அண்மைய செய்திகள்

recent
-

மடு அன்னையின் பக்தர்களுக்கு மன்னாரில் ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழி

 மன்னார் – மடு ​தேவாலயத்திற்கு வருவோர் இடையூறின்றி வழிபாடுகளில் ஈடுபடுவாற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

மடு மற்றும் சிவனொளிபாத மலை போன்ற புனித தளங்களுக்கான நுழைவு வீதிகள் அவற்றை வழிப்பட வருவோருக்காகவே அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்து தண்டப்பணம் அறவிடுவது நியாமற்றதெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 

மடு தேவாலயத்தில் வழிபாட்டுக்காக வருவோர் கைது செய்யப்படும் பட்சத்தில் உடனடியாக அது குறித்து ஜனாதிபதி அலுவலகத்திற்கு அறிவிக்கும்படியும் ஜனாதிபதி இதன்போது அறிவித்தார்.

மன்னார் மாவட்டச் செலயகத்தில் இன்று (16) நடைபெற்ற விசேட மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்திலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மடு தேவாலயத்தை வழிபட வருவோருக்காக தேவாலய நுழைவு வீதியின் இரு புறங்களையும் தூய்மைப்படுத்தி அபிவிருத்தி பணிகளை செய்யுமாறு இராணுவத்தினருக்கு அறிவுறுத்தல் வழங்கிய ஜனாதிபதி, அந்த பணிகளுக்காக மன்னார் மறை மாவட்ட ஆயரின் பிரதிநிதி ஒருவர், வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினர், வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் மற்றும் பொலிஸாரை தொடர்பு படுத்திக்கொண்டு செயற்படுமாறும் அறிவுறுத்தினார்.

எதிர்வரும் நாட்களில் நடக்கவிருக்கும் மடு தேவாலயத்தின் உற்சவத்திற்கு முன்னதாக தூய்மைப்படுத்தல் பணிகளை நிறைவு செய்யுமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

மன்னாரின் அபிவிருத்திச் செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்கான விசேட மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில், பிரதேச அரசியல் பிரதிநிதிகள், அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

மாவட்ட சுகாதார,கல்வி,நீர்ப்பாசனம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் காணப்படும் பிரச்சினைகள் இதன்போது ஜனாதிபதியிடம் நேரடியாகச் சுட்டிக்காட்டப்பட்டதோடு, அந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் ஜனாதிபதி அவ்வப்போதே வலியுறுத்தினார்.

அதேபோல் மன்னார் வைத்தியசாலையில் குறைப்பாடாக காணப்படும் CT ஸ்கேன் இயந்திரத்தை பெற்றுத்தருமாறு வைத்தியசாலை பணிப்பாளர் விடுத்த கோரிக்கை தொடர்பில் கவனமெடுத்து விரைவில் அதனை பெற்றுத்தருவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

மேலும் மன்னார் மாவட்டத்திற்கு கிடைக்காமல் போன் அபிவிருத்தியை மீண்டும் பெற்றுக் கொடுப்பதற்கான வேலைத்திட்டம் இவ்வருடத்திலேயே ஆரம்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

எதிர்வரும் ஐந்து தசாப்தங்களில் ஏற்படப்போகும் காலநிலை மாற்றங்களுக்கான தீர்வுகளை முன்கூட்டியே இலங்கை அறிந்துகொள்ள வேண்டியிருப்பதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, அடுத்த ஐம்பது வருட காலத்திற்கு உலர் வலயத்திற்கு மழைவீழ்ச்சி அதிகரிக்கும் அதேநேரம் வெப்ப வலயங்களுக்குள் மழைவீழ்ச்சி பதிவாகாத நிலைமை ஏற்படக்கூடுமென கணிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

அதேபோல், மாற்றம் கண்டுவரும் உலகத்தின் நகர்வுகளுக்கமைய பொருளாதார, சமூக, கல்வி மற்றும் விவசாய துறையாக மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.



மடு அன்னையின் பக்தர்களுக்கு மன்னாரில் ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழி Reviewed by Author on June 17, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.