அண்மைய செய்திகள்

recent
-

பிரபாகரன் ஆயுதம் ஏந்தி போராட இதுவே முக்கிய காரணம்: நாடாளுமன்றில் சாள்ஸ்


இந்த நாடு ஒரு மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்புச் சபையின் இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்ட கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
“இந்த நாடு ஓர் ஐக்கிய நாடாக இருக்க வேண்டும் என்பது எனது முதலாவது வேண்டுகோள். அத்தோடு இந்த நாடு மத சார்பற்ற நாடாகவும் இருக்க வேண்டும்.
உதாரணமாக, இலங்கையின் அயல் நாடுகளான இந்தியா, நேபாளம் போன்றவற்றை எடுத்துக்கொண்டால், அங்கு ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள் அதிகமாக இருந்தாலும் மத சார்பற்ற நாடாகத்தான் அவர்கள் யாப்பை அமைத்து வைத்திருக்கின்றார்கள்.
அதன்மூலம் நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டு சென்றிருக்கிறார்கள். இதனை நாங்கள் எங்கள் கண்முன்னே கண்டுள்ளோம். அந்த வகையில் இந்த நாடு ஒரு மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.
அதேநேரத்தில் தற்போதைய யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சிங்கள மொழிக்கு முன்னுரிமையும் அதேபோன்று தமிழ் மொழிக்கும் முன்னுரிமை என்ற பதம் இல்லாமல் சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளும் அரச கரும மொழிகளாக்கப்பட வேண்டும். ஏனென்றால், சிங்களம் அரச கரும மொழியென்று பிரகடனப்படுத்தப்பட்டு, அதற்குப்பின் அரசியலமைப்புக்கான பதின்மூன்றாவது திருத்தத்தில் தமிழும் அரச கரும மொழியாதல் வேண்டுமென சேர்க்கப்பட்டது.
இதன் காரணத்தால்தான் 68 வருடங்களின் பின்பு தமிழில் தேசிய கீதம் பாட வேண்டிய ஒரு சூழ்நிலை வந்ததென்று நான் நினைக்கின்றேன்.
அன்று அந்த யாப்பில் சிங்கள மொழியும் தமிழ் மொழியும் அரச கரும மொழியென்று இடம்பெற்றிருந்தால் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதற்கு 68 வருடங்கள் தேவையில்லை.
அந்த வகையில் இந்த அரச கரும மொழியென்பது மிகவும் முக்கியமானதொரு விடயம். இந்த நாட்டில் இருக்கின்ற தமிழ்? சிங்கள மொழிகள் அரச கரும மொழிகள் என்பது வரவிருக்கின்ற புதிய யாப்பில் இடம்பெற வேண்டும்.
அடுத்து, அரசியலமைப்புச் சபையின் இடைக்கால அறிக்கையிலும் சரி, 1987ஆம் ஆண்டு மாகாண சபைகள் சட்டத்திலும் சரி, 'மாகாணசபை நிர்வாகம்' என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அது 'மாகாண அரசு' என்று புதிய யாப்பில் இடம்பெற வேண்டும்.
ஏனென்றால், 3 நிலைகளில் இந்த நாட்டில் தற்பொழுது ஆட்சி முறைகள் இருக்கின்றன. அதாவது, மத்திய அரசாங்கத்தினுடைய ஆட்சி முறை, மாகாண அரசாங்கத்தினுடைய ஆட்சி முறை, உள்ளூராட்சி சபைகளின் ஆட்சி முறை. அப்படியிருக்கின்றபோது மாகாண சபை நிர்வாகம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது மாகாண அரசாக இருக்க வேண்டும்.
மேலும், வடக்கு, கிழக்கு ஒரு மாகாணமாக இருக்க வேண்டும். அது தமிழ் பேசும் மக்களுக்குரிய மாகாணம் என்பது புதிய யாப்பில் இடம்பெற வேண்டுமென்று நான் இந்த நேரத்திலே விசேடமாகக் குறிப்பிட விரும்புகின்றேன்.
