கப்பட வேண்டும்.

சட்டவாக்க சபைகள்  அரசியலமைப்பில் வழங்கப்பட்ட அதிகாரத்தின் பிரகாரம் தத்தமது பரிமாணங்களுக்கு உட்பட்டதாக அமைய வேண்டும். நிறைவேற்று அதிகாரம் பிரதமராலும் சமஷ்டி அரசாங்கத்தின் அமைச்சர்களினாலும் முதலமைச்சரினாலும் மாநில அமைச்சர்கள் சபையினாலும் அரசியலமைப்பின் பிரகாரம் வழங்கப்பட்ட அதிகாரத்தின்படி பயன்படுத்தப்பட வேண்டும். நீதித்துறை அதிகாரம் அரசியலமைப்பு சபையினாலும் கூட்டரசின் (சமஷ்டி) நீதித்துறை அமைப்புகளினாலும் பயன்படுத்தப்பட வேண்டும்.
அத்துடன் மாநிலங்கள் பிரத்தியேகமாக அரசியலமைப்பின் பிரகாரம் வழங்கப்பட்ட அதிகாரத்தின் படி தத்தமது பரி ணாம எல்லைக்குள் பிரயோகிக்கப்பட வேண்டும்.  அரசியலமைப்பின் பிரகடனப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமைகள், அங்கீகரிக்கப்பட்ட உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதுடன், சமஷ்டி அரசாங்கத்தினாலும் மாநிலங்களினாலும் சகல பிரிவுகளினாலும் பாதுகாக்கப்பட வேண்டும். அவை மட்டுப்படுத்தப்படக்கூடாது அல்லது மறுக்கப்படக்கூடாது. தேர்தல் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநில, சட்டசபை உறுப்பினர்களுக்கு  பிரயோகிக்கப்பட வேண்டும். 18 வயதடைந்த சகல பிரஜையும் வாக்களிப்பதற்கான உரிமையை கொண்டிருத்தல் வேண்டும். 

அரசியலமைப்பு ரீதியான மேலாண்மை 


சமஷ்டி அரசினதும் மாநிலங்களினதும் மேலாண்மைச் சட்டம் மற்றும் அத்திபாரமாக அரசியலமைப்பு விளங்குகிறது. சமஷ்டி அரசு மற்றும் மாநிலங்களினது சகல செயற்பாடுகளும் அரசியலமைப்பின் பிரகாரம் அமைய வேண்டும்.


மொழி, மதம், பிரஜாவுரிமை, அடிப்படை உரிமைகள்


இலங்கை சமஷ்டிக் குடியரசு மதச்சார்ப்பற்ற நாடாகவும் சகலரினதும் மத சுதந்திரத்தை உத்தரவாதப்படுத்துவதாகவும் சகல மதங்களையும் சமமாக நடத்துவதாகவும் அமைய வேண்டும.


சிங்களம், தமிழ், ஆங்கிலம் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழிகளாக அமைய வேண்டும். தமிழ் நீதிமன்ற மொழிகளாகவும் வடக்கு, கிழக்கு மாநிலத்தில் அரசாங்கப் பதிவுகளுக்கான மொழியாகவும் அமைய வேண்டும். சிங்களம் நாட்டின் ஏனைய பகுதிகளில் அரசாங்க பதிவுகளுக்கான மொழியாக விளங்க வேண்டும். சகல பிரஜைகளும் அரச சேவையையும் நீதித்துறை சேவையையும் தத்தமது தெரிவு மொழிகளில் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் அமைய வேண்டும்.

நிர்வாகத்தில் உத்தியோகபூர்வ மொழியாக இல்லாத இடத்தில் அவர்கள் முன்னுரிமை கொடுக்கும் மொழிகளில் சேவைகளைப் பெற்றுக் கொள்வதாக அமைய வேண்டும். 1948 பெப்ரவரி 4 இல் இலங்கையின் சாதாரண வதிவிடம் கொண்டவர்களும் அவர்களின் வம்சாவளியினரும் இலங்கையின் பிரஜாவுரிமையைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமையை கொண்டிருக்க வேண்டும்.
பிறப்பினால் பிரஜைகளை பதிவு செய்யும் போது எந்தவொரு தனித்துவமும் இருக்கக்கூடாது. சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சாசனத்தில் கண்டறியப்பட்ட உரிமைகளைக் கொண்டதாக அடிப்படை உரிமைகள் அமைந்திருக்க வேண்டும். 

