கடலைவிட பூமிக்கடியில் அதிகளவு தண்ணீர்: ஆய்வில் தகவல்
கடலில் இருக்கும் தண்ணீரைவிட அதிக அளவு தண்ணீர் பூமிக்கு அடியில் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
தண்ணீர் அதிகமாக இருக்கும் இடம் எது? என்று கேட்டால் எல்லோரும் சொல்லிவிடுவார்கள் கடலில்தான் என்று. பெரும்பான்மையோர் நினைத்துக் கொண்டிருப்பதும் அதைத்தான். ஆனால் தண்ணீர் அதிகமாக இருக்கும் பகுதி பூமிக்கடியில்தான் என்று வடமேற்கு பல்கலைக்கழகம் மற்றும் நியூ மெக்ஸிகோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
410லிருந்து 660 கி.மீ. (ஏறத்தாழ சென்னையிலிருந்து திருநெல்வேலி தூரம்) ஆழத்தில் தண்ணீர் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த தண்ணீர் பிடிப்பு திரவ நிலையிலோ, ஆவி நிலையிலோ, பனிக்கட்டியாகவோ இல்லை. நீர் மூலக்கூறுகளாக கனிமங்களோடு கலந்தும், பாறைகளை சுற்றியுள்ள பகுதிகளிலும் இருக்கிறது. இந்த கண்டுபிடிப்பு பூமியைப் பற்றி மேலும் ஆய்வு செய்வோருக்கு உதவியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதை வைத்து இனி ஆராய்ச்சிகளும் பெருகும் என்று கூறுகின்றனர்.
வட அமெரிக்கா பகுதியில் குறிப்பிட்ட இடத்தை தேர்ந்தெடுத்து அதிர்வலைகளை (Seismic waves) பூமிக்கடியில் செலுத்தி இந்த ஆய்வை மேற்கொண்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதிர்வலைகளின் பயண தூரத்தை கணக்கிட்டு தண்ணீர் இருப்பு அறியப்பட்டுள்ளது. இந்த தரவை வைத்து ஒட்டுமொத்த பூமியின் தண்ணீர் இருப்பையும் கணக்கிட்டு உள்ளனர். கடலில் இருக்கும் தண்ணீரின் அளவைவிட பூமிக்கடியில் கூடுதலாக இருப்பதாக கணக்கீடு மூலம் தெரிய வந்துள்ளது.
"பூமிக்கடியில் மாற்று மண்டலம் (Transition zone) என்று சொல்லப்படுகிற பகுதியில் பாறைகளை சுற்றி தண்ணீர் பிடிப்பு அதிகமாக உள்ளது. அதன் உருகும் தன்மையை வைத்தும் தண்ணீர் பிடிப்பை அறிய முடிந்தது " என்கிறார் நியூ மெக்ஸிகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பிராண்டன் ஸெமாண்ட்.
நன்றி விகடன்-
த. ஜெயகுமார்-
கடலைவிட பூமிக்கடியில் அதிகளவு தண்ணீர்: ஆய்வில் தகவல்
Reviewed by Author
on
September 15, 2017
Rating:
No comments:
Post a Comment