அத்துடன் மாகாணங்களுக்கு அதியுயர் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். அதுமட்டுமல்ல வழங்கப்பட்ட அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்தால் மீளப் பெற முடியாத வகையில் அதற்கான ஏற்பாடுகள் புதிய யாப்பில் இடம்பெற வேண்டும் என்பதையும் இச்சந்தர்ப்பத்திலே கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
வடக்குக் கிழக்கு மாகாணத்தைத் தமிழ் பேசும் மக்களுடைய மாகாணமாகக் கேட்பதற்குத் தமிழர்கள் தகுதியுடையவர்கள் என்பதையும் நான் இந்த நேரத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். அத்துடன் இலங்கையின் வரலாற்றில் நடைபெற்ற ஒரு சில விடயங்களையும் நான் இந்தச் சபைக்குக் கூற விரும்புகின்றேன்.
வடக்குக் கிழக்குப் பிரதேசத்தைத் தமிழ் பேசும் மாநிலமாகக் கேட்பதற்கு எங்களுடைய தமிழ் மக்களுக்கு ஏன் உரிமையிருக்கின்றது? ஏனென்றால் ஆதிகாலத்தில் இந்தத் தீவு ஒரு நாடாக இருக்கவில்லை.
இது பல இராச்சியங்களாக இருந்தது. ஆதிகாலத்தில் கண்டி, யாழ்ப்பாணம், கொழும்பு என 3 பிரதான இராச்சியங்கள் இருந்தன. அந்த ஒவ்வொரு இராச்சியங்களுக்குக் கீழும் சிற்றரசர்கள் ஆண்டிருக்கின்றார்கள். ஆனால், ஆதிகாலத்தில் இந்த 3 இராச்சியங்களையும் தமிழர்கள் ஆண்டிருக்கின்றார்கள். அதன் பின்பு சிங்கள மன்னர்கள் ஆண்டிருக்கின்றார்கள்.

ஆனால்? அனைத்து இராச்சியங்களையும் தமிழ் மன்னர்கள் ஆண்டிருக்கின்றார்கள். ஆனால்? அனைத்து இராச்சியங்களையும் சிங்கள மன்னர்கள் ஆண்டதாக வரலாறில்லை. அப்படியான ஒரு சூழ்நிலையில் இந்த நாட்டில் தமிழர்கள் தங்களுடைய தாயகப் பகுதியைத் தமிழர்கள் பிரதேசமாகக் கேட்பதற்கு முழுத் தகுதியுடையவர்கள் என்பதையும் நான் இந்தச் சபைக்குக் கூறவிரும்புகின்றேன்.
அந்த இராச்சியங்களுடைய ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது 1505ஆம் ஆண்டு வர்த்தக நோக்கமாகப் போர்த்துக்கீச நாட்டிலிருந்து வந்த டொன் லொரேன்கோ டி அல்மேதா என்பவருடைய வருகையுடன் அந்நிய நாடுகளுடைய ஆக்கிரமிப்புக்கு இந்த இராச்சியங்கள் உட்பட ஆரம்பித்தன.
அதாவது அந்நியருடைய ஆதிக்கத்தால் இராச்சியங்கள் முதலில் போத்துக்கேயரிடமும் பின்னர் ஒல்லாந்தரிடமும் இறுதியில் ஆங்கிலேயரிடமும் வீழ்ந்தன. 1815ஆம் ஆண்டு ஆங்கிலேயர் முழு இராச்சியங்களையும் தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவந்தார்கள். அவ்வாறு கொண்டுவந்த பின்பு 1833ஆம் ஆண்டு ஒரு ஆட்சியின் கீழ் இலங்கையிலிருக்கின்ற அனைத்து இராச்சியங்களையும் கொண்டுவந்தார்கள்.
