1400000 மாணவர்கள் காலை நேர உணவை உட்கொள்வதில்லை....சுகாதார அமைச்சின் மருத்துவ ஆய்வு
இலங்கையில் 33 வீதமான மாணவர்கள் காலை நேர உணவை உட்கொள்வதில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, 14 இலட்சம் மாணவர்கள் காலை நேர உணவை உட்கொள்வதில்லை என ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சின் மருத்துவ ஆய்வு மையத்தின் போஷாக்கு பிரிவுக்கு பொறுப்பான சிறப்பு வைத்திய நிபுணரான வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ கருத்து தெரிவிக்கையில்,
“காலை உணவை உட்கொள்ளாத மாணவர்களிடத்தில் கணித ஆற்றல், நினைவாற்றல் குறைதல், பலவீனமாக காணப்படுதல், பிரச்சனைகளை தீர்க்கும் ஆற்றல் குறைதல், போட்டிப் பரீட்சைகளில் குறைந்த புள்ளிகளை பெறுதல் மற்றும் உயரம் குறைதல் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன.
பொதுவாக காலை நேரங்களில் தமது பிள்ளைகளுக்கு பால் மட்டும் பருக கொடுப்பதை பெற்றோர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். அது போதுமான ஒன்றல்ல.
பள்ளி பருவத்திலேயே மாணவர்களிடத்தில் துரிதமான வளர்ச்சி காணப்படும். எனவே பால் கொடுப்பதை பார்க்கிலும் உணவு கொடுப்பது சிறந்த ஒன்றாகும்.
இதன்படி, காலை உணவு என்பது தானியம், பழவகை, மரக்கறி, மாமிசம் என உணவு பிரிவுகளை கொண்ட பிரதான உணவு வேளையாக இருத்தல் வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, அண்மையில் பாடசாலை மாணவி ஒருவர் சத்தி எடுத்ததன் காரணமாக பாடசாலையிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த சம்பவம் பாரிய விடயமாக பேசப்பட்டிருந்தது.
குறித்த மாணவி கர்ப்பமடைந்துள்ளதாக தெரிவித்து பாடசாலையிலிருந்து இடை நிறுத்தப்பட்டிருந்த போதிலும், பசி காரணமாகவே அந்த மாணவி சத்தி எடுத்திருந்தமை வைத்திய பரிசோதனையின் மூலம் தெரியவந்திருந்தது.
இந்நிலையிலேயே, பாடசாலை மாணவர்களின் காலை நேர உணவு பழக்க வழக்கம் தொடர்பில் இவ்வாறான ஒரு தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், மாணவர்கள் காலை நேர உணவு உட்கொள்ளாமைக்கு பொருளாதாரம், சமூகம் மற்றும் சில சந்தர்ப்பங்களில் மதம் கலாச்சார போன்றவை தாக்கத்தை செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1400000 மாணவர்கள் காலை நேர உணவை உட்கொள்வதில்லை....சுகாதார அமைச்சின் மருத்துவ ஆய்வு
Reviewed by Author
on
November 07, 2017
Rating:
No comments:
Post a Comment