ஆட்சி முறைமை


இலங்கை சமஷ்டி குடியரசாக விளங்க வேண்டும். சமஷ்டி மற்றும் மாநிலம் அடங்கிய இரு பிரிவுகளாக அரசாங்கம் விளங்க வேண்டும். சமஷ்டியின் அலகு மாநிலங்களாக இருக்க வேண்டும். அவற்றில் ஒரு அலகான வட, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கியதாக 1978 அரசியலமைப்பில் வரையறுக்கப்பட்டதாக விளங்க வேண்டும். வெஸ்ட் மினிஸ்டர் பாணியிலான அரசாங்கத்தின் விதிமுறைகளைக் கொண்டதாக சமஷ்டி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும்.

 அரசாங்கத்தின் இரு மட்டங்களிலும் தேர்தல் முறைமையானது கலப்புத் தேர்தல் முறைமையைக் கொண்ட ஜேர்மனியின் பாணியை பின்பற்றுவதாக அமைய வேண்டும்.  கீழ்சபை, செனற், மாநில சட்டசபைகள் ஆகியவற்றின் உறுப்பினர்களை உள்ளடக்கிய தேர்தல் கல்லூரியினால் ஜனாதிபதி தெரிவு செய்யப்பட வேண்டும்.
சமஷ்டி அரசியலமைப்பின் பிரகாரம் ஆட்சி முறையை வழங்குவதற்கான சட்டரீதியான கட்டமைப்புகளின் ஊடாக மாநிலங்கள் செயற்பட வேண்டும். 1978 அரசியலமைப்பின் 17 ஆவது திருத்தத்தின் பிரகாரம் அரசியலமைப்பு பேரவை இயங்க வேண்டும். 

இதேவேளை வட, கிழக்கிலுள்ள முஸ்லிம் சமூகம் தனித்துவமான அரசியல் தன்மை கொண்டது என்பதை நாங்கள் அங்கீகரிக்கின்றோம். முஸ்லிம் சமூகத்தினர் தனது நலன்கள், அபிலாஷைகள் தொடர்பாக இணைக்கப்பட்ட வட, கிழக்குக்குள் எந்தவொரு யோசனையையும் முன்வைக்கும் போது அவை தொடர்பாக கலந்துரையாடுவதில் நாங்கள் உறுதிப்பாட்டை கொண்டிருக்கின்றோம். வட, கிழக்கில் வாழும் சிங்கள மக்கள் அரசியலமைப்பில் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள சகல உரிமைகளையும் அனுபவிப்பார்கள்.

இதேபோன்று மலையகத் தமிழர்களின் உரிமைகள் தொடர்பான எமது உறுதிப்பாட்டையும் நாங்கள் வெளிப்படுத்துகிறோம். அவர்களின் வாழ்விடங்களில் அவர்களின் ஒன்றுபட்ட நலன்களை பாதுகாப்பதற்கான உரிமைகள் தொடர்பாகவும் நாங்கள் எமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகின்றோம். இந்த விடயம் தொடர்பாக மலையக அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகங்களுடன் செயற்படுவதற்கும் நாங்கள் முழுமையான உறுதிப்பாட்டை கொண்டிருக்கின்றோம். 