அவ்வாறு கொண்டுவந்ததன் பின்பு அவர்கள் 1947ஆம் ஆண்டு சோல்பரி யாப்பை உருவாக்கி 1948ஆம் ஆண்டு இந்த நாட்டிற்குச் சுதந்திரம் கொடுத்து, அதிகாரத்தில் சிங்களவர்களை இருக்கவைத்து அழகுபார்த்தார்கள். அதன் விளைவுதான், அன்று ஆங்கிலேயர் செய்த தவறான முடிவுதான் இன்று நாங்கள் 69 வருடங்களாகத் துன்பங்களை அனுபவித்துவருகின்றோம்.
ஆனால், அந்த சோல்பரி யாப்பில் 29ஆவது அத்தியாயத்தில் சிறுபான்மை மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துகின்ற வகையில் சட்டங்களை இயற்ற முடியாதென்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
அப்படியான வரைபு இருந்தும்கூட, அப்போது ஆண்ட தலைவர்கள் 1949ஆம் ஆண்டு மலையக மக்களுடைய வாக்குரிமையைப் பறித்தார்கள். 1956ஆம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டத்தைக் கொண்டுவந்தார்கள். அதன்பின்பு 1971ஆம் ஆண்டு பல்கலைக்கழக மாணவர்களுடைய அனுமதி தொடர்பான சட்டத்தைக் கொண்டுவந்தார்கள்.
ஏற்கனவே 1971 ஆம் ஆண்டுக்கு முன்பு இந்த நாட்டில் தகுதியுடையவர்கள் பல்கலைக்கழகம் செல்ல முடியும்.
அந்த நேரத்தில் அதிகளவான தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்ற காரணத்தினால், அப்போதிருந்த அரசு சட்ட வரைவு ஒன்றை வரைந்து, தரப்படுத்தல்மூலம் மாவட்ட ரீதியாகப் பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை உள்வாங்கினார்கள்.
இந்த நாட்டில் ஆளுகின்ற ஆட்சியாளர்கள் அதாவது சிங்களத் தலைவர்கள் எங்களுடைய மக்களைக் கல்வியின் மீதான அடக்குமுறையின்மூலம் அடக்கி ஆளுகின்ற ஒரு சூழ்நிலைக்குள் தள்ளிவிட்டார்கள் என்ற நோக்கத்தின் அடிப்படையில்தான் பல போராட்டங்கள் நடைபெற்றன.
இந்த 1971ஆம் ஆண்டுக்கு முன்பே அதாவது 1957ஆம் ஆண்டு அப்போதிருந்த பிரதமருக்கும் தந்தை செல்வநாயகம் அவர்களுக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. ஆனால் அது நடைமுறைக்கு வரவில்லை.
அதேபோன்று 1965 ஆம் ஆண்டும் அப்போதிருந்த பிரதமருக்கும் தந்தை செல்வநாயகத்திற்கும் இடையில் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. அந்த ஒப்பந்தமும் நடைமுறைக்கு வரவில்லை.
அந்த இரண்டு ஒப்பந்தங்களும் நடைமுறைக்கு வராததற்கு மிகப் பெரிய காரணமாக இருந்தது, அந்த நேரத்திலிருந்த ஆட்சியாளர்களுடைய ஆதிக்கம் என்றுதான் கூற முடியும். அந்த ஆட்சியாளர்களைக் கொண்டு வந்தவர்கள் பல பேர் அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதி வழங்கவில்லை என்ற காரணத்தினால், இவை எல்லாம் பேசும் பொருளாகவே போய்விட்டன.
அதற்குப் பிறகு 1972 ஆம் ஆண்டுஇ 1978 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் அந்தந்த அரசியல் யாப்புக்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்தாலும், தமிழ் மக்கள் தங்களுடைய பிரதேசங்களில் இறைமையாக வாழக்கூடிய விதத்தில் அந்த அரசியல் யாப்புக்கள் அமையவில்லை.
