அண்மைய செய்திகள்

recent
-

நவராத்திரி விரதத்தின் இரண்டாம் நாள் இன்று

நவராத்திரி இரண்டாம் நாள் - 

நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் மலைமகளான துர்க்கா தேவிக்கு உரியதாக கொண்டாடுகிறோம். அதன்படி இரண்டாம் நாளான நாளை துர்க்கை அம்மனை, ராஜ ராஜேஸ்வரியாக அலங்காரத்தில் வழிபட வேண்டும். பொதுவாக துர்க்கை என்றாலே அழிக்கும் தெய்வம், உக்ர வடிவானவள் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை அது கிடையாது. துர்க்கா தேவி என்பவள் காக்கும் தெய்வம். 

  துர்க்கை என்றால் என்ன? 

அந்த காலத்தில் கொற்றவை என்ற பெயரால் வழிபடப்பட்ட தெய்வம் இந்த துர்க்கை அம்மன் தான். சங்க இலக்கியங்களில் கொற்றவை என்ற பெயரால் போற்றப்பட்ட தெய்வம். வெற்றியை தரக்கூடிய தெய்வம். அந்த காலங்களில் மன்னர்கள் போருக்கு செல்வதற்கு முன் வெற்றி கிடைக்க வேண்டும் என பிரார்த்தனை செய்யப்படும் தெய்வமாகவும் இருந்தது துர்க்கை அம்மன் தான். காளி தேவியின் வடிவமாகவும், துர்க்கையின் அம்சமாகவும் விளங்கக் கூடிய தெய்வத்தை தான் கொற்றவை என சங்க காலத்தில் வணங்கினர். தற்போது நாம் துர்க்கா தேவியாக வணங்கி வருகிறோம். அம்பிகையின் உக்ரமான சொரூபமாக சொல்லப்படுவது இந்த துர்க்கா தேவி. துர்க்கை என்ற சொல், துர்க்கம் என்ற சொல்லின் மூலம் என கருதப்படுகிறது.

துர்க்கம் என்றால் தமிழில் அகழி என்று பொருள். அந்த காலத்தில் ராஜாக்களின் அரண்மனை அல்லது கோட்டை அல்லது நாட்டை சுற்றி ஆழமான குழிகள் வெட்டி, அதில் நீர் நிரப்பி, முதலைகள் வளர்ப்பார்கள். இவற்றிற்கு அகழி என்று பெயர். நாட்டிற்கு அல்லது அரண்மனைக்கு ஏதாவது ஆபத்து வரும் போது, பாதையை அமைத்து விடுவார்கள். இதனால் எதிரிகள் முதலைகள் இருக்கும் தண்ணீருக்குள் இறங்கி, கோட்டை சுவர் மீது ஏறி, அரண்மனைக்குள் அல்லது நாட்டிற்குள் வர முடியாது. அது போல் நமது வாழ்க்கைக்கு பெரிய அரண் அமைத்து, துன்பங்களை நம்மிடம் அண்ட விடாத தெய்வம் என்பதால் துர்க்கை என்று பெயரால் அம்பாளை நாம் அழைக்கிறோம். துர்க்கை என்றாலே துன்பத்தை அகற்றி, வெற்றி தரக்கூடியவர் என்று பொருள். துர்க்கை என்றாலே யாராலும் வெற்றி பெற முடியாதவள் என்ற அர்த்தமும் உண்டு. இந்த துர்க்கா தேவியானவளை பொதுவாக நாம் சிவன் கோயில்களில் வழிபட முடியும். சிவன் கோயில்களில் சிவ துர்க்கையாக வழிபடும் அதே சமயம், விஷ்ணு கோயில்களில் விஷ்ணு துர்க்கை என்ற திருநாமத்தாலும் அம்பாள் வழிபடப்படுகிறாள். 

  என்ன பிரசாதம் ? - 

அம்பிகையிடம் வெற்றியை பிரார்த்தனை செய்வதற்குரிய நாளாக நவராத்திரியின் 2ம் நாள் அமைகிறது. அம்பாளை வெற்றி பெறக் கூடிய கோலமான ராஜ ராஜேஸ்வரி அலங்காரத்தில் அலங்கரிக்க வேண்டும். இரண்டாவது நாளில் கட்டம் வகையிலான கோலமிட வேண்டும். அம்பிகைக்கு முல்லை மலர் மற்றும் இலை வகையில் மருவு வகை இலையையும் சாற்றி வழிபட வேண்டும். நவராத்திரி இரண்டாம் நாளுக்குரிய பிரசாதமாக புளியோதரை மற்றும் பழ வகைகளில் மாம்பழம் வைத்து வழிபட வேண்டும். மஞ்சள் நிறத்திலான வஸ்திரம் அணிவித்து, நாமும் அணிந்து கொண்டு, கல்யாணி ராகத்தில் அமைந்த பாடல்களை பாடி அம்பாளை வழிபட வேண்டும். 

  என்ன பலன்கள் ? 

அம்பாளின் முன் அமர்ந்து ராஜ ராஜேஸ்வரி அஷ்டகத்தை படிக்கலாம் அல்லது ஒலிக்கச் செய்யலாம். முதல் படிக்கும் கீழே விளக்கேற்றி, தட்டில் வெற்றிலை பாக்கு, பழம் வைத்து, நைவேத்தியம் வைத்து ஆரத்தில் காட்ட வேண்டும். நவராத்திரியின் இரண்டாம் நாளில் இந்த முறைப்படி அம்பாளை வழிபட்டால் வீட்டில் தனம், தானியம் பெருகும் என்பது ஐதீகம். தனம் என்பது செல்வம் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த காலத்தில் விவசாயம் செய்து வந்ததால் தானியம் பெருக வேண்டும் என்றார்கள். ஆனால் தானியம் என்பது பொதுவாக உணவுப் பொருட்களை குறிக்கும்.

நவராத்திரி விரதத்தின் இரண்டாம் நாள் இன்று Reviewed by Author on September 27, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.