மனிதக் கருவிலும் மரபணு மாற்றமா?
இயற்கைப் படைப்பினை கூர்ந்து நோக்குகையில் அது எத்துணை அழகானது எனத் தெரியவரும். சூரிய சக்தியை வேதிச் சக்தியாக மாற்றி, தனக்கும் புவிவாழ் உயிரினங்களுக்கும் தரும் பணியைத் தாவரங்கள் செய்தவாறுள்ளன.
தாவரத்தின் ஒளித்தொகுப்பிற்குத் தேவையான காபனீரொட்சைட்டு வாயுவை உயிரினங்கள் தருகையில், ஒளித்தொகுப்பில் வெளியேறும் ஒட்சிசன் உயிரினங்களின் சுவாசத்திற்கு உதவுகின்றன. நிலத்திலிருந்து ஆவியாகும் நீர் மீண்டும் மழையாகப் பொழிகின்றது.
தாவரத்திலிருந்து கீழே விழும் சருகுகள் படிப்படியாக உக்கி தாவரத்திற்கே பசளை ஆகின்றன. தாவரங்களின் விதை மேற்பரப்பின் இனிமைப் பாகத்தினை உண்ண விலங்குகள் அதனை எடுத்துச் செல்கின்றன. அப்பாகத்தினை உண்டபின்னர் வேறிடத்தில் அவ்விதையினைப் போட்டுச் செல்கின்றன.
இது தாவர விதைகள் பரவ உதவுகின்றன. இவ்வாறாக, இயற்கையின் பிள்ளைகள் தமக்கிடையே ஒருவருக்கொருவர் உதவும் முறையே தனி அழகு.
இந்த இயற்கைச் சுற்றாடல் மனிதரால் இடையூறிற்கு உள்ளாகுகையில் அதன் அழகும் சமநிலையும் குழப்பமடைகின்றன.
உதாரணமாக, பல்பகுதியத்தினால் ஆக்கப்பட்ட உக்கிப்போகாத அங்காடிப் பைகள் அறிவியலின் அதிசயம் என முதலில் நோக்கப்பட்டாலும், அவை அழியாது புவிமேற்பரப்பில் தேங்கித் தரும் தொல்லைகள் அதிகம். அறிவியல் வழியாகப் பல நன்மைகள் உணரப்பட்டாலும், தொலைநோக்கு இல்லாது கண்டுபிடிக்கப்பட்ட படைப்புக்களால் தீமைகளும் விளைகின்றன. எனவே, சிற்சில துறைகளில் ஆய்வுகள் ஊடான மாற்றம் விளைவித்தல்களுக்குத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
உயிரினங்களின் இயல்புகளை பரம்பரை பரம்பரையாக டி.என்.ஏ. மூலக்கூறுகள் காவிச் செல்லுகின்றன. அந்த உயிரினங்கள் இனம் பெருக்குகையில், இரு எதிர்பால் உயிரினங்களில் கிடைக்கப்பெறும் இனப்பெருக்கத்திற்குப் பொறுப்பான கலங்கள் இணைந்து புதிய உயிரினம் உருவாகின்றது. ஆரம்பத்தில் உருவாகும் உயிரினம் ஒரு கலம் கொண்டதாகக் காணப்படும். பின்னரே கலப்பிரிகை ஊடாகப் பல கலங்கள் பல்கிப் பெருக ஆரம்பித்து, அதிலுள்ள டி.என்.ஏ. இன் தகவல்களுக்கேற்ப உயிரினத்தின் உடல் உருவம் பெறும். உயிரினம் ஒரு கலம் கொண்டதாக இருக்கையில் அக்கலத்தின் டி.என்.ஏ. இல் மாற்றத்தினை ஏற்படுத்தினால், ஏற்படுத்தப்பட்ட மாற்றத்திற்கு அமைவாக உயிரினம் உருவாக ஆரம்பித்துவிடும்.