2ஆவது சபை


இதேவேளை தமிழ் மக்கள் பேரவை முன்வைக்கப்பட்டிருக்கும் யோசனையில் இரண்டாவது சபை அமைப்பதும் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. செனற் என்று அழைக்கப்பட்ட இரண்டாவது சபையில் ஒவ்வொரு மாநிலமும் சமமான பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருக்கும் எனவும் செனற் சபைக்கு ஒன்பது உறுப்பினர்களை தெரிவு செய்ய விகிதாசார வாக்களிப்பை ஒவ்வொரு சட்டசபைகளும் கொண்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் கீழ்சபை மற்றும் மேற்சபையான செனற்றில் ஒவ்வொரு சட்டமூலமும் நிறைவேற்றப்பட வேண்டுமெனவும் அதன் பின்னர் ஜனாதிபதியின் அங்கீகாரத்திற்கு அனுப்பப்பட வேண்டுமெனவும் செனற்றினால் சட்டமூலமொன்று நிராகரிக்கப்பட்டால் அது சட்டமாக உருவாகாது  எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
 அதேவேளை வட, கிழக்கு மாநிலத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் பெரும்பான்மை உறுப்பினர்களின் அப்பிராயமானது மாநிலத்தின் நலன்களுக்கு குறிப்பிட்ட சட்டமூலம் பாதிப்பாக அமையுமென கருதினால் இரண்டாவது வாசிப்பிற்கு அச்சட்டமூலம் முன்னெடுக்கப்படாதென தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பிட்ட சட்டமூலம் வட, கிழக்கு நலன்களுக்கு பாதிப்பாக அமையுமென கருதப்பட்டால் அதனைத் தொடர்ந்து தலைவர் விவாதத்தின் பின்னர் விடயம் தொடர்பாக தீர்ப்பை வழங்குவார். தலைவரின் தீர்ப்பானது அரசியலமைப்பு நீதிமன்றத்தினால் மீளாய்வுசெய்யக்கூடியதெனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மாநிலங்களின் ஆட்சி


மாநில சட்டசபை தன்னைத் தான் எவ்வாறு ஆட்சி செய்வது என்பது தொடர்பான சொந்த சட்டமூலத்தை நிறைவேற்றும். அச்சட்டமூலம் அரசியலமைப்புக்கு ஏற்புடையதாக அமையும்.  ஜனாதிபதியினால் முதலமைச்சரின் கலந்தாலோசனையுடன் ஆளுநர் நியமிக்கப்படுவார்.

ஆளுநரின் பதவியானது அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்படல் போன்ற விதிவிலக்கான சந்தர்ப்பங்களைத் தவிர ஏனையவற்றில் வைபவ ரீதியான பதவியாகவே அமையும். மாநிலத்தின் முதலமைச்சரை ஆளுநர் நியமிப்பார். மாநில சட்டசபையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கின்றார் என்ற அபிப்பிராயத்தின் பிரகாரம் அவர் முதலமைச்சரை நியமிப்பார். முதலமைச்சர் தனது அமைச்சர் சபையை நியமிப்பார்.

கூட்டரசு மற்றும் மாநிலங்களின் அதிகாரங்கள்


அரசாங்கத்தின் அதிகாரங்கள் சமஷ்டி அரசுக்கும் (மத்தி) மாநிலங்களுக்குமிடையில் பகிர்ந்து கொள்ளப்படும். அரசியலமைப்பின் சமஷ்டி பட்டியல் கூட்டரசினால் பயன்படுத்தப்பட்ட அதிகாரத்தினால் தீர்மானிக்கப்படும். மாநிலங்களின் பட்டியலில் உள்ளடக்கப்பட்ட அதிகாரங்கள் உட்பட சமஷ்டி பட்டியலுக்குள் வராத அதிகாரங்கள் யாவற்றையும் மாநிலங்கள் பிரயோகிக்கும். தத்தமது பரிணாம எல்லைக்குள் சமஷ்டி (மத்தி) மற்றும் மாநிலங்கள் மேலாண்மையை கொண்டிருக்கும். 


