அண்மைய செய்திகள்

recent
-

எரியும் நினைவுகள்! ஈழத் தமிழர்களின் வாழ்வும் யாழ் நூலகமும் சிறப்பு கண்ணோட்டம்- Video

35ஆண்டுகள் ஆகின்றது ஆனாலும் இன்று சுட்ட தீ போல அதன் வடுவும் அதன் வலியும் இன்னும் இன்றும் ஏதோ ஒரு வெறுமையை தருகின்றது.

விடிந்தும் விடியாத ஒரு பொழுதில் வெகுதூரத்தில் மக்கள் கூடிகூடி நின்று பார்த்திருக்க எரிந்துபோன மிச்சங்களுடன் புகைந்து கொண்டிருந்த அந்த நூலகத்தின் தோற்றம் இன்றும் சுடுகிறது.

அன்றைப் பொழுது இப்போது நினைத்தாலும் அந்தநினைவுகளுக்குள் புத்தகங்கள் எரிந்த சாம்பல் மணம்தான் விசிறி அடிக்கின்றது.

முழுத்தேசிய இனமும் விக்கித்துநின்ற அந்தநாளில், எரிந்து முடிந்து கரும்புகை பரவியபடி கிடந்த யாழ்.நூலகத்தின் காட்சி சிங்கள பேரினவாதம் எமது இனத்துக்கு எதிராக இடையறாது நடாத்திவரும் அழிப்புகளுக்கு ஒருபெரும் சாட்சியாகும்.

யாழ். நூலகம் என்பதுவும் வெறும் நூலக கட்டிடம் எனபதற்கும் மேலாக, புத்தகங்கள் நிறைந்த ஒரு பெரும்கட்டிடம் என்பதற்கும் அப்பால் அது எமது வரலாற்றின் சுவடுகளை தனக்குள் தேக்கி வைத்திருந்த ஒரு கலாச்சார அடையாளம் போலவே நிமிர்ந்திருந்தது.

எமது தேசிய அடையாளத்தில் அதுவும் ஒன்றாக இருந்தது என்று சொன்னால்கூட அது மிகை இல்லை. எங்களிடம் இத்தனை ஆயிரம் ஆண்டு தொன்மையான மொழி இருக்கிறது.

இத்தனை ஆயிரமாயிரமாண்டு செழுமையான பண்பாட்டுவேர் இருக்கிறது என்பதைப் போலவே எங்களிடம் யாழ். நூலகம் இருந்திருக்கிறது.

கலாச்சார இனஅழிப்புச்சரத்துகளில் சொல்லப்பட்டிருக்கும் கலாச்சார பாரம்பரியம் (cultural values) இனஅடையாளம் (ethnic identities) போன்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் நிறைந்த அடையாளமாக யாழ். நூல் நிலையம் விளங்கியிருந்தது.

அதற்கு இடப்பட்ட கொள்ளி எமது பண்பாட்டு மையத்தின் மீதுநடாத்தப்பட்ட அழிப்பாகவே இருக்கிறது.

வரலாறு தெடுகிலும் இத்தகைய கலாச்சார இனஅழிப்புக்கான சாட்சியங்களை வேறுவேறு நிலங்களில் நடந்தேறியதற்கு சான்றுகள் உள்ளன.

போலந்தின் கலாச்சாரஅமையங்கள்மீதும்,கல்விநிலையங்கள் மீதும் நாசிப்படைகள் நடாத்திய எரிப்புகளும், யப்பானியரின் ஆக்கிரமிப்பின் கீழ் கொரியா இருந்தபோது 1910-1945 கொரியமொழி நூல்களை எரித்ததும், நூலகங்களை அழித்ததும் இதே முறையில் தான். அதே நடைமுறைதான் கொஞ்சமும் பிசகாமல் நீண்ட காலத்துக்கு பின்னர் சிங்களத்தால் யாழ். நூல் நிலைய எரிப்பு என்ற பெயரில் நடாத்தப்பட்டது.

