கலந்தாலோசனை அமர்வுகளை நடத்திய போது மக்கள் மத்தியில் நம்பிக்கையின்மை காணப்பட்டது : ஜே.மஜித் ....
அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்குவதன் மூலமே ஜெனிவா பிரேரணையையும் ஏனைய விடயங்களையும் அமுல் படுத்திக்கொள்ள முடியும் அதாவது அரசாங்கத்திற்கு இந்த கால அவகாச பகுதியில் அழுத்தங்களை பிரயோகித்து பரிந்துரைகளை அமுல்படுத்திக்கொள்ள முடியும் என்று மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார்.
ஜெனிவா வளாகத்தில் நேற்று நடைபெற்ற நல்லிணக்க செயலணியின் அறிக்கை தொடர்பான விசேட உபக்குழுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்த விசேட உப குழுக் கூட்டத்தில் மனித உரிமை செயற்பாட்டாளர் நிமால்கா பெர்ணான்டோ உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் தமிழ்த் தரப்பு பிரதிநிதிகளும் புலம்பெயர் அமைப்பின் பிரதிநிதிகளும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் முக்கியஸ்தர்களின் அரசசார்பற்ற நிறுவன மற்றும் சிவில் சமூக தலைவர்களும் கலந்து கொண்டனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் கலந்தாலோசனை செயற்பாட்டில் ஈடுபட்ட ஜே.மஜித் என்பவர் அந்த உப குழு கூட்டத்தில் உரையாற்றுகையில்,
நாம் இந்த கலந்தாலோசனை அமர்வுகளை நடத்திய போது மக்கள் மத்தியில் நம்பிக்கையின்மை காணப்பட்டது. கசப்பான அனுபவங்கள் அவர்கள் மனதில் இருந்தன. கடந்த காலங்களில் ஆணைக்குழுக்களின் அறிக்கைகளுக்கு எதுவும் நடக்காமையே இதற்கு காரணமாகும்.
இதில் முஸ்லீம் மக்களின் நிலைமையை எடுத்து பார்த்தால் அவர்கள் இந்த யுத்தத்தில் இணையாவிட்டாலும் முஸ்லீம்களுக்கான நீதி நிலைமாற்று கால நீதியில் வராது என்றதொரு கருத்து நிலவியதை நாங்கள் பார்க்க கூடியதாக இருந்தது. இறுதியில் நாங்கள் அறிக்கையை கொண்டுவந்தோம். எவ்வாறெனினும் இந்த காலப்பகுதியில் சில தடைகளை நாங்கள் அவதானித்தோம் உதாரணமாக கலந்தாலோசனை செயற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற போது பாராளுமன்றத்தில் காணாமல் போனோர் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது இது மக்கள் மத்தியில் சிக்கலான நிலையை தோற்றுவித்தது. எமது அறிக்கை வெளிவந்ததும் மக்கள் அதில் திருப்தியடைந்தனர் என்றார்.
கலந்தாலோசனை அமர்வுகளை நடத்திய போது மக்கள் மத்தியில் நம்பிக்கையின்மை காணப்பட்டது : ஜே.மஜித் ....
Reviewed by Author
on
March 21, 2017
Rating:
No comments:
Post a Comment