மாநிலங்களின் பட்டியல்


காணி, சுகாதாரம், சுதேச மருத்துவம், கல்வி, உயர்கல்வி மற்றும் பல்கலைக்கழகங்கள் உட்பட கல்விச் சேவை, விவசாயம், விவசாய சேவைகள், நீர்ப்பாசனம், விலங்கு, வேளாண்மை, மீன்பிடித் துறை, கனிமங்கள், அவற்றின் தொடர்புபட்ட கடல்வளங்கள், வரலாற்று பூர்வமான கடல் பரப்பு, பொருளாதார வலயங்கள், கண்டப் படுகைகள் உட்பட பொருளாதார வளங்கள், மாநிலத்துக்குட்பட்ட வனம் ,சரணாலயம் மற்றும் சூழல் பாதுகாப்பு,கனிமங்கள், கற்குவியல்கள், போக்குவரத்து, மாநில தொகை மதிப்பீடு, விமான நிலையங்கள், துறைமுகங்கள், இறங்குதுறைகள், ஆறுகள், நீர்நிலைகள், வீதிகள், நெடுஞ்சாலைகள், வீடமைப்பு, நிர்மாணம், நகரத் திட்டமிடல், அபிவிருத்தி, கிராமிய அபிவிருத்தி, உள்ளூராட்சி, கூட்டுறவு,  மாநிலத்துக்குள் உணவு, வளங்கள் விநியோகம், சுற்றுலாத்துறை மேம்பாடு, பொது நிகழ்வுகள் உட்பட கலாசார செயற்பாடுகளை ஒழுங்கமைத்தல், ஒளிபரப்பு ஊடகம், தொலைக்காட்சி உட்பட நிவாரணம், புனர்வாழ்வு, மீள்கட்டுமானம், சமூக பாதுகாப்பு, பொலிஸ், சட்டம், ஒழுங்கு, (மீன்பிடி உரிமைகள் மற்றும் கரையேர வளங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள கரையோர காவல் படையென்ற அலகொன்றை பொலிஸ் ஸ்தாபிக்க முடியும்.) மாநில அரசு சேவை, விளையாட்டு, மாநிலத்துக்குள் ஒருங்கிணைக்கப்படாத சங்கங்களுக்கான ஒழுங்கு விதி, மாநிலத்தின் கடன், உள்ளூர் மற்றும் சர்வதேச கடன் பெறுதல், வெளிநாட்டு நோடி முதலீட்டை மேம்படுத்துதல், ஒழுங்கமைத்தல் மற்றும் சர்வதேச மானியங்கள், மாநிலத்துக்கு வழங்கப்படும் அபிவிருத்தி உதவிகள், மாநிலத்தின் நிதி, கடன் உதவிகள், கலால் வரிகள், மொத்த விற்பனை வரி / வற், பந்தய வரிகள், பரிசுப் போட்டிகளுக்கான வரிகள், லொத்தர் மூலமான வரிகள் (தேசிய லொத்தர் தவிர்ந்த), மோட்டார் வாகன அனுமதி பத்திரங்களும் கட்டணங்களும், காணி, மோட்டார் கார்கள் போன்ற மாற்றக்கூடிய சொத்துகளுக்கான முத்திரை வரிகள், நீதிமன்றத்தினால் அமுல்படுத்தப்படும் தண்டங்கள், நீதிமன்ற கட்டணங்கள், காணி வரி, மாநில கணக்காய்வு,  மாநில பட்டியலிலுள்ள விடயங்கள் தொடர்பான அபராதங்கள், மாநில மட்டத்தில் திட்டமிடுதல், மாநில சட்டசபை, உள்ளூராட்சி மற்றும் மாநில சட்டசபைக்கான தேர்தல்கள், தொல்பொருள் மற்றும் மரபிடங்கள், நூதனசாலைகள், சுவடிகள், மாநிலத்துக்குள்ளான நிர்வாகம், மாநிலத்துக்குள்ள
நீதி நிர்வாகம் மாநில ஒருங்கிணைக்கப்பட்ட நிதி.


சமஷ்டி பட்டியல்


சமஷ்டிப் பட்டியலில் காணி,< மத்திய பாதுகாப்பு, பாதுகாப்பு படையினர், குடிவரவு, குடியகல்வு, வெளிவிவகாரம், நாணயம், அந்நியச் செலாவணி, சர்வதேச பொருளாதார உறவுகள், மத்திய அரசின் பொதுக் கடன், வெளிநாட்டுக் கடன்கள், வங்கித்துறை ஒழுங்கமைப்பு, காப்புறுதி, பங்குப் பரிவர்த்தனை சந்தைகளின் எதிர்காலம், சமஷ்டி அரசாங்கத்தின் கணக்காய்வு  என்பன உட்பட பல்வேறு விடயங்கள் உள்ளடங்கியுள்ளன. 