ஒரு இனத்தின் அறிவுத் தேடலை அழித்தெறிந்துவிட்டால் அந்த இனத்தின் உரிமைக்குரலை மிகஎளிதாக அடக்கிவிடலாம் என்பது ஒரு பொதுவான ஆதிக்க சமன்பாட்டுமுறை.

இந்த 1981மே 31 இரவில் மிகவும் நுணுக்கமான முறையில் இலக்குகள் தெரிவு செய்யப்பட்டு எரிக்கப்பட்டன.

சிங்களப் படைகளின் உதவியுடன் தென்னிலங்கையிலிருந்து வந்திருந்த சிங்கள குண்டர்களும் சிங்கள இனவெறி அரசின் மூத்த அமைச்சர்களும் எங்கள் நூலகத்தை சாம்பலாக்கினார்கள்.






நூலகம் என்பது வெறுமனே ஒரு கட்டிடம் என்பது அல்ல.ஒரு மக்கள் கூட்டத்தின் பாரம்பரியம், அறிவுதேடல், வாழ்வுமுறை எல்லாம் அந்த நூலகங்களின் கட்டிடங்களுக்குள் உயிரோட்டத்துடன் எப்போதும் அசைந்து கொண்டு இருக்கும்.

ஒரு சமூகத்தை ஒவ்வொரு தளத்தில்இருந்தும் அடுத்த தளத்துக்கு உந்தித்தள்ளும் வலிமை மிக்கவை இந்த வாசிகசாலைகள்.

மனிதனின் கண்டுபிடிப்புகளில் 'மொழி' என்பது எத்தனை அற்புதமானதோ, அதைப்போலவே மனிதன் அமைத்த அல்லது கட்டிய எல்லா கட்டடங்களைவிடவும் நூலகங்களே உயர்வானவை.

எந்தஒரு பிரதியுபகாரமும் கருதாது அறிவையும் ஆற்றளையும் அள்ளி வழங்கும் தாய் அன்புக்கு ஈடானவை நூலகங்கள்.

வெறுமனே ஒரு மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தலின் வன்முறை என்ற குற்றச்செயலுக்குள் இந்த நூலகஎரிப்பை நோக்க முடியாது.

தமிழ் மொழி பேசும்மக்கள் அனைவரதும் சுயமாக சிந்திக்கும் உரிமைமீதும், அறிவை தேடும் மானுட இயல்புமீதும் எறியப்பட்ட கொள்ளி என்றே நோக்க வேண்டும்.

ஆற்றல் உள்ள இனமாக மாறுவதற்கான வாய்ப்புகளை இல்லாது செய்துவிட்டால் தொடர்ந்து அடிமைகளாக வைத்திருக்கலாம் என்ற முடிவுகளோடுதான் ஆக்கிரமிப்பாளர்கள் அறிவின் ஊற்றுக்கண்களை அடைப்பார்கள்.

இந்தமுடிவோடுதான் சிங்களமும் தனது அமைச்சர்களையும் படைவெறிநாய்களையும் அனுப்பி மிகநுனுக்கமான திட்டமிடலுடன் ஒரு தேர்தல் பொழுதில் எங்களின் தேசியசொத்தை எரித்தழித்தார்கள்.

அந்தநாளின் மக்கள் உணர்வுகள் இன்னும் அலைகளாக மனமெங்கும் பரவிக் கிடக்கின்றது.

காலகாலமாக குடிஇருந்தவீடு எரிந்து தணலாக கிடப்பதுபொல எட்டத்தில் இருந்தே மக்கள் பார்த்துக் கலங்கினர்.

தொண்டைக்குள் வார்த்தைகள் சிக்குப்பட்டு வெளிபடமுடியாமல் ஏதும்கூறத் தோன்றாமல் மௌனமாக ஒரு அறிவுக் கோயிலின் சாம்பல் கலந்துவந்த காற்றை சுவாச்சித்தபடி நின்றனர்.

