அண்மைய செய்திகள்

recent
-

வடக்கில் சிங்கள, முஸ்லிம் மக்களை குடியேற்றுவதால் மோதல் நிலை ஏற்படும்:சிவாஜிலிங்கம்


வடக்கில் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களின் மீள்குடியேற்றத்திற்காகவே வடக்கிற்கான மீள்குடியேற்றச் செயலணியை அரசாங்கம் உருவாக்கியுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்களை தொடர்ச்சியாக நடத்த முற்படுவார்களானால் மோதல் நிலையொன்று உருவாகும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கில் சிங்கள - முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் எமது பிராந்திய செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கில் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களை மீள்குடியேற்றத்திற்காகவே வடக்கிற்கான மீள்குடியேற்றச் செயலணியை அரசாங்கம் உருவாக்கியுள்ளது.

இவ்வாறு உருவாக்கப்பட்ட மீள்குடியேற்றச் செயலணியை முதலமைச்சரும், நாங்களும் கடுமையாக ஆட்சேபித்தோம்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய், நாயாறு போன்ற பகுதிகளில் இருந்து 2000ற்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பங்கள் கடந்த 1983ம் ஆண்டில் யுத்தம் காரணமாக விரட்டியடிக்கப்பட்ட நிலையில் இடம்பெயர்ந்து இன்னமும் மீள்குடியேற்றப்படாத நிலையிலுள்ளனர்.

அதேபோன்று முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களும் இடம்பெயர்ந்து வாழ்கின்றனர். இவ்வாறான நிலையில் மீள்குடியேற்றம் விகிதாசார அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதைவிடுத்து முஸ்லிம்களை மாத்திரம் மீள்குடியேற்றுவது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் உறவில் மிகப் பாரிய விரிசலையே ஏற்படுத்தும்.

இதன் காரணமாக விரும்பத்தகாத சூழல் தோற்றுவிக்கப்படலாம் என்ற அச்சமும் எம் மத்தியில் காணப்படுகின்றது. ஆகவே, இதனைத் தவிர்ப்பதற்கு உரிய உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

விகிதாசார அடிப்படையில் இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்துவதே சிறந்த வழி. குறிப்பிட்ட ஒரு இன மக்களை மாத்திரம் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுவது அசாதாரணதொரு சூழலையே உருவாக்கும்.

இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்களை எமது மக்கள் தொடர்ச்சியாக நடத்த முற்படுவார்களானால் ஒரு மோதல் நிலைமையே உருவாகும் என வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கில் சிங்கள, முஸ்லிம் மக்களை குடியேற்றுவதால் மோதல் நிலை ஏற்படும்:சிவாஜிலிங்கம் Reviewed by Author on July 18, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.