ஏலவே தாவரங்களின் கலங்களில் மரபணு மாற்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதன் அறுவடைகள் வெளிவர ஆரம்பித்துவிட்டன. புதிய இயல்புகள் கொண்ட தாவரங்களைத் தரும் மரபணு மாற்றப்பட்ட விதையினங்கள் தற்போது விற்பனையாகின்றன.
விலங்குகளிலும் மரபணு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு, முதன்முதலில் ‘டோலி’ எனப் பெயரிடப்பட்ட ஆடு ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர் வெவ்வேறு உயிரினங்களும் மரபணு மாற்றம் ஏற்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்டிருந்தன. மின்மினிப் பூச்சியின் மரபணுவினை தாவரத்தின் மரபணுவில் புகுத்துவதன் ஊடாக ஒளிரும் தாவரம் போன்ற அதிசயப் படைப்புக்களும் மரபணு மாற்றல் தொழில்நுட்பத்தினூடாக விளைவாக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான ஆய்வுகளை மனிதனின் மரபணுவிலும் மேற்கொள்ள ஆய்வாளர்கள் ஆர்வம் கொண்டிருந்தாலும், அவ்வாறான ஆய்வுகள் பல நாடுகளில் சட்டத்தினால் முற்றாகத் தடுக்கப்பட்டிருக்கின்றன. அண்மையில் பிரித்தானியா ஆய்வாளர் என்பவரால் மனிதக் கருவில் மரபணு மாற்றத்தினை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குமாறு விண்ணப்பித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் பிரசுரமான ஆய்வுக் கட்டுரை ஒன்றில், சீனப் பல்கலைக்கழகத்தில் மனிதகருவில் மரபணு மாற்றம் செய்யப்பட்டமை தொடர்பான விபரங்கள் வெளியாகி இருந்தன. இது, ஏனைய நாடுகளிலும் மனிதக் கருவிலான மரபணு மாற்றம் தொடர்பான ஆய்வுகள் அனுமதிக்கப்படவேண்டும் என்ற அழுத்தத்திற்கு வழியேற்படுத்தியுள்ளது.
உயிரின இயல்புகள் டி.என்.ஏ. வழியே கடத்தப்படுகையில் பரம்பரை நோய்களுக்குக் காரணமான பரம்பரை அலகுகளும் வாரிசைச் சென்றடைகின்றன. இதனை, மரபணு மாற்றத்தின் வாயிலாக அந்நோய்கள் தொடர்பான மரபணுக்களை நீக்கி, நோயற்ற வாரிசை உருவாக்க முடியும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இதனை முன்னிறுத்தியே ஆய்வாளர்கள் தமது ஆய்விற்கு அனுமதி வழங்குமாறு அழுத்தம் தருகின்றனர்.
எனினும், மரபணு மாற்றங்கள் தொடர்பான தொலைநோக்குத் தீர்க்கதரிசனங்கள் உவப்பானவையாக இல்லை. அத்துடன், ஆய்வுகளில் ஏற்படும் தவறுகள் பரம்பரை பரம்பரையாக மனித குலத்தினை பாதிப்பதுடன், அவலட்சணமான மற்றும் பிறழ்வுகள் கொண்ட வாரிசுகள் உருவாகவும் வழிவகுத்துவிடக்கூடும். தொலைநோக்கற்ற அறிவியல் படைப்புக்கள் விளைவிக்கும் தீமைகளைக் கருத்திற்கொண்டு, மனித குலம் ‘குரங்கின் கை பூமாலை’ என்ற நிலைக்கு உள்ளாகிவிடக்கூடாது என்ற எண்ணங்களே எதிர்ப்புக் குரல்களாகப் பதிவு செய்யப்படுகின்றன.
மனிதக் கருவிலும் மரபணு மாற்றமா?
Reviewed by Author
on
October 11, 2015
Rating:
No comments:
Post a Comment