இதன் அடிப்படையில்தான் தந்தை செல்வநாயகம் அவர்கள் 'இந்த அரசாங்கங்களுடன் ஒப்பந்தங்கள் செய்வதில் பயனில்லை. தனிநாடு என்றவொரு கோட்பாட்டுக்குச் சென்றால் மட்டுமே தமிழர்கள் இன அடையாளத்துடன் வாழ முடியும்' என்ற ஒரு கோரிக்கையை முன்வைத்தார்.
அந்தக் கோரிக்கையின் அடிப்படையில், 1971 ஆம் ஆண்டுக்குப் பிறகு தகுதி இருந்தும் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி கிடைக்காத மாணவர்களின் சில ஆலோசனைகளுக்கு அமைவாகவும் மற்றும் தந்தை செல்வநாயகம் அவர்களுடைய கோட்பாட்டுக்கு அமைவாகவும், அண்ணன் பிரபாகரன் இந்த நாட்டில் தனிநாட்டுக் கோரிக்கையைப் பிரகடனப்படுத்தி, ஆயுதப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தார்.
அவர் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்ததற்கு அப்போதிருந்த ஆட்சியாளர்களின் சட்டங்களும் தமிழர்கள் மீதிருந்த அடக்குமுறையுமே காரணமாக இருந்தன.
தந்தை செல்வநாயகம் அவர்களால் செய்யப்பட்ட அப்போதைய ஒப்பந்தங்கள் நிறைவேறியிருந்தால், இலங்கையில் ஆயுதப் போராட்டம் ஒன்று ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருந்திருக்காது என்பது என்னுடைய கருத்து.
அந்த ஒப்பந்தங்கள் நிராகரிக்கப்பட்டதன் காரணத்தினால் மட்டும்தான் இந்த ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அந்த ஆயுதப் போராட்டமும் 2009 ஆம் ஆண்டு மே மாதம், 18 ஆம் திகதி சர்வதேசத்தின் உதவியுடன் அழிக்கப்பட்டுவிட்டது.
இப்படியான ஒரு சூழலில் கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08ஆம் திகதி இந்த நாட்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தோ்தலில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகத் தெரிவானார். அதன் பின்னர் புதிய அரசாங்கமொன்று உருவாக்கப்பட்டது.
இதற்கு இந்த நாட்டில் சிறுபான்மை மக்களாக இருக்கின்ற தமிழ், முஸ்லிம், மலையகத்தைச் சார்ந்த சகோதரர்கள் மற்றும் பெரும்பான்மைச் சிங்களவர்கள் என கிட்டத்தட்ட 63 இலட்சம் மக்கள் வாக்களித்தார்கள். அதன் பிரதான நோக்கம், இந்த நாட்டில் ஒரு நிரந்தர அரசியல் தீர்வொன்று வரவேண்டும் என்பதே. சகல மக்களும் இறைமையுடன் வாழக்கூடிய ஓர் அரசியல் யாப்பு வரைவு உருவாக்கப்படவேண்டும் என்ற நோக்கத்துக்காக மட்டுமே தமிழ் மக்கள் இவ்வாட்சி மாற்றத்துக்கு வாக்களித்தார்கள்.
ஆனால், இரண்டு வருடங்கள் கழிந்த நிலையில் தற்பொழுதுதான் அரசியலமைப்புச் சபையின் வழிப்படுத்தும் குழுவின் இடைக்கால அறிக்கையானது பல சிக்கல்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் இப்பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த இடைக்கால அறிக்கையானது ஒவ்வொரு கட்சியினதும் முன்மொழிவுகளை உள்ளடக்கி இருக்கின்றதே ஒழிய, புதிய அரசியல் யாப்பின் வரைவு என தெளிவாகக் குறிப்பிடவில்லை என்பதை நான் இந்த நேரத்தில் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.
