இன்று(08) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு – மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம்
கடந்த ஏப்ரல் 29ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இலங்கை மின்சக்தி திருத்தச் சட்டமூலம் இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் பின்னர் நாளை(09) நிறைவேற்றப்படும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த சட்டமூலத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம், போட்டி கொள்வனவு செயன்முறைக்கு வெளியே மின் உற்பத்தி திட்டங்களை செயற்படுத்துவதற்கான வாய்ப்பு கிட்டும் என சபையின் பொது முகாமையாளருக்கு கடிதம் வரையப்பட்டுள்ளது.
இதன்மூலம் மக்களுக்கு நிவாரண விலையில் மின்சாரத்தை வழங்கும் செயற்றிட்டமும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அமெரிக்காவின் நியூ போட்டர்ஸ் நிறுவனத்திற்கு விலைமனு கோரல் இன்றி LNG வழங்கியுள்ள நிலையில் மன்னார் மற்றும் பூநகரியில் 500 மெகாவாட் காற்றாலை மின்சாரத் திட்டத்திற்கு அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளாக மின்சார சபையின் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய சந்தையில் மின் அலகொன்றின் கொள்வனவு விலையை விட அதிக விலையில் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
காற்றாலை மின்சாரம் அலகொன்றிற்கு தசம் 7 டொலருக்கு அதிக நிதியில் கொள்வனவு செய்வதற்கும் அதனை டொலரில் செலுத்துவதற்கும் இணக்கம் காணப்படட்டுள்ளதாக மின்சார சபையின் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைவிட குறைந்த விலையில் காற்றாலை மின்சார அலகொன்றை வழங்குவதற்கு உள்நாட்டு முதலீட்டாளர்கள் உள்ள நிலையிலும் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கொடுக்கல் – வாங்கலானது நாட்டின் மின்சார விநியோகத்தில் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என மின் பொறியியலாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டத்திருத்தம் மூலம் இந்த கொடுக்கல் – வாங்கல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மின்சார கொள்வனவின் போது போட்டிக்கு புறம்பாக நிறுவனங்களுக்கு காற்றாலை மின் திட்டங்களை வழங்குவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் அரசியல் காரணங்களுக்காக செயற்படும் மின்சார சபைத் தலைவரை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படாவிடின் இன்று(08) நள்ளிரவு முதல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று(08) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு – மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம்
Reviewed by Author
on
June 08, 2022
Rating:

No comments:
Post a Comment