அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன் கர்ப்பிணித்தாய்மார்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்-நிரந்தரமான மகப்பேற்று வைத்திய நிபுணரை நியமிக்க கோரிக்கை.(photos)



மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இன்று திங்கட்கிழமை காலை மாதாந்த பரிசோதனைக்குச் சென்ற கர்ப்பிணித்தாய்மார்கள் அங்கு மகப்பேற்று வைத்திய நிபுணர் இல்லாத காரணத்தினால் மீண்டும் ஒரு தினத்திற்கு வருமாறு திருப்பி அனுப்பப்பட்டமையினால் தாம் தொடர்ந்தும் திருப்பி அனுப்பப்படுவதினை  கண்டித்து நூற்றுக்கணக்கான கர்ப்பிணித்தாய்மார்கள் மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன் வீதியை மறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சுமார் 2 மணித்தியாளங்களுக்கு மேலாக குறித்த வீதியூடான போக்குவரத்துக்கள் பாதீப்படைந்திருந்தது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,

கர்ப்பிணித்தாய்மார்கள் வழமை போன்று இன்று திங்கட்கிழமை(8) காலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாதாந்த சிகிச்சைக்காக சென்றுள்ளனர்.

எனினும் கர்ப்பிணித்தாய்மர்களை பரிசோதிப்பதற்கான மகப்பேற்று வைத்திய நிபுணர் அங்கு இருக்கவில்லை.

குறித்த வைத்திய நிபுணர் விடுமுறையில் சென்றுள்ள நிலையில் பதில் கடமைக்கான மகப்பேற்று வைத்திய நிபுணர் நியமிக்கப்படவில்லை.

இந்த நிலையில் பரிசோதனைக்காக சென்ற கர்ப்பிணித்தாய்மர்கள் உரிய முறையில் பரிசோதனைகளுக்கு உற்படுத்தாத நிலையில் பிரிதொரு தினத்தில் மீண்டும் பரிசோதனைக்காக வருமாறு தெரிவித்திருந்தனர்.

இதனால் தலைமன்னார் முதல் மாவட்டத்தில் உள்ள தூர இடங்களில் இருந்து சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு பரிசோதனைக்கு வந்த நூற்றுக்கணக்கான கர்ப்பிணித்தாய்மார்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது.

வைத்தியசாலையில் தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்கள் இடம் பெற்று வருவதனை கண்டித்தும்,நிறந்தரமான ஒரு மகப்பேற்று வைத்திய நிபுணரை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு  நியமிக்கமாறும் கோரி நூற்றுக்கணக்கான கர்ப்பிணித்தாய்மார்கள் ஒன்றிணைந்து காலை 8.30 மணிமுதல் 11 மணிவரை  மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரதான வீதியை இடை மறித்து வீதிக்கு நடுவே அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் நீண்ட நேரம் போக்குவரத்துக்கள் பாதீக்கப்பட்டிருந்தது.
சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை வீதியில் இருந்து அகன்று செல்ல நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

எனினும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் உடன் படவில்லை.இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,மாகாண சபை உறுப்பினர் அலிக்கான் சரீப் மற்றும், உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

எனினும் வைத்திய சாலையின் உயர் அதிகாரிகள் வந்து தங்களுடன் பேச்சு நடத்தி உறுதி மொழி வழங்கினால் மாத்திரமே அவ்விடத்தை விட்டு செல்வோம் என தெரிவித்தனர்.

எனினும் ஆர்ப்பாட்டம்; இடம் பெற்றுக்கொண்டிருந்த போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வளாகத்தினுள் இருந்து கொண்டு வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் நீண்ட நேரமாக ஆர்ப்பாட்டத்தை பார்த்துக்கொண்டிருந்த போதும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கர்ப்பிணித்தாய்மார்களுடன் வந்து எவ்வித பேச்சு வார்த்தையிலும் ஈடுபடவில்லை.

இதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆத்திரமடைந்த நிலையில் கோசங்களை எழுப்பினர்.

இந்த நிலையில் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி யூட் ரதனி மற்றும் உதவி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் றோய் பீரிஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

உயர் அதிகாரிகளுடன் தொடர்பை ஏற்படுத்திய மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி யூட் ரதனி குறித்த பிரச்சினை தொடர்பில் தெரியப்படுத்தினார்.

-உயர் அதிகாரிகளின் கருத்துக்கு அமைவாக குறித்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வை பெற்று தருவதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி யூட் ரதனி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு உறுதிமொழி வழங்கினார்.

-உறுதிமொழியை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அங்கிருந்து சென்றனர்.

-குறித்த பிரச்சினை தொடர்பாக வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலனிடம் வினவிய போது,,,

-மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பரிசோதனைக்காக வரும் கர்ப்பிணித்தாய்மார்கள் இரண்டு முறைகளின் பரிசோதனைக்கு உற்படுத்தப்படுகின்றனர்.

-அதில் ஒரு தரப்பினரை மகப்பேற்று வைத்திய நிபுணரும், ஏனையோரை அங்குள்ள வைத்தியர்களும் பரிசோதனைகளை மேற்கொள்ளுவார்கள்.

-ஆனால் மகப்பேற்று வைத்திய நிபுணரின் பரிசோதனைக்குறிய கர்ப்பிணித்தாய்மார்கள் சுமார் 15 பேர் வரை காணப்பட்டனர்.
அதிகலவானவர்களை அங்குள்ள வைத்தியர்கள் பரிசோதிக்க வேண்டும்.

ஆனால் வைத்தியர்கள் பரிசோதிக்க வேண்டிய கர்ப்பிணித்தாய்மார்கள் பரிசோதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளமை தவறான நடவடிக்கை ஆகும்.
இவ்விடையம் தொடர்பில்   அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு முழு காரணமும் நிர்வாகத்தில் உள்ள சீரின்மையே.

எனவே வெகு விரைவில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை நிர்வாகத்தில்  அதிகலவான மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளேன். என அவர் தெரிவித்தார்.

 















மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன் கர்ப்பிணித்தாய்மார்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்-நிரந்தரமான மகப்பேற்று வைத்திய நிபுணரை நியமிக்க கோரிக்கை.(photos) Reviewed by Author on January 08, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.