காணி


சகல காணிகளும் அரச காணி என அரச காணி ஒழுங்கு விதியின் கீழ் வரையறுக்கப்பட வேண்டும். தற்போது மாநிலத்தின் கீழுள்ள சகல காணிகளும் சமஷ்டி அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. சமஷ்டி பட்டியலுக்குள் வரும் சகல விடயங்களும் நியாயமான முறையில் தேவைப்படும் காணிகளை பெற்றுக் கொள்வதைத் தவிர ஏனையவை மாநிலத்தின் பட்டியலில் உள்ளடங்கும்.

மத்திய அரசின் பட்டியலிலுள்ள தற்போது மாநிலத்தின் கீழுள்ள காணிகள் மாநிலத்துக்கு மாற்றப்பட வேண்டும். மேலும் உள்ளூராட்சி சபைகள், பொலிஸ், சட்டம், ஒழுங்கு என்பன மாநிலத்துக்குரிய விடயங்களாகுமெனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அரசாங்க சேவையைப் பொறுத்தவரை மாநிலத்தின் தலைமைச் செயலாளரும் முதலமைச்சின் செயலாளரும் அமைச்சர்களின் செயலாளரும் அமைச்சர்களின் கலந்தாலோசனையுடன் முதலமைச்சரினால் நியமிக்கபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

ஆட்திரட்டல் கொள்கை


சமஷ்டிஅரச சேவைகள் மற்றும் ஆயுதப் படைகளின் சேவைகளுக்கு ஆட்சேர்ப்பு முழு நாட்டினதும் இன விகிதாசாரத்தை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டுமெனவும் மாநில அரச சேவைகளுக்கும் பொலிஸ் சேவைகளுக்குமான ஆட்சேர்ப்பு சம்பந்தப்பட்ட மாநிலத்தின் இன விகிதாசாரத்தை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.

இவற்றைவிட கல்வி, நிதி, சமஷ்டி, அரசியலமைப்பு
நீதிமன்றம் நல்லாட்சிக்கான மாநில சபை, மாநில வழக்கறிஞர்கள் நாயகம், அவசரகால அதிகாரங்கள், மத்தி  மாநிலங்களுக்கான ஒத்துழைப்பு, அரசியலமைப்பு திருத்தங்கள் என்பன பற்றியும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.


 அதேவேளை வடகிழக்கு மாநிலத்தில் ஆட்சியை நடத்துவதற்கான சில விசேடமான யோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.  வட, கிழக்கு மாநில சட்டசபையின் பெண்களுக்கு ஆகக் குறைந்தது மூன்றிலொரு ஆசனங்கள் ஒதுக்கப்பட வேண்டுமெனவும் முதலமைச்சருக்கு மேலதிகமாக 14 அமைச்சர்கள் ஆகக் கூடிய பட்சம் நியமிக்கப்பட வேண்டுமெனவும் பிரதியமைச்சர்கள் அல்லது ஏயை அமைச்சுப் பதவிகள் இல்லையெனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில மனித உரிமைகள் சாசனம் நீதியான, பொருளாதார சமூக கலாசார உரிமைகளை கொண்டிருக்க வேண்டுமெனவும் மாநில மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் கண்காணிக்கப்பட்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் என்பவற்றைக் கொண்டிருக்க வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அத்துடன் சாதிப் பாரபட்சத்தை இல்லாதொழிப்பதற்கு உறுதியாக செயற்பட உள்ளடக்கப்பட வேண்டுமெனவும் அரச கொள்கை ஆவணமாக இது மக்களின் கலந்தாலோசனையுடன் விருத்தி செய்யப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சுதந்திரமான பிரஜைகள் குறைகேள் அதிகாரி முறைமை ஜன்ஜொப்பால் சட்டமூலத்தின் முன்மாதிரியாகக் கொண்டதாக  ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இணைந்த வட, கிழக்கில் சமஷ்டி முறைமையில் தீர்வு; இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வு யோசனையை தமிழ் மக்கள் பேரவை முன்மொழிவு Reviewed by NEWMANNAR on February 01, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.