இலங்கைத்தீவில் இரண்டுஇனங்களும் சேர்ந்துவாழவே இனிமுடியாது என்று தமிழீழ தேசிய இனம் முடிவெடுத்த தருணங்களில் யாழ். நூலகம் எரிக்கப்பட்ட அந்தநாளும் ஒன்று.

இன்று அந்த இடத்தில் புதியநூலகம் அதைவிட அழகாக கட்டப்பட்டு இருக்கலாம். அதைவிட நவீன வசதியுடன் அது இயங்கலாம். ஆனால் அன்று அந்த மே31ம் நாள் 1981ம் ஆண்டில் எங்கள் மூளைக்குள் சொருகப்பட்ட தீக்கொள்ளி இன்னும் சுட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

அடுத்த தலைமுறைக்கு சிங்களபேரினவாதிகள் செய்த இந்த காட்டுமிராண்டித்தனம் தெரிந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனத்துடன் எரிப்பின் எச்சங்கள் எதுவும் இல்லாமல் துடைத்தெறிந்துவிட்டு புதிதாக கட்டி எழுப்பி உள்ளார்கள்.

சுவர்களில் படிந்திருந்த கரியசாம்பலையும், எரியாமல் எஞ்சிக்கிடந்த கூரையையும்,தீ தின்று துப்பிய புத்தக பக்கங்களையும், ஓலைச் சுவடிகளையும் அகற்றிவிட்டு புதியதாக கட்டடம்கட்டி அதற்கு வர்ணமும்பூசி எல்லாவற்றையும் மறைக்கலாம்.

ஆனால் ஒரு இனத்தின் நெஞ்சில் நெருப்பு சுட்ட அந்த வடு மாறாது. யாழ். நூலக எரிப்பு என்பது ஒரு ஆயுதப்படை வன்முறை என்பதற்கு அப்பால் அதுதான் சிங்களத்தின் மனோபாவத்தின் அடையாளம்.

ஒரு தேசத்துக்குள்ளேயே அவர்கள் பெரும்பான்மையாகவும் நாங்கள் சிறுபான்மையாகவும் வாழும்வரை அந்த மனோபாவம் மாறவேமாறாது.

இந்த இடத்தில் இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும். எங்களின் தேசிய அறிவுச்சொத்தான நூலகத்தை எரித்த பொழுதில் எங்கும் கோபமும் சீற்றமுமே தமிழ் மனமெங்கும் நிறைந்திருந்தது.

அதற்குமுன்னரே எழுந்துவிட்ட தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வீசிஎழச்செய்ததில் நூலகஎரிப்பும் ஒன்றுதான்.

பின்வந்த காலத்தில் விடுதலைப் போராட்டம் விடுதலைப் புலிகளின் வளர்ச்சியுடன் சிங்கள படைகளுக்கு சமனான பலத்துடன் எழுந்துநின்றது.

விடுதலைப்புலிகளால் சிங்கள தேசத்தின் எந்தமூலையிலும் தாக்குதல்நடாத்தக்கூடிய வலு இருந்தது.

ஆனாலும் எந்தஒரு சிங்கள நூலகத்தின் மீதும் வான்குண்டை வீசியும், உயிரம்பை ஏவியும் தீ மூட்டியும் பழிவாங்காமல் போராடிக்காட்டிய எங்கள் தேசப்புதல்வர்களின்அறம் விண்ணளவு உணர்ந்தது.

அந்த அறம்தான் என்றாவது நின்று கொல்லும் சிங்களத்தை.

எரியும் நினைவுகள்! ஈழத் தமிழர்களின் வாழ்வும் யாழ் நூலகமும் சிறப்பு கண்ணோட்டம்- Video
http://video.newmannar.com/2013/06/Burning-library.html
எரியும் நினைவுகள்! ஈழத் தமிழர்களின் வாழ்வும் யாழ் நூலகமும் சிறப்பு கண்ணோட்டம்- Video Reviewed by NEWMANNAR on June 01, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.