ஏனென்று சொன்னால், கட்சிகளின் யோசனைகளைப் பெற்று, இந்த இடைக்கால அறிக்கையைத் தயாரித்துச் சமர்ப்பிப்பதற்கு இந்த அரசாங்கத்துக்கு இரண்டு வருடங்கள் தேவைப்பட்டிருக்கிறது. அதாவது, அரசாங்க மாற்றம் ஏற்பட்டு இரண்டு வருடங்களில்தான் இந்த இடைக்கால அறிக்கை வெளிவந்திருக்கிறது.
இந்த இரண்டு வருடங்களில் தமிழ் மக்களுடைய மனங்களை வெல்லக்கூடிய வகையில் இந்த அரசாங்கம் என்ன முயற்சிகளை எடுத்திருக்கின்றது? என நான் இந்த அரசாங்கத்தைக் கேட்க விரும்புகின்றேன். மிக முக்கியமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாகத் கூறி பல காலங்களாகியும் இன்னும் அச்சட்டத்தை நீக்காத இந்த அரசாங்கம்இ எப்படி எங்களுடைய மக்கள் இறைமையுடன் வாழக்கூடிய ஓர் அரசியல் யாப்பு வரைவை தனது ஆட்சிக் காலத்துக்குள் தரும் என்பதுதான் எங்களது மக்கள் மனதில் இருக்கின்ற சந்தேகம்.
ஆனால், இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து ஆட்சி புரிகின்ற இந்த நேரத்தில், இதற்குரிய இணக்கப்பாடுகளைக் காணவேண்டும் என்பதற்காக எங்களுடைய கட்சியின் தலைவர் ஆர். சம்பந்தன் ஐயா அவர்கள் பல விட்டுக்கொடுப்புகளுக்கு மத்தியில் தன்னாலான முழு ஒத்துழைப்பையும் வழங்கி வருகின்றார்.
நாங்களும் அவருக்கு ஒத்துழைப்புக் கொடுத்திருக்கின்றோம். தங்களது காலத்துக்குள் இந்த நாட்டில் தமிழர்கள் இறைமையுடன் வாழக்கூடிய அரசியல் யாப்பு வரைவொன்றை உருவாக்கித்தர வேண்டும்.
அதற்காக எங்களாலான ஒத்துழைப்பைத் தருவதாக நான் எங்களுடைய கட்சித் தலைவருக்குக் கூறியிருக்கிறேன். இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் நிமித்தம் சிறையில் இருக்கின்ற அரசியல் கைதிகள் மட்டுமல்ல, யுத்தத்தின் காரணமாக புலம்பெயர் நாடுகளில் வாழுகின்ற எங்களுடைய கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் மக்கள்கூட இந்த நாட்டுக்கு வரத் தயங்குகின்றார்கள்.
அவர்கள் இங்கு வந்து தங்களுடைய பிரதேசங்களில் முதலீடுகளைச் செய்வதற்கு ஆயத்தமாக இருக்கிறார்கள். ஆனால், ஒரு பொலிஸ் அதிகாரி சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்யமுடியும் என்ற சட்டம் இந்த நாட்டில் இருக்கும்போது, எப்படி அவர்கள் இங்கு வருவது? எப்படி அவர்கள் தங்களுடைய பிரதேசங்களில் முதலீடுகளைச் செய்து, எங்களுடைய மக்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது? என்று கேட்கிறார்கள்.
ஐ.நா. மனித உரிமைக்குக் கொடுத்த வாக்குறுதியை இன்றுவரையில் செயற்படுத்த முடியாத நிலையில் இருக்கின்ற இந்த அரசாங்கம் எமது தமிழ்மக்கள் ஜனநாயக வழியில் மேற்கொள்கின்ற போராட்டங்களை இன்று கொச்சைப்படுத்துகின்றது. எங்களுடைய மக்கள் ஜனநாயக வழியில் பல போராட்டங்களை முன்னெடுத்திருக்கின்றார்கள்.
