அண்மைய செய்திகள்

recent
-

பேரம் பேசும் சந்தர்ப்பத்தை கூட்டமைப்பு தமிழ் அரசியல் கைதிகளுக்காக பயன்படுத்த வேண்டும் -


தற்போதைய ஆட்சியாளர்களின் காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பேரம் பேசும் இறுதிச் சந்தர்ப்பமாக ஏப்ரல் ஐந்தில் நடைபெறவுள்ள வரவு செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பே உள்ளதுடன் அதனை தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக பயன்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
போர் நிறைவுக்கு வந்து ஒரு தாசாப்தத்தினை தொடவுள்ள நிலையில் இன்னமும் இலங்கையின் சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் போது இவர்களின் விடுதலையும் பிரதான பேச்சுபொருளாக இருந்தது. ஆனால், ஆட்சி மாறிய பின்னர் அந்த விடயத்தினை அழுத்தமாக பிடிப்பதற்கு தமிழ்த் தரப்புக்கள் தவறியே வந்துள்ளன.

ஒவ்வொரு வரவு செலவுத் திட்டத்திற்குமான இறுதி வாக்கெடுப்பிற்கு சற்று முன்னர் அரசாங்கத்தின் தலைவர்களுக்கும், கூட்டமைப்புக்கும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றன.
இதன்போது, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையும் பத்தோடுபதினொன்றாக கூறப்படுமே தவிர, செயல் எதுவுமே செயல் வடிவம் பெறுவதில்லை. வரவு செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு வருடமும் பாதுகாப்பு செலவீனத்திற்கு பெருந்தொகை நிதி ஒதுக்கப்படுகிறது.
இவ்வாண்டும் 398.7 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டும் ஆதரித்து வாக்களிக்கும் செயற்பாட்டினை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைவிடவில்லை.
மேலும், அதன் பின்னர் வாக்குறுதி அளிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் அழுத்தங்களை பிரயோகித்ததாகவும் இல்லை. இதுவொரு புறமிருக்கையில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தண்டனைக்கு அதிகமான காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் வழக்குகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதில்லை. வழக்குகளுக்கான தவணைக்காலம் நீண்ட இடைவெளியைக் கொண்டுள்ளது.
இவர்களுக்காக அமைக்கப்பட்ட விசேட நீதிமன்றமும் தற்போது செயற்பாட்டில் இல்லை. சிலருக்கான குற்றஒப்புதல் வாக்கு மூலங்கள் நீதிமன்றத்தால் நிரகாரிக்கப்பட்டுள்ள நிலையிலும், அடுத்து எவ்விதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாமல், சிறைச்சாலையில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதனைவிடவும், அரசியல் கைதிகள் தமது விடுதலைக்காக தாமாகவே போராட்டங்களை முன்னெடுக்கின்ற போது தமிழ் தலைமைகளே நேரடியாக சென்று வாக்குறுதிகளை, வழங்கி போராட்டங்களை நிறைவுக்கு கொண்டு வந்துள்ளன.

அதற்குப் பின்னரான காலத்தில் கண்துடைப்புக்காக பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றதே தவிர, செயற்பாட்டு ரீதியாக எவ்விதமான மாற்றங்களும் இடம்பெறவில்லை.
மக்களின் எழுச்சி காரணமாக எழுந்த எழுச்சிப் போராட்டங்களும் மழுங்கடிக்கப்பட்டு, கிடைக்கப்பெற்ற சந்தர்ப்பங்களும் வீணடிக்கப்பட்டு தற்போது தமிழ் அரசியல் கைதிகள் விடயம் கிடப்பிலேயே உள்ளது.
இவ்வாறான நிலையில், புதிய பயங்கரவாதச் சட்டம் அமுலாக்குவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருகின்றது. அதுபற்றி கூட்டமைப்பில் உள்ள சட்டம் தெளிந்து உணர்ந்தவர்கள் இது வரையில் வாய் திறக்காதுள்ளனர்.