அதற்கு இந்த அரசாங்கத்தினால் பல உறுதிமொழிகள் வழங்கப்பட்ட பொழுதிலும், அரசினால் வழங்கப்பட்ட காலம் காலாவதியாகியும் இன்றுவரையில் அந்த மக்கள் மேற்கொள்கின்ற ஜனநாயகவழிப் போராட்டங்களுக்கு ஒரு முடிவும் எட்டப்படாத நிலையில் கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்த மக்கள் அரசாங்கத்தின் மீதுள்ள நம்பிக்கையை இழந்துள்ள சூழ்நிலையில் இன்று இந்த அரசினால் இத்தகையதொரு இடைக்கால அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
முதலில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது தமிழ் மக்கள் யுத்தம் முடிவடைந்து கிட்டத்தட்ட 8 வருடங்களைக் கடந்துள்ள நிலையிலும், அம்மக்களின் மனங்களை வெல்லக்கூடிய வகையிலான முயற்சிகளை இந்த அரசாங்கம் எடுக்கவில்லை என்பதை நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
யுத்தத்தில் ஈடுபட்ட இளைஞர், யுவதிகளுக்குப் புனர்வாழ்வளித்தீர்கள். ஆனால், புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கு இந்த அரசாங்கம் என்ன முயற்சி எடுத்திருக்கிறது? எனக் கேட்கின்றேன்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர், யுவதிகள் தமது மனைவி, பிள்ளைகளுடன் ஜனநாயக வழியில் வாழக்கூடிய வகையில் அவர்களுக்கு வேலைவாய்பபுக்களை வழங்குமாறு நான் இதற்கு முன்னர் பலதடவைகள் இப்பாராளுமன்றத்தில் கேட்டிருக்கின்றேன். ஆனால், அதற்கு இந்த அரசாங்கம் எந்தவிதமான முயற்சியும் எடுக்கவில்லை.
வலுக்கட்டாயமாக காணாமற்போனவர்களுடைய உறவுகள் பலமாதங்களாக தமது பிரதேசங்களில் தொடர் கவனஈர்ப்புப் போராட்டங்களை நடாத்தி வருகின்றார்கள். அவர்களுக்கு இந்த அரசாங்கம் கூறுகின்ற பதில் என்ன? அவ்வாறு கவனஈர்ப்புப் போராட்டங்களை நடத்துபவர்களில் தங்களது கணவன், பிள்ளைகளை தாமாகவே முன்வந்து நேரடியாக இராணுவத்தினரிடம் ஒப்படைத்தவர்களும் இருக்கிறார்கள்.
அவ்வாறு ஒப்படைத்த பின்னர் அவர்களைச் சந்தித்தும் இருக்கிறார்கள். ஆனால் இன்று அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என யாருக்கும் தெரியாது. ஒருதடவை எமது பிரதமமந்திரி அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு வந்தபொழுது தமது உறவுகளை ஒப்படைத்தவர்கள் அவர்கள் தொடர்பாக வினவியபொழுது அவ்வாறு இங்கு ஒருவரும் இல்லை எனத் தெரிவித்திருக்கிறார்கள்.
எமது மக்கள் இடம் பெயர்ந்து வந்தவேளையில் ஓமந்தைச் சோதனைச் சாவடியில் உள்ள இராணுவத்தினர், விடுதலைப்புலிகளுக்கு ஒரு நாள் உதவி செய்தவர்களாக இருப்பினும் எங்களிடம் வந்து சரணடையுங்கள் என ஒலிபெருக்கி மூலம் அறிவித்துக்கொண்டிருந்தார்கள்.
அதன் அடிப்படையில் பல இளைஞர்கள், யுவதிகள், சில பெரியவர்கள் உட்பட இராணுவத்தினரிடம் சரணடைந்து தமது பதிவுகளை மேற்கொண்டார்கள். இன்று காணாமற் போனவர்களுடைய உறவினர்கள் மூன்று கோரிக்கைகளை எமது கட்சித் தலைவரிடம் முன்வைத்திருக்கிறார்கள்.
ஜனாதிபதி அவர்கள் ஏற்கெனவே அதற்குரிய உறுதிமொழியை வழங்கியிருந்தும் இன்றுவரையில் அதற்குரிய நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
எமது பிரதமர் அவர்கள் தம்மிடமுள்ள காணாமற்போனவர்களுடைய விபரங்களை அறிவிப்பேன் என்று தெரிவித்திருந்தார். ஆனால், இன்றுவரையில் அவ்வாறான விபரங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
காணாமற் போனவர்களுடைய உறவுகள் எமது கட்சியின் தலைவர் அவர்களிடம், காணாமற்போனவர்களுடைய பெயர்ப்பட்டியல் வெளியிடப்படவேண்டும் எனவும், தங்களுக்கு அமைக்கப்படுகின்ற அலுவலகம் வடக்கிலோ அல்லது கிழக்கிலோ சம வலுக்கொண்ட   அலுவலகமாக அமைக்கப்படவேண்டும் எனவும் மற்றும் அவ்வலுவலகத்தில் பணிபுரிபவர்கள் சுயாதீனமாகச் செயற்படக்கூடியவர்களாக இருக்கவேண்டும் எனவும் மேதகு ஜனாதிபதி அவர்களிடம் கோரியிருந்தார்கள்.
ஆனால், அதற்குப்பதில் எதுவும் வழங்கப்படவில்லை. ஒரு நாட்டில் ஓரினம் வாழமுடியாமல் அந்நிய நாட்டுக்குச் செல்வதென்பது அந்த நாட்டின் அரசாங்கத்திற்கு அவப்பெயரையே கொண்டுவரும்.
புலம்பெயர் நாடுகளில் இருக்கின்ற கிட்டத்தட்ட 20 மில்லியன் மக்களும் இந்த நாட்டுக்கு வந்து வாழ்வதற்கு ஆசைப்படுகின்ற வகையில் இந்த நாட்டில் அரசியல் யாப்பு மாற்றம் இடம்பெற வேண்டும்.

எங்களுடைய நாட்டுக்குச் சென்று எங்களால் வாழ முடியுமென்று அவர்கள் கூற வேண்டும். அதற்கேற்ற சூழ்நிலை இலங்கையில் உருவாகியிருக்கின்றதென்பதை அவர்கள் புரிந்துகொள்கின்ற அளவுக்கு இங்கு அரசியல் யாப்பு மாற்றங்களில் எங்களுடய தமிழ் மக்கள் இறைமையுடன் வாழ்வதற்குரிய வரைபுகளை மேற்கொள்ள வேண்டும்.அயல் நாடான இந்தியாவில் எங்களுடைய மக்களில் ஓரிலட்சம் போ் இருக்கின்றார்கள். அவர்கள் இங்கு வருவதற்கு அச்சப்படுகின்றார்கள். பயங்கரவாத தடைச் சட்டம் எப்போது நீங்கப்படும்? தாங்கள் வந்தால் கைது செய்யப்படுவோமா? என இப்படியாக பல வினாக்களை அவர்கள் எழுப்பியிருக்கிறார்கள். நான் இந்தியாவுக்குச் சென்று எங்களுடைய மக்களுடன் கதைத்தேன்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கச் சொல்லுங்கள் அப்போது அவர்கள் வருவார்கள். இந்த நாட்டில் பூர்வீகமாக இருக்கின்ற எங்களுடைய மக்கள் இறைமையின் அடிப்படையில் வாழக்கூடிய வகையில் புதிய அரசியல் யாப்பு இடம்பெற வேண்டும்.
அந்த வகையில், இந்தியாவில் இருக்கின்ற மக்கள் இங்கு வந்து வாழ்வதற்குரிய வழிவகைகளையும் இந்த அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்” என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
பிரபாகரன் ஆயுதம் ஏந்தி போராட இதுவே முக்கிய காரணம்: நாடாளுமன்றில் சாள்ஸ் Reviewed by Author on November 03, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.