ஆனால், தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராஜா புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் அபாயத்தினையும், பயங்கரத்தினையும், எடுத்துக் கூறிவருவதுடன், அச்சட்டம் அமுலானால் சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்பதையும், தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்.
இவ்வாறான பின்னணிகளை வைத்துப் பார்கிக்கின்ற போது, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையானது தனியே தேர்தல்கால கோசமா?, அந்த உறவுகளின் வாக்குகள் பெறப்பட்ட பின்னர் தற்போது அவ்விடயம் கைவிடப்பட்டு விட்டதா? போன்ற சந்தேகங்களையே எழுப்புகின்றது.
கடந்த காலத்தில் நடைபெற்ற வரவு செலவுத் திட்டங்கள், ஒக்டோபரில் நடைபெற்ற அரசியல் குழப்பம் பின்னர் அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்தல் என எந்தவொரு கட்டத்திலும் தமிழ் அரசியல் கைதிகள் விடயம் உட்பட எந்தவொரு விடயத்தினையும் முன் நிபந்தனையாக வைத்து .
பேரம்பேசுவதற்கான சந்தர்ப்பங்களை எல்லாம் கைவிட்டு தென்னிலங்கையிடம் சரணாகதி அடைந்துள்ள தமிழ்த் தரப்பினருக்கு தற்போதைய சூழலில் ஒரு இறுதிச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் ஐந்தாம் திகதி தற்போதைய ஆட்சியாளர்களின் இறுதி வரவு செலவுத் திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
இந்த வாக்கெடுப்பில் கூட்டமைப்பின் வாக்குகள் அதீத செல்வாக்கினை செலுத்துவதாக உள்ளன. எந்தவொரு நிபந்தனையுமின்றி கம்பெரலிய திட்டம் கிடைத்துவிட்டது என்ற மாயைக்குள் சிக்கி எழுந்தமானமாக ஆதரவளிக்காது, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு உறுதியான பதிலளிக்க வேண்டும் என்ற விடயத்தினை முன்வைத்து பேரம்பேச வேண்டும்.
இந்தச் சந்தர்ப்பத்தினை நழுவ விட்டால் எதிர்காலத்தில் கூட்டமைப்பினது எந்த ஒத்துழைப்பும் அரசாங்கத்திற்கு தேவைப்படாது. அதன் பின்னர் கூட்டமைப்பால் அரசாங்கத்தினை கிடுக்கிப்பிடிக்க முடியாது என்பதே யதார்த்தமாகும்.

ஆகவே வரவு செலவுத்திட்டம் முதல் ஜெனீவா வரை அரசாங்கத்திற்கு முண்டு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், 20-30 வருடங்கள் இளமையை, உறவுகளை தொலைத்து சிறைகளில் வாடுகின்றவர்களின் விடுதலையை இதயசுத்தியுடன் வலியுறுத்தி மனிதாபிமானத்தின் பால் தீர்க்கமான முடிவெடுக்க வேண்டியது அவசியமாகின்றது.
இந்தச் சந்தர்ப்பத்தினையும் கைவிட்ட பின்னர் நாடாளுமன்றத்தில் மக்கள் புரட்சி வெடிக்கும் என்றும் பயங்கர பின் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்றும் எச்சரிக்கை விடுவதாலும், சூளுரைப்பதாலும் எவ்விதமான நன்மைகளும் கிடைக்கப்போவதில்லை.
அத்தோடு மீண்டும் முன்னை நாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்று கூறிக்கொண்டு, ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மூன்று தடவை கால நீடிப்பிற்கு ஆதரவை வழங்கி விட்டு, போர்க்குற்றம் மனித உரிமை மீறல்களோடு சம்பந்தப்பட்டவர்களை பாதுகாத்து வைத்துக்கொண்டு மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்று கூறுவது கேலிக் கூத்தான விடயமாகும்.

இவை அனைத்துமே தேர்தலுக்கான முன்னுரைகளாகவே அமையும் என்பதை மக்கள் நன்கே அறிந்துள்ளனர் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பேரம் பேசும் சந்தர்ப்பத்தை கூட்டமைப்பு தமிழ் அரசியல் கைதிகளுக்காக பயன்படுத்த வேண்டும் - Reviewed by